Wonderful Shopping@Amazon

Tuesday 26 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-114

உதயகிரி சுவாமி நாயக் -சென்னையில் தடுப்பூசிகளை பிரபலப்படுத்திய மறக்கப்பட்ட கதாநாயகன்.



சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் மற்றும் ஹாரிஸ் (இப்போது ஆதித்தனார் சாலை) சாலைகளின் சந்திப்பில், ஒரு சிறிய பச்சை தூண் உள்ளது. கட்டமைப்பின் நடுவில் ஒரு பதக்கம் 19-ஆம் நூற்றாண்டு தோற்றமுடைய ஒரு மனிதனைக் கொண்டுள்ளது. இது டாக்டர் உதயகிரி சிங்கடிவாக்கம் சாமி நாயக் அல்லது டபிள்யூஎஸ் சுவாமி நாயக்கின் நினைவுச்சின்னம், பிந்தியது அரசாங்க பதிவுகளில் தோன்றும் பெயர்.

1760-களில் கோமலீஸ்வரன்பேட்டை அப்போதைய நாகரீகமான மாவட்டமான கூவம் ஆற்றின் குறுக்கே மெட்ராஸில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த சுவாமி நாயக் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ சேவையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி, நற்பெயரைச் சம்பாதித்தார். 

எட்வர்ட் லார்ட் க்ளைவ் II 1803-இல் சுவாமி நாயக்கை தடுப்பூசி கண்காணிப்பாளராக 25 பகோடா சம்பளத்தில் நியமித்தார். உலகம் முழுவதும் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் புதிய நடைமுறை அப்போது உருவாகியிருந்தது. மேலும் உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் சுவாமி நாயக் முனைப்பாக செயல்பட்டார்.  உள்ளூர் மக்களுக்கு அவருடைய முனைப்பு பெரும் சந்தேகத்தை உருவாக்கியது. 

சென்னையில் குடியிருந்த ஆர்மீனியர்களின் குழு ஜார்ஜ் டவுனில் அவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியது,  ஆனாலும் சுவாமி நாயக் அசரவில்லை பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் 1829 இல் தடுப்பூசித் துறையில் தலைமை மருத்துவ பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பின்னர், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தின் திவான் ஆனார். சென்னை நகரத்தில் பாயும் கூவம் நதிக் கரையோரத்தில் இடம் வாங்கி, எண்  25 பக்கோடா தெருவில் (பின்னர் ஹாரிஸ் சாலை) வசித்து வந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர், எண் 26 இல், வசித்த பணக்கார துபாஷ், பச்சையப்பா முதலியார்,  மெட்ராஸ் பிரசிடென்சியில் பல கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவர் ஆவார். சுவாமி நாயக் 1841-இல் மறைந்தார். ஹாரிஸ் சாலையிலிருக்கும் சுவாமி நாயக் தெரு அவரை இன்றும் நினைவுகூர்கிறது.

அவரது பேரன் டபிள்யூஎஸ் வெங்கடராமஞ்சுலு நாயுடு மாநகராட்சி ஆணையராக இருந்தார். அவர் நீதிக்கட்சி மற்றும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் முக்கிய பதவி வகித்தார். வெங்கடரமஞ்சுலு நாயுடுவின் பேரன், டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்  நீதிபதியாக 1949 முதல் 1956 வரை பணியாற்றினார். கிருஷ்ணசாமி நாயுடு இந்த நகரத்தின் பாரம்பரியத்தைப் போற்றினர். அவர் மெட்ராஸ் வரலாறு, நகரம் பற்றிய உண்மைகள் மற்றும் கடந்து சென்ற வாழ்க்கை முறை குறித்த வானொலி உரைகளை வழங்கினார், இறுதியாக அவற்றைத் தொகுத்து  "என் நினைவுகள்" (1977), என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். 

டபிள்யூஎஸ் வெங்கடராமஞ்சுலு நாயுடு, லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்கினார், இதன் மீது டாக்டர் சுவாமி நாயக் பூங்கா ஒரு நீரூற்றுடன் உருவாக்கி, பல ஆண்டுகளாக குடிசை பகுதிகளுக்கு ஒரே நீராதாரமாக இருந்தது.  1963 ஆம் ஆண்டில், நீதிபதி டபிள்யூஎஸ் கிருஷ்ணசாமி நாயுடு சுவாமி நாயக்கிற்குத் தூண் வைத்தார், இதை அப்போதைய இந்தியாவின் துணை ஜனாதிபதி விவி கிரி திறந்து வைத்தார்.

நாயுடு குடும்பத்தின் எட்டு தலைமுறைகளுக்கு மேல் சுவாமி நாயக் வாங்கிய நிலத்தில் தொடர்ந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. 


நன்றி: https://www.thehindu.com/ 

தமிழில்: காளிகபாலி    
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-113

இந்தியாவில் தடுப்பூசிகளை பிரபலப்படுத்திய மறக்கப்பட்ட கதாநாயகர்கள்

Haffkine in treating patients in Bengal. Source: Wikipedia (L)History of Medicine Section of Royal Academy of Medicine of Ireland/Facebook (R)
1896-ஆம் ஆண்டில், இந்த சுதந்திர போராளி தடுப்பூசிகளைப் பிரபலப்படுத்துவதற்காகத் தனது குழந்தையின் வாழ்க்கையைப் பணயம் வைத்தார். யார் அவர் ? மேலும் படியுங்கள்.

இந்த பயமுறுத்தும் Covid-19 காலங்களில், தொற்றுநோய்களை வெல்ல முடியும் என்பதை நிரூபித்த இந்த மறக்கப்பட்ட கதாநாயகர்களின் முயற்சிகளை நாம் நினைவில் கொள்வோம்.
 
கோவிட் -19 போன்ற தொற்றுநோய் அரிதாக இருந்தாலும், சரியாக 125 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் (இப்போது மும்பை) "புபோனிக் பிளேக்" நோய் பரவல் லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியது.

மருத்துவ சுகாதார பணியாளர்கள் மற்றும் பல நல்ல மனிதர்களின் இடைவிடாத முயற்சிகளினால், "புபோனிக் பிளேக்" நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நாயகர்களின் மகத்தான பங்களிப்பு வரலாற்றின் பெயர்களில் காணாமல் போனாலும், நாட்டு மக்கள் உயிர்வாழ அவர்களின் பணி உதவியது.

இருப்பினும், இந்த "புபோனிக் பிளேக்" நோயை எதிர்த்துப் போராடிய மூன்று முக்கிய நபர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அதில், முதலாவர் சாயாஜிராவ் கெய்க்வாட் III - அப்போதைய பரோடா மகாராஜா, இரண்டாமவர், உக்ரேனிய பாக்டீரியாலஜிஸ்ட் டாக்டர் வால்டெமர் ஹாஃப்கைன் மற்றும் மூன்றாமவர் சுதந்திரப் போராட்ட வீரர் அப்பாஸ் தியாப்ஜி ஆகியோர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1896 -ஆம் ஆண்டு கோடையில், "புபோனிக் பிளேக்" நோய்த் தொற்று கடல் மார்க்கமாக வரும் அயல்நாட்டு வர்த்தக பயணிகளிடமிருந்து, பெரிய மக்கள் தொகை கொண்ட பம்பாய்க்குள் பரவியது.

COVID-19 சூழ்நிலையைப் போலவே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு மலேரியா காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள், நிணநீர் கணுக்கள், அக்குள் மற்றும் இடுப்பு பகுதி வீக்கம், போன்ற பிற அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். இந்த நோயால், பாதிக்கப்பட்ட நபர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இறக்க நேரிடும். இறப்பு விகிதம் அப்போது 60%வரை அதிகமாக இருந்தது.

அப்போதைய  காலணி அரசாங்கம் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர் மான்சர்  மற்றும் பாக்டீரியாலஜிஸ்ட் ஈஎன் ஹான்கின் ஆகியோர் கொண்ட பிளேக் ஆராய்ச்சி குழுவை அமைத்தது. இந்த குழு கல்கத்தாவிலிருந்து பம்பாய்க்கு, திரு ஹாஃப்கைன் அவர்களை ஆராய்ச்சிக்கு வரவழைத்து, பரேல் பகுதியில் ஒரு ஆய்வகத்தை நிறுவி, இயக்குநராக நியமித்தது.

நோய் பரவ காரணமான பாதிக்கப்பட்ட எலிகளிலிருந்து பாக்டீரியாவைப் பிரித்தெடுத்த பிறகு, தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தூய நெய்யின் கீழ் இறைச்சி குழம்பை வெற்றிகரமாக வளர்த்தார். Haffkine stalactites எனப்படும் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட பாக்டீரியாக்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு வளர அனுமதிக்கப்பட்டன, இறுதியில் வெப்பத்தால் பலவீனமடைகின்றன.  பலவீனமான பாக்டீரியா தொற்று இல்லாத மனித உடலில் செலுத்தப்பட்டவுடன், ஆன்டிபாடிகள் அவற்றைத் திறம்பட எதிர்த்துப் போராட முடியும்.

ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்த அவரது பணி தொடர்ந்து பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு. இறுதியாக, ஹாஃப்கைன் தான் கண்டுபிடித்த தடுப்பு தடுப்பூசியைத் தன்னார்வலர்களுக்கும் பிறகு பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்தார்.  நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் இந்த தடுப்பூசி உடலில் செலுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது.

அப்போது பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், சோதனை செய்யத் தன்னார்வலர்களைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது.  ஹாஃப்கைன் முதலில் தன்னையும் பிறகு முன்வந்த தன்னார்வலர்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்.

ஒரு வருடத்தில், பம்பாயில் பரவிய பிளேக் நோய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியது, பரோடாவும் அதில் ஒன்றாகும். 
 
காலரா மற்றும் பிளேக்கிற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்த ஹாஃப்கைன் பற்றிய செய்திகள், மகாராஜா சாயாஜிராவ் III  அவர்களுக்குத் தெரியவந்தது. தடுப்பூசி போடுவதற்கு பரோடாவுக்கு வரும்படி அழைத்தார். 1897 இல் பரோடாவுக்கு பயணமானார் ஹாஃப்கைன்.

அந்த நேரத்தில், சமூகத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க, பரோடா மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும், மகாராஜா மற்றும் மகாத்மா காந்தியின் நண்பராகவும் இருந்த அப்பாஸ் தியாப்ஜி, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி போட முன்வந்தார். முதலில் தியாப்ஜியின் மகள் ஷெரீபா, தடுப்பூசி போட்டுக்கொண்டார். 1935-இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார்.

இது அடுத்த பெரிய மாற்றத்தின் சிறிய ஆரம்பம், தன்னார்வலர்களின் உதவியைத் தொடர்ந்து, ஹாஃப்கைன், பிளேக் நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட  பரோடாவின் உட்புறப் பகுதிகளுக்குச் சென்றார்.

"1,031 பேர் உள்ள கிராமத்தில், பாதி உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் மற்றும் ஒரு பாதிப் பேர் கட்டுப்பாட்டுக் குழுவாகச் செயல்பட்டனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஹாஃப்கைன் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பி, தடுப்பூசி போட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தெளிவாக, தடுப்பூசி கணிசமாக நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குவதைக் கண்டறிந்தார்.
 
ஹாஃப்கைன் மற்றும் தியாப்ஜி மற்றும் சயாஜிராவ் III போன்றவர்கள் இல்லையென்றால், பிளேக் தொற்றுநோய் இன்னும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றிருக்கும்.  இறுதியில் வெற்றிகரமாகப் பிளேக்கின் இறப்பு விகிதத்தை 97.4% கட்டுப்படுத்தப்பட்டது. . கோவிட் -19 க்கான தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில். ஒரு நூற்றாண்டுக்கு  முன் பங்களித்தவர்களின் முயற்சிகளை நினைவு கூர்வது காலத்தின் கட்டாயம்.

 

நன்றி: https://www.thebetterindia.com/  (Edited by Gayatri Mishra)

தமிழில்: காளிகபாலி   

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

Thursday 14 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-112

ஸ்ரீகாந்த் (1945-2021)

A Tribute to Legendary Actor Late Mr Srikanth

"எல்லா தரப்பு நண்பர்களையும் கொண்ட ஒரு நல்ல மனிதர்" - சித்ராலயா கோபு.


ஸ்ரீ
காந்த் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார்.
 நாடகத்தின்  மீதுள்ள ஈர்ப்பால் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் மற்றும் கே பாலச்சந்தர் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேடை நாடகங்களில் நடித்தார். இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய சூப்பர்ஹிட் படமான "வெண்ணிற ஆடை" (1965) படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதாவுடன் அறிமுகமானார்.

கோபு இயக்கிய "காசே தான் கடவுலடா",  இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய "பாமா விஜயம்", "பூவா தலையா" மற்றும் "எதிர்நீச்சல்" போன்ற  கிளாசிக் படங்களில் மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்தார்.

அவர் நான்கு தசாப்தங்களாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக சுமார் 50 படங்களில் நடித்தார், பின்னர் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். எதிர்மறை வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்தார். எந்த கதாபாத்திரமும், அது வில்லன் அல்லது நகைச்சுவை வேடமாக இருந்தாலும், சரி, அவர் தனது சிறந்ததைக் அளித்தார். ஸ்ரீகாந்தின் நடிப்பு நடிகர் திலகத்தைக் கவர்ந்ததால், தனது திரைப்படங்களில் அவருக்கு முக்கிய வேடத்தை கொடுப்பார். ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் ஆர் முத்துராமன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுக்கு ஸ்ரீகாந்த் சமகாலத்தவராக இருந்தாலும், அவருடைய தனித்துவமான வசன உச்சரிப்பு, உரையாடல் என தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிவாஜி கணேசன், ரவிச்சந்திரன், ஆர்.முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்தார். இருப்பினும், அவர் எம்ஜிஆருடன் நடிக்கவில்லை.

கதாநாயகனாக ரஜினிகாந்தின் முதல் படமாகக் கருதப்படும் பைரவியில் அவர் ஒரு முழு நீள வில்லன் வேடத்தில் நடித்தார்.

ஜெயகாந்தனுக்கு ஸ்ரீகாந்த் நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடைய நாவலான "சில நேரங்களில் சில மனிதர்கள்", 1977-ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் அதே பெயரில் படமாக வெளிவந்தது. ஸ்ரீகாந்த், நடிகை லட்சுமியுடன் இணைந்து நடித்தார். இருவரின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டன. நடிகை லட்சுமி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
 
ஸ்ரீகாந்த் நடிப்பில் எனக்குப் பிடித்த படம் "அன்னப்பறவை". யூடியுப்-இல் காணக்கிடைக்கிறது. நேரமிருந்தால் ஒருமுறை கண்டுகளியுங்கள்.

நன்றி: Google, YouTube and Times of India

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-111

நெடுமுடி வேணு (1948-2021):

A Tribute to Legendary Actor Late Mr Nedumudi Venu


லையாள திரையுலகில் சிறந்த நடிகர்களில் நெடுமுடி வேணுவும் ஒருவர். அவர் ஒரு முன்னாள் பத்திரிகையாளர், நெடுமுடி வேணு, சிறு வயதிலிருந்தே இசை மற்றும் நாடகத்தின் மீது தீராக் காதல் கொண்டிருந்தார். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நாடகங்களில் பங்கெடுத்து நடித்தார். பின்பு, மறைந்த மலையாள நாடக ஆசான் 'கவலம்' நாராயண பணிக்கரின் பயிற்சியின் கீழ் நடிப்பு, பாடுதல், நடனம் மற்றும் இசைக்கருவிகளை வாசித்தல் ஆகிய பன்முக திறமைகளை வளர்த்துக்கொண்டார்.


பழம்பெரும் இயக்குநர் அரவிந்தன் இயக்கிய நாடகமான 'அவனவன் கடம்பா', வேணுவுக்கு மலையாள திரைத்துறையின் கதவைத் திறந்து வைத்தது.

1978-இல் அரவிந்தன் இயக்கிய 'தம்பு' படத்தின் மூலம் மலையாள திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அண்ணனுக்கு ஏறுமுகம் தான. 
கதாநாயகன் முதல் வில்லன் வரை, நெடுமுடி வேணு நான்கு தசாப்தங்களுக்கு மேலாகத் தனது திரை வாழ்க்கையில் வித விதமான கதாபாத்திரங்களில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இரண்டு தேசிய விருதுகளையும் மற்றும் அரை டஜன் மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

நெடுமுடி வேணு . இயக்குநர்கள் ஜி அரவிந்தன், பரதன், பி பத்மராஜன், ஃபாசில், பிரியதர்ஷன், ப்ளெஸ்ஸி மற்றும் லால் ஜோஸ் போன்றோருடன் பணியாற்றியுள்ளார்.  ‘பூச்சக்கொரு மூக்குத்தி’, ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, ‘மார்கம்’, ‘சாமரம்’, ‘ஒரு மின்னாமினுங்கிண்டே நூருங்குவட்டம்’, ‘தென்மவின் கொம்பத்’ மற்றும் ‘பாரதம்’ ஆகியவை அவரது பிரபலமான படங்களில் சில. 'தகரா'வில் அவரது செல்லப்பனசாரி வேடம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  நெடுமுடி வேணு 'சௌரஹேன்' என்ற ஆங்கிலப் படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். "பூரம்" (1989) என்ற ஒரே படத்தை இயக்கியிருக்கிறார்.

சகா கால நடிகர்களான பரத் கோபி மற்றும் திலகன் போன்ற நடிப்பு ராட்சஷன்கள் உடன் நடித்து வேணு தன்னை ஒரு தேர்ந்த நடிகராக மெருகூட்டிக் கொண்டார். "மறுமுனையில் உள்ள நடிகர் அவர்களின் திறமைகளைப் பெரிதாக்க முனையும் போது, உங்களை உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறினார்.

இலக்கியத்தின் தீவிர வாசகரான வேணு அதை திரைத்துறையில் அல்லது நாடகத்தில் தனது கதாபாத்திரங்கள் மூலம் கச்சிதமாகப் பயன்படுத்தினார். எப்போதும் சர்ச்சைகளிலிருந்து விலகி இருக்கவே விரும்புவார். அவர், ஒரு ஜென்டில்மேன் நடிகர் என்ற பிம்பத்தை பராமரித்தார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் இளைய தலைமுறை இயக்குநர்கள் மத்தியில் தொழிலில் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

கடைசியாக நெடுமுடி வேணு  ‘ஆணும் பெண்ணும்’. மற்றும்  கதாசிரியர் உன்னி ஆர் எழுதி, ஆஷிக் அபு இயக்கிய ‘ராணி’ எனும் ஆந்தாலஜி  படத்தில் கவியூர் பொன்னம்மா ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் சிபி மலையில் இயக்கத்தில் 'தசரதம்' இரண்டாம் பாகத்தின் நடிக்க எண்ணியிருந்தார். அதற்குள் காலன் தனது கணக்கை முடித்துக்கொண்டது.

எனக்கு வேணு, இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் "மோகமுள்" படத்தில் அவர் ஏற்று நடித்த "இசை குரு" கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். தாள, லய பாவனைகளைத் தனது நடிப்பில் பிரதிபலித்திருப்பார். "கமலம் பாதம் கமலம்.." பாடல் இரண்டாவது சரணத்தில், கதாநாயகன் பாடுகையில், இவர் ஒரு பார்வை பார்ப்பார். அடுத்த காட்சியில் கதாநாயகனைத் தனது சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்வார். இதோ அந்த பாடலை முழுமையாக கேளுங்கள்.


நன்றி: Google, YouTube and Times of India

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 


Tuesday 12 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-110

பாடகி திருமதி வாணி ஜெயராம்


பாடகி திருமதி வாணி ஜெயராம் அம்மா - இந்தியத் திரையிசையில் மதிப்பு ஆளுமை. ஆனாலும் அப்படி திரையிசை என்று சுறுக்கிவிடவும் முடியாது. எண்ணற்ற பக்தி இசை களஞ்சியங்களைப் பாடி ரசிகர்களைப் பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தவர். அதிகபட்சம் ஒன்பது இந்திய மொழிகளில் பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்தவர். வாணி அம்மா பாடிய எத்தனையோ பாடல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. இன்று இவர் போலத் தெளிவான மொழி உச்சரிப்பில், உச்சஸ்தாபியில் பாடும் தனித் தன்மை வாய்ந்த குரலுடைய பாடகிகள் உண்டா தெரியவில்லை. இவருடைய சிறப்பே பாடலுக்கு மெருகூட்டும் ஆலாபனை தான் என்பேன். அதற்கு எத்தகைய கர்நாடக சங்கீத பயிற்சியை விடாமல் மேற்கொண்டிருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

எண்பதுகளில் கல்யாண வீடுகளில் குழாய் ஒலிபெருக்கி பொருத்தி தெருவையே அலறவிடுவார்கள். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் ராஜா சார் இசையில்  "நீ கேட்டல் நான் மாட்டேன் என்றா  " என்ற வாணி ஜெயராம் ஹை-பிட்சில் பாடத் தொடங்கும் பாடலை கேட்கவே ரம்மியமாக இருக்கும். அப்போது தான் வாணி ஜெயராம் பாடல் எனக்கு அறிமுகமானது.

வாணி அம்மாவின் சில பாடல்களைக் கேட்கும்போது கஸல் பாடலை கேட்பது போல தோன்றும்.பங்கஜ் யூதாஸ், ஹரிஹரன் கஸல் பாடல்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் தமிழில் வாணி ஜெயராம் பாடிய "யாரது சொல்லாமல்" , "மேகமே மேகமே" போன்ற சில பாடல்களைக் கேட்கும்பொழுது கஸல் பாடல்கள் கேட்பது போலவே இருக்கும்.

அவ்வளவு மென்மையாக மனதை வருடும் பாடல்கள் என்னுடைய playlist-இல் உள்ளது.  அதில் முதலிடத்தில் என்னுடைய விருப்ப பாடல்.  கவிஞர் வாலி எழுதி, சங்கர் கணேஷ் இசையில் "நெஞ்சமெல்லாம் நீயே" படத்தில் இடம்பெற்ற "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி" என்ற பாடல். இந்த பாடலை எப்படிக் கேட்கவேண்டும் தெரியுமா? மழைக் காலத்தில், பகல் பொழுதில், சிறந்த தலையணியுடன் கேட்டுப்பாருங்கள் ...அந்த ஆலாபனை தான் என்ன ...ப்பா .என்ன ஒரு பாடல்.

சில பாடல்களைக் கேட்கும்போது பழைய காலத்துக்குப் பின்னோக்கி நேர இயந்திரத்தில்  பயணிப்பது போல் உள்ளது. வாணி ஜெயராம் பாடிய எனக்குப் பிடித்த சில பாடல்கள் "மல்லிகை உன்", "என் கல்யாண ", " நீ கேட்டால் நான் "
"யாரது சொல்லாமல்" , " மேகமே மேகமே ", "ஏழு ஸ்வரங்களில் எதனை", இன்னும், இன்னும் எத்தனையோ பாடல்கள்.

என் அம்மாவுக்கு வாணி ஜெயராமன் அவர்கள் பக்தி பாடல்கள் நிரம்பப் பிடிக்கும். விசேஷ நாட்களில் டேப் ரிக்கார்டரில் வாணி ஜெயராம் பாடிய பக்தி பாடல்கள் கேசட் போட்டு ஒலிக்கவிடுவார்.
 
இதோ இந்த இனிய பாடலை கேட்டு மகிழுங்கள் :
 


நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 
 

Sunday 10 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-109

தேசிங்கு ராஜேந்தர்

தேசிங்கு ராஜேந்தர் என்கிற அஷ்டாவதானி டி ராஜேந்தர். தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஆளுமை. மயிலாடுதுறை தந்த மாமணி. விவிதபாரதி வர்த்தக ஒளிபரப்பு வானொலி நிகழ்ச்சியில் அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன். அனேமாக இவர் தான் வானொலியில் பேசிய முதல் நடிகர் என்று நினைக்கிறன். என் மாமா இவருடைய தீவிர ரசிகர், அதாவது, அவர் ஆரம்பித்த கட்சியில் சேருமளவுக்கு. "மைதிலி என்னை காதலி" படம் வந்த புதிதில், அதன் பாடல்கள் அடங்கிய காஸெட் தேயும் வரை கேட்டு ரசித்தவர். "ஒரு தாயின் சபதம்" படம் வெளியான அன்று தொடர்ந்து மூன்று காட்சிகள் பார்த்தவர். டி ராஜேந்தர் நடித்த எல்லா படங்களையும் வரிசையாக மனப்பாடம் செய்து வைத்திருப்பார்.

இயக்குனர் விசு படங்களுக்கு பிறகு பெண்களை அதிகளவில் திரையரங்கை நோக்கி படையெடுத்தது டிஆர் படங்களை பார்க்க தான்.

1987-ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று வெளியான "ஒரு தாயின் சபதம்" சென்சேஷனல் ஹிட்.  மாமாவுடன் சென்று திரையரங்கில் நான் பார்த்த முதல்
டிஆர் படம். அதிகப் படங்களில் நடித்து பேர் வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்று இன்றுள்ள நடிகர்கள் போலில்லை, வருஷம் ஒன்றிண்டு படம். படம் /பாடல்கள் அமோக வெற்றி அவ்வளவு தான் இது தான்  டிஆர் கொள்கை. 

அவருடைய இயல்பான நடிப்பை மறைந்த இயக்குனர் கே வி அனந்த இயக்கிய "கவண்" படத்தில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனக்கென்னவோ டி ராஜேந்தர் வெளிப்படங்களில் அதிகம் நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மேலும், இசை அவருக்கு வசப்பட்ட விஷயம், ஒரு வேளை அதில் மட்டுமே இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ரசிகர்களுக்கு அதிக பாடல்கள் கிடைத்திருக்கும். அவருக்கு எல்லாத் துறைகளிலும் வல்லவர் என்று பெயரெடுக்க ஆசை போலும்.

அரசியலிலும் ஒரு கை பார்த்தவர் தான் நம்ம டிஆர்.  சென்னை பூங்கா நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று பாரிமுனை பேருந்து நிலையத்தை சீரமைத்து அவருடைய சாதனைகளில் ஒன்று.

அவர் எடுத்த படங்களை பற்றி பேசுவதை காட்டிலும், படத்தில் இடம்பெற்ற பிரமாண்ட அரங்கமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தும். "ஒரு தாயின் சபதம்" படத்தில் இடம்பெறும் அந்த கோவில் அரங்கம். என்ன பாட்டென்று தெரியவில்லை இரண்டு வளையல் கைகள் அதன் மீது நாயகன் நாயகி பாடி ஆடுவார்கள்.

டிஆர் தன்னுடன் நடிக்கும் சக குணச்சித்திர நடிகர் /நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பார். இது இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் பாணி.

டிஆர் அவர்கள் எண்பதுகளின் கடைசியில் மிகுந்த பொருட்செலவில், பிரமாண்டமாக "வில்-பவர்" என்ற பெயரில் ஆங்கிலம் அல்லது பான் இந்திய மொழிகளில் படம் எடுக்கப் பூர்வாங்க வேலைகளைத் தொடங்கினார், அதன் பிறகு அதைக் கிடப்பில் போட்டுவிட்டார் என்று "தினத்தந்தி" செய்தித்தாளில் படித்ததாக ஞாபகம்.

டிஆர் இசையமைத்த  எத்தனையோ சிறந்த பாடல்களில் இரண்டு பாடல்கள் எனக்கு பிடிக்கும் ஒன்று : "சலங்கை இட்டால் ஒரு மாது..."(படம் :மைதிலி என்னை காதலி)..", இரண்டு : "கூடையிலே கருவாடு.." (படம்: ஒரு தலை ராகம்).



நன்றி: Google & YouTube

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி


Saturday 9 October 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-108

அரவிந்த் திரிவேதி (1966-2021)

A Tribute to Late "Ravan"Arvind Trivedi



ராமானந்த சாகர் இயக்கி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "இராமாயண" காப்பிய தொடரை இளம்பிராயத்தில் தவறவிடாமல் பார்ப்பதுண்டு. அப்போது எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்கவில்லை. என் வயது பிள்ளைகளுடன் பக்கத்துக்கு வீட்டில் பார்ப்போம் . மறுநாள் பள்ளி வகுப்பில் இராமாயண தொடரில் இடம்பெற்ற மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகளைப் பற்றி நண்பர்கள் நாங்கள் பேசிக்கொள்வோம்.

அதுவரை பெரியவர்கள் சொல்லக் கேட்டு, புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொண்ட எங்கள் தலைமுறையினருக்கு இராமாயண காப்பியம் நெடுந்தொடராக விசுவலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் கற்பனைக்கு அது மேலும் வலுசேர்த்து.

தேர்ந்த நடிகர்கள், கிடைத்த தொழிற்நுப்பட்டதை வைத்து மாயாஜால-மந்திர-தந்திர காட்சிகள் எடுக்கப்பட்டது. மொழி /நேட்டிவிட்டி பிரச்சனை இல்லாமல் எல்லோருக்கும் எளிதில் புரிந்தது.

இராமனாக அருண் கோவல், சீதையாக தீபிகா மற்றும் லட்சுமணனாக சுனில் லஹரி ஆகியோர் நடித்திருந்தாலும் இந்தியத் தொலைக்காட்சியில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றான ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி அவர்களை மறக்க முடியாது. என்ன ஒரு கம்பீரம், தோற்றப்பொலிவு. இராவணன் கதாபாத்திரத்துக்குக்காகவே பிறந்தவர் எனலாம்.

திரிவேதி குஜராத்தி நாடகத் துறை மற்றும் குஜராத்தி திரைத்துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கோலோச்சியவர். 'தேஷ் ரே ஜோயா தாதா பரதேஷ் ஜோயா' என்ற இவர் நடித்த குஜராத்தி திரைப்படம் அதிக வசூல் செய்த சாதனைப் படமாக இன்று வரை திகழ்கிறது.  இராமாயண தொடர் மட்டுமல்ல "விக்ரம் வேதாளம்" தொடரும் அவருக்கு பெரும் புகழ் ஈட்டித்தந்தது.

அரவிந்த் திரிவேதி 1991 முதல் 1996 வரை சபர்கதா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பிரபல நடிகர் விஜய் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து திரைப்பட சான்றிதழ் தணிக்கை வாரியத்தின் (CBFC) செயல் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது இராமாயண தொடர் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. அதிக இந்தியப் பார்வையாளர்களால் விரும்பப்பட்டு TRP தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

இராமாயணத் தொடரில் ராவணனாக நடித்திருந்தாலும் அரவிந்த் திரிவேதி தீவிர ராமபக்தர்.

 
 
நன்றி: Google and Times Of India

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி