Wonderful Shopping@Amazon

Monday 7 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-102

'ராஜபார்வை'(1981) -'61 Years of Kamalism' 

நூறாவது படம் நடிகர்களுக்குப் வெற்றிப் படங்களாக அமைந்தது இல்லை. வெகுஜன படங்களிலிருந்து விலகி கமல் புதிய விஷயங்களை பரிசார்த்த முறையில் செய்ய ஆரம்பித்த முதல் படம் 'ராஜபார்வை'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம். படம்  சுமாராக இருந்தாலும், ' அபூர்வ சகோதரர்கள்', 'குணா','குருதிப்புனல்', 'ஹே ராம்' போன்ற சிறந்த படங்கள் வர ஆரம்பப் புள்ளியாக இருந்தது 'ராஜபார்வை'. கமலின் சினிமா மொழியில் சொல்வதென்றால் ''எனக்கான உணவை நான் சமைத்துக்கொள்கிறேன் ..".

ஸ்ரீதேவிக்கு பிறகு கமல் - மாதவி ஜோடி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. எண்பதுகளின் கவர்ச்சி கன்னி மாதவி. மாதவி படம் அச்சிட்டு வந்த விமல் கம்பெனி காலண்டர் இன்னும் நினைவிருக்கிறது. மாதவியின்  கண்கள் அப்பப்பா...என்ன ஓர் பாவகங்கள். மாதவி என்று பெயருடையவர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பார்களோ ?

'ராஜபார்வை' என்றாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது 'பாடும் நிலா' மற்றும் ஜானகி அம்மாள் பாடிய, கவிஞர் வைரமுத்து எழுதிய  "அந்திமழை பொழிகிறது ..."  பாடல்.  

ராஜா சாரின் இசையை என்னவென்று சொல்வது ! எப்படி இந்த பாடலை உருவாக்கினார் ? வியப்பு மேலிடுகிறது. பருவ காலங்களுக்கேற்ப மாறி மாறி ஒலிக்கும் இசை, பாடல் இடை இடையே வரும் ராஜா சாரின் குரு திரு டி வி கோபாலகிருஷணன் அவர்களின் ஹம்மிங், வயலின், கோரஸ், முக்கியமாக  அந்த மிருதங்க ஆலாபனை எனக் கிட்டத்தட்ட ஒரு பியுசன் ஜுகள்பந்தி இசை இந்த பாடல். நிமிடத்தில் இசை மகாத்மியம்  நடத்தியிருப்பார் ராஜா.

எனக்குச் சங்கீதம் ஞானம் இல்லை. இரண்டு ராகங்களை இணைத்து உருவாக்கிய பாடல் என நண்பர் சொன்னார்.  நிச்சயம் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த இசை பல நாள் உங்கள் இதயத்தை ஆக்கிரமிக்கும் 

"நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்"

மேற்சொன்ன பாடல் வரிகளில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் வரும் குழைவு, பின் வரும் ஆலாபனை 'வாவ்' ராகம்.

எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளர் முகர்ஜியின் கேமரா ஜாலங்கள் மற்றும் கமல் மாதவி காதல்ரச காட்சிகள், 'ராஜபார்வை' படத்தை இன்றும் புதுத்தன்மை மாறாமல் காத்து வருகிறது.




நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



காளிகபாலி 
 

 

Friday 4 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் தொடர்.....100

'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' - ஒரு இனிய காலைப் பொழுதில் தோன்றியது இந்த தலைப்பு. அப்போது கூட இந்த தொடர் நூறு பகுதிகளைத் தொடும் என்று நினைக்கவில்லை.  நண்பர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்தைச் சொன்னார்கள். சிலர் சிறியதாக இருக்கிறதே என்றும், சிலர் சினிமா தவிர மற்ற விஷயங்களையும் எழுதலாமே என்று சொன்னார்கள்.  சினிமா,  திரை / இசை ஆளுமைகள், விளையாட்டு ஜாம்பவான்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி எழுதினேன்.  நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் செய்த சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இது முழுதும் இரண்டு நிமிடத்தில் படித்து முடிக்கவேண்டி எழுதியது. 'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' பகுதியில் என்னுடைய அனுபவங்களும்  / ஆதங்கங்களும் ஆங்காங்கே விரவியிருக்கும்.


எனக்கே சில பகுதிகள் பிடிக்கும் அவ்வப்போது நானும் படித்து மகிழ்வதுண்டு, ஒரு வாசகனாய்.

அவை:

நடிகர் திலகம் நடித்த 'தெய்வமகன்' பற்றியது......
https://kalikabali.blogspot.com/2019/10/25.html

கிரிக்கெட் ஜாம்பவான் திரு கபில்தேவ் செய்த ஆவணம் இல்லா சாதனை பற்றியது ....
 
'மாயாபஜார்' திரைப்படம், காலஞ்சென்ற குணச்சித்திர நடிகர் எஸ் வி ரங்காராவ் பற்றியது..
https://kalikabali.blogspot.com/2019/11/29.html

'சாந்தி நிலையம்' படத்தில் டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல் பற்றியது....
https://kalikabali.blogspot.com/2019/11/31.html

'சத்ரியன்' படத்தில் காலஞ்சென்ற பாடகி செல்வி.சுவர்ணலதா அவர்கள் பாடிய பாடலை பற்றியது...
https://kalikabali.blogspot.com/2019/09/15.html
 
கவிஞர் நா முத்துக்குமார் அவர்களின் வைர வரிகள் பற்றியது ............

நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்களைப் பற்றியது.....
 
"பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இடம்பெற்ற பாடலை பற்றியது......

பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ரமணி அம்மாள் பற்றியது.............
 
எண்பதுகளின் டிஸ்கோ இசை மற்றும் அதன் எழுச்சி பற்றியது .......

இது போல இன்னும் சில பகுதிகள் எனக்கு பிடிக்கும்.

மேலும், என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் கோடி............


நன்றி: Canva

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

Wednesday 2 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-101

ராமு (1966)

தாலாட்டு பாடல்கள் பல இருந்தாலும், பி சுசீலா அம்மா பாடிய இந்த பாடலை கேளுங்கள் பாடல் வரிகளை பின்தொடரும் இசை. இப்போது இது போன்ற பாடலை கேப்பது அரிதிலும் அரிது.

கூட்டு குடும்பமாக வாழ்ந்த எங்கள் பாட்டி வீட்டில் பழைய படங்கள் பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கும், எந்நேரம் விசிஆர் -இல் எதாவது ஒரு பழைய படம் ஓடிக்கொண்டே இருக்கும். தாத்தா எப்போதும் முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார். சில நாட்கள் கழித்து தாத்தா அதே படத்தை போட மாமாவை வற்புறுத்துவார். மாமாவும் பேசாமல் படம் போட்டுவிட்டு போவார். அப்படி சிறுவர்களான நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதிகபட்சம் பார்த்த படம் 'ராமு', போலவே "
பச்சை மரம் ஒன்று .." மற்றும் "கண்ணன் வந்தான் ..." பாடல்களும் கேட்டு கேட்டு மனதில் பதிந்த ஒன்று. இது போதாதென்று மாநில மொழி திரைப்பட வரிசையில் இந்த படத்தை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். அதையும் ஒரு முறை பார்ப்பார்கள்.

ஹிந்தி படத்தின் கதையை தழுவி திரு ஜாவர் சீதாராமன் திரைக்கதையில், இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 'ராமு'. 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் கேட்டு வாங்கி நடித்ததாக ஒரு செய்தி உண்டு. விச்சு டார்லிங் இசையமைத்த
ஐந்து பாடல்களும் முத்தனாவை. இப்போதும் கேட்க கூடியவை. இந்த படத்தில் ஒரு நாயை  நன்றாக பழக்கி 'மணி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார்கள்.  சரி வாங்க அந்த பாடலை கேட்போம்:
 
 
 
 
 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 




Tuesday 1 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-100

ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் 

பாராலிம்பிக்ஸ் அல்லது ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் திரு முர்லிகாந்த் பெட்கரைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இல்லை என நான் நினைக்கிறேன்.

1972-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் நடந்த கோடைக்கால பாராலிம்பிக்கில் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பெட்கர் வெற்றி பெற்றார், 37.33 வினாடிகளில் உலக சாதனை படைத்தார். அவர் ஈட்டி போன்ற பிற நிகழ்வுகளிலும் பங்கேற்று இறுதிச் சுற்றை எட்டினார்.

இந்திய இராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த திரு பெட்கர் 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கடுமையான புல்லட் காயங்களைத் தாங்கி நிரந்தர குறைபாடுகள் ஏற்படுவதற்கு முன்பு குத்துச்சண்டை வீரராக இருந்தார். கடந்த ஆண்டு, அவரது சாதனைகளுக்காக அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி