Wonderful Shopping@Amazon

Monday 29 October 2018

பாரிஸ், பாரிஸ்

பாரிஸ் என்றதும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தான் உங்களுக்கு ஞாபகம் வரும்.  நான் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் பற்றி பேசுகிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பாரிஸ் கார்னர்.

பாரிஸ் கார்னர், சௌகார்பேட், மின்ட் தெரு, உயர்நீதிமன்றம், பிராட்வே, இரண்டாவது சந்து கடற்கரை  சாலை, பூக்கடை, யானை கவுனி, ஜார்ஜ் டவுன், வால்டாக்ஸ் சாலை, மற்றும் பல நூற்றுக்கணக்கான தெருவை உள்ளடக்கியது தான் பாரிஸ். அதன் மவுசு இன்றும் குறையவில்லை.

மாமாவின் கைபிடித்து சிறுவயதில் பாரிஸ் / கொத்தவால்சாவடி சேரும் சகதியும் நிறைந்த தெருக்களில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது,  மாமா தன்னுடைய நட்டு மருந்து கடைக்கு சரக்கு வாங்க போகும்பொழுது என்னையும் அழைத்து செல்வார்.

காலையில் கடைக்கு தேவையான சரக்கை கொள்முதல் செய்துவிட்டு வந்தால்.  அன்று இரவு மாட்டு வண்டியில் வந்து சேரும்.  இப்பொது லாரியில் வந்து இறங்குகிறது.
துணி வகைகள், பூஜை சாமான்கள், பறவைகள் - அழகு மீன்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூக்கள், நாட்டு மருந்து, வாசனை பொருட்கள், இரசாயன பொருட்கள், காகிதம் முதலிய எழுது பொருள்கள், லாகிரி வஸ்துக்கள், மோட்டார் பம்ப் செட், மின் சாதன உபகரணங்கள், வீட்டு பராமரிப்பு பொருட்கள், என ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தெரு.  மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் என தெரு முழுதும் வியாபாரிகள் - வாடிக்கையாளர் நிரம்பி வழியும்.

என்ன வேண்டும் உங்களுக்கு.. எல்லாம் கிடைக்கும் ஊசி முதல் எந்திரம் வரை
அனுபமுள்ள ஆட்களோடு போனால் குறைந்த / நியாமான விலையில் வீட்டுக்கு தேவையான தரமான பொருட்கள் வாங்கி வரலாம்.

சென்னையை சுற்றி உள்ள எல்லையோர ஆந்திரா நகரங்களுக்கு பாரிசிலுருந்து தான் பொருட்கள் செல்கிறது.

தி நகர், புரசைவாக்கம் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளுக்கு வியாபாரிகள் பாரிசிலுருந்து தான்  கொள்முதல் செய்கிறார்கள்.

குறுகலான சந்து / தெரு / குறுகலான சாலையில் ரிக்க்ஷா, ஆட்டோ, மனிதர்கள் நீ,  நான்  என்று முந்துவார்கள், அவர்கள் மேல் மோதிவிடாமல் கவனமாக நடக்க வேண்டும்,

இரண்டு மாதத்திற்கொருமுறை பாரிஸ் கந்தசாமி கோயில் தெருவில் உள்ள சம்பத்து செட்டி கடைக்கு செல்வது வழக்கம். குளியல் சீக்காய் அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், நொய் அரிசி, சிகப்பரிசி, மூங்கில் அரிசி, சத்து மாவு அரைப்பதற்கு தேவையான மூல பொருட்கள், பனை வெள்ளம், பனஞ்சர்க்கரை, பூஜை பொருட்கள், சாம்பிராணி மற்றும் பல பொருட்கள். (இதையெல்லாம் அதிக விலை  கொடுத்து நம் அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டியிருக்கும்). அப்படியே கந்தசாமி கோவில், பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் தரிசனம் செய்து விட்டு  வீடு வந்து சேர்வதுண்டு.

நீங்கள் பாரிஸ் போனால் கீழ்கண்ட கடைகளில் சாப்பிடலாம்.  சில சுற்றுலா அமைப்புகள் Food Walk என்ற பெயரில் இங்கெல்லாம் கூட்டி போக சிறிய தொகையை வசூலிக்கிறார்கள்.  உணவுக்கு நீங்கள் தான் செலவழிக்க வேண்டும்!  நீங்களே கூட உணவகத்தை தேடி கண்டுபிடித்து உண்டு மகிழலாம்.
  • காக்கடா ராம்பிரசாத் வட இந்திய இனிப்பாகம் மற்றும் நொறுக்குத்தீனியகம்.
  • சீனா பாய் டிபன் கடை நெய் மினி பொடி இட்லி, மினி பொடி தோசை மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
  • இரண்டாவது கடற்கரை சாலை தெருவில் பர்மா உணவு சாப்பிடலாம்.
  • பழமையான 777 உணவகம்.
  • ஸ்ரீராமகிருஷ்ணா இனிப்பகம் மற்றும் உணவகம்.
  • கமல் நொறுக்குத்தீனி கடை.
  • சோட்டு மோட்டு ஜெயின் நொறுக்குத்தீனி கடை.
  • கிங்’ஸ் வடாபாவ் கடை.
  • அஜ்நாபி மிட்டாய் கடை.
  • மாயா நொறுக்குத்தீனி கடை.
  •  இன்னும்  நிறைய உண்டு.
பாரிசில் கீழ்கண்ட பழமையான கோயில்கள் பல உண்டு அதில் சில....  நேரமிருந்தால் விஜயம் செய்யலாம்.
  • ஸ்ரீ காளிகாம்பாள் கோயில்.
  • ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயில்.
  • ஸ்ரீ கச்சாலீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கந்தசாமி கோயில்.
  • ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயில்.
  • ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்.
உங்களக்கு சோர்வாக இருக்கிறதா...பாரிசில் உள்ள தெருக்களில் சிறு நடை பயிலுங்கள். ஆயிரக்கணக்கான தொழில்கள், வீடுகளற்ற ஆயிரக்கணக்கான மக்கள், பாரிஸை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், சிறு / நடைபாதை வியாபாரிகள் என எல்லோரும் உங்கள் கண்முன் வந்து போவார்கள். அவர்களை பார்க்கும் போது உங்கள் சோர்வு நீங்கி புதிய உற்சாகம் பிறக்கும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

4 comments:

  1. ஆறாவது முதல் 12வது வரை மின்ட் தெரு, ஏகாம்பரேஸ்வரர் கோயில் அருகில் உள்ள SSவைஸ்ணவ பள்ளியில் பயின்ற அந்த 7 வருடங்கள் மறக்க இயலாத நாட்கள்...மதிய உணவு இடைவேளை முழுவதும் தங்கசாலை, NSC போஸ், காசி செட்டி தெருக்களில், பாரிஸ் கார்னர் வீதிகளில் கழிந்தன... இன்றும் பாரிஸ் கார்னர் போக வேண்டுமேன்றால் கண்களில் மின்னல் தோன்றும். இனம்புரியா இன்பத்தில் மனம் துள்ளி ஆடும்..நினைவூட்டியமைக்கு நன்றி..

    ReplyDelete