Wonderful Shopping@Amazon

Monday 1 June 2020

சென்னையில் பாட்டு கச்சேரி

சென்னையில் வருடந்தோறும் நடக்கும் மார்கழி கர்நாடக இசை கச்சேரி பற்றிய கட்டுரை அல்ல.

"இன்னைக்கு கச்சேரி எங்கே.. ?"

"இன்னைக்கு நைட் கச்சேரிக்கு போகலாமா ...."

"கச்சேரி அருமையாக இருந்தது தெரியுமா ... நீ தான் வரல.."

மேற்சொன்ன உரையாடல் இருபது வருடங்களுக்கு முன் அன்றாடம்  காதில் விழும், அதுவும் ஆடிமாசம் என்றால் சொல்லவே வேண்டாம். ஊரே பாட்டு கச்சேரி களைகட்டும். பெருமாள் அண்ணனுடன் சேர்ந்து ஏராளமான பாட்டு கச்சேரிக்கு போய் கேட்டிருக்கிறேன்.

முக்கியமான இசைக்கருவிகள் மேடையை ஆக்கிரமித்திருக்கும், அதுவரை திரைக்கு பின் கேட்டிருந்த இசை /பார்த்திருந்த இசைக்கருவிகளை நேரில் பார்க்கமுடிந்தது.

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" , "ஆயர்பாடி மாளிகையில் .." சங்கராபரணம் படத்தில்இடம்பெற்ற தெலுங்கு பாடல் என்று தொடங்கும் கச்சேரி பிறகு சூடுபிடிக்கும்.  பழைய பாடல்கள், அப்போது வந்த புதிய பாடல்கள் என கலந்துகட்டி பாடுவார்கள்.

நன்றாக நினைவிருக்கிறது கோவை சௌந்தரராஜன் என்பவர்  "பச்சை கிளி, முத்துசரம் முல்லை கொடி யாரோ.." என ஹஸ்கி டிஎம்எஸ் போலவே  பாடுவார்.

அடுத்து 'சொர்கம் மதுவிலே...' என பாட தொடங்குவர் ஒருவர், இன்னொருவர்  சிறப்பு சபதம் எழுப்புவார். கேட்கவே ஜோராக இருக்கும்

'சொர்கம் மதுவிலே...', "எங்கேயும் எப்போதும்" , "இளமையெனும் பூங்காற்றே", "சங்கீத மேகம்" , "வா வெண்ணிலா... ", "அடியே மனம்  நில்லுன்னா.." போன்ற பாடல்கள் அனைத்து கச்சேரிகளிலும் தவறாமல் இடம் பெரும் பாடல்கள். 
பிடித்த பாடலை மீண்டுமொருமுறை பாட சொல்லி ரசிகர்கள் கேட்பதெல்லாம் உண்டு.

ரசிகர்கள் / மக்கள் கட்டுக்குலையாமல் அப்படியே கடைசி வரை கச்சேரி முழுதும் கேட்டு விட்டு தான் நகர்வார்கள்.

அப்போது சினிமாவுக்கு அடுத்து இசை கச்சேரி முக்கிய இடம் பிடித்தது.
'சாதகப்பறவைகள்', 'யு கே முரளி', 'லக்ஷ்மன் சுருதி' குழுக்கள் பரவலாக கச்சேரி செய்தாலும். "சுருதி" என்ற பெயரை போட்டுகொண்டு நிறையபேர் கச்சேரி செய்தார்கள்.
வடபழனி-அசோக் நகர் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் ஆடிமாசம் நடக்கும் கச்சேரிக்கு பாதி சாலையை மறித்து, பிரமாண்ட மேடை அமைத்து பாட்டு கச்சேரி நடக்கும்.

பெரிய அம்மன் கோயில்களில் பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கும். எங்கள் ஊர் சின்னம்மன் கோயில் கச்சேரியில் பாடகி எல் ஆர் ஈஸ்வரி பாடியிருக்கிறார்.


ஒரு கட்டத்தில் கச்சேரிகள் திருமண வீடு வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பிடித்தது. என்னுடைய திருமணத்திலும் எங்கள் ஊரில் உள்ள இசை குழு பாட்டு கச்சேரி நடத்தினார்கள்.  பெரும்பாலும் கச்சேரிகளில் இசை சத்தமாக மாறி பாடல் வரிகளை விழுங்கி இரைச்சலானது. பிறகு 'கரோக்கி' எனப்படும் வெறும் இசையை பின்பற்றி பாடி வந்தார்கள். இப்போது அதுவும் வழக்கொழிந்து பெரிய இசைக்கருவியை பாடல்களை ஒலிக்கவிடுகிறார்கள்.

தொன்னூறுகளுக்கு பிறகு பாட்டு கச்சேரிகள் குறைய ஆரம்பித்தது. ஆனால் இப்போதும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கம், ராஜா அண்ணாமலை அரங்கம் போன்றவற்றில் அவ்வப்போது இசை கச்சேரிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஏனோ இசை கச்சேரிகளில் பாடியவர்கள் பலர் சினிமாவில் பாடி புகழ் பெறவில்லை.ஆனால் விதிவிலக்காக தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன் சென்னையில் நடைபெற்ற பல கச்சேரிகளில் வாசித்த அனுபவம் தான் இன்று முன்னணியில் உள்ளதாக சமீபத்தில் ஒரு நாளிதழ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.


நன்றி: தி இந்து தமிழ் பதிப்பகம் வெளியிட்ட 'அண்ணா - மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்திலிருந்து..


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     





No comments:

Post a Comment