Wonderful Shopping@Amazon

Monday, 14 October 2019

வெங்காயம்

''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார் தந்தை பெரியார்!

- என் பெரியப்பா மளிகை நடத்தி வந்தார். வீட்டில் ஆங்காங்கே வெங்காயம் தரையில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டிருக்கும், வீடு முழுதும் வெங்காய வாசனை நெடியாக இருக்கும். அழுகின வெங்காய வாசமும் சேர்ந்தடிக்கும்.

- மகாளயபட்சம் நாட்களில் எனது நண்பர் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ளமாட்டார். வெங்காயம் இல்லாத உணவை / சமையலை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 
 
- பழைய சாதம், தொட்டுக்கொள்ளச் சின்ன வெங்காயம் அருமையான காம்போ தான், சின்ன வெங்காயம் கார சட்னி அதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் கலந்து இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ருசி அபாரமாக இருக்கும்.

- இந்த வெள்ள வெங்காயமென்று ஒன்று இருக்கிறதே அது எதுக்குன்னே தெரியவில்லை, கடையில் ஒரு ஓரமா வைத்திருக்கிறான். எதுக்குன்னு யாராச்சும் சொல்லுங்களேன்.

- எனக்குத் தெரிந்து வெங்காயத்தில் 'அந்த' உணர்வைத் தூண்டும் எந்தச் சங்கதியும் இல்லை என்று தோன்றுகிறது. யாரோ விட்ட சரடு!!

- சந்தையில், வெங்காயத்தாள் கட்டுக் கிடைத்தால் வாங்கி வருவேன், கீரை- பருப்பு கடையல் போல வெங்காயத்தாள்-பருப்பு கடையல், சுவை மிகுந்ததாக இருக்கும். கொத்துமல்லிக்குப் பதிலாக வெங்காயத்தாளைப் பொரியலில் மேலே தூவி இறக்கினால், பதார்த்தம் நல்ல மணமாக இருக்கும்.

- பாரிமுனை பர்மா சாப்பாடு கடையில் அவித்த முட்டை 'பேஜோ' யுடன் மொறு மொறுவென்று பொன்னிறமாக வறுத்த வெங்காயத் துகள்கள் நடுவில் வைத்துத் தருவார்கள், முட்டையுடன் சேர்த்துக் கடித்துச் சாப்பிட, சுவை தாறுமாறாக இருக்கும். வெங்காயத்தைப் பொன்னிறமாக எப்படி வறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு சுவையாக இருக்கும்.

- எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு தள்ளு வண்டி கடையில், நிறைய வெங்காயம், கடலை மாவு, நீர் விடாமல் பிசைந்து, அந்த வெங்காய ஈரப்பற்றிலேயே பக்கோடா போடுவார் அண்ணாச்சி,எண்ணெய்யிலிருந்து பகோடாவை எடுக்கும்போது சுருள் சுருளாக மொறு மொறுவென்று வரும். சுவையோ அலாதி.

வெங்காயம் நறுக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறதென்று யோசித்ததுண்டா?

வெங்காயத்தில் நறுக்கும் போது கண்ணீர் வரக் காரணம் அவற்றில் காணப்படும் ஆலினேஸ் என்ற அமில நொதி திரவ வடிவில் இருக்கும். அது காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது.

சின்ன வெங்காயம் பற்றி ஏகப்பட்ட செய்திகள் இணையத்தில் கிடைத்தாலும். என்னுடைய தனிப்பட்ட அனுபவம். சின்ன வெங்காயம் சாம்பார், கார சட்னி எல்லாம் செய்தாலும், அசைவ சமையலுக்குச் சின்ன வெங்காயம் அபார சுவை கூட்டுகிறது என்பேன்.

அட்டகாசமான சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிட்டிருக்கிறீர்களா?

மதுரையில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட்ட சின்ன வெங்காய ஊத்தப்பம். அவ்வப்போது வீட்டிலும் செய்வதுண்டு. நீங்களும் செய்து பாருங்கள்.

சின்ன வெங்காயம் வில்லை வில்லையாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்

தோசைக் கடாயில், ஒரு கப் மாவு ஊற்றி, இடைவெளி இல்லாமல் சின்ன வெங்காய வில்லையை அதன் மீது முழுவதுமாக அடுக்கி, கொஞ்சம் நெய் இட்டு, பொன்னிறமாக ஆனதுடன் எடுத்து அதனுடன் சின்ன வெங்காயக் கார சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டுப் பாருங்கள்.... அப்புறம் தெரியும் சின்ன வெங்காயத்தின் அபார ருசி.

சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி தொக்குச் செய்வோம், அதில் சாதாரண வெங்காயம் உபயோகப்படுத்துவோம், அதற்குப்பதிலாகச் சின்ன வெங்காயம் சேர்த்துத் தக்காளி தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்!

சின்ன வெங்காயம் சேர்த்து இறா தொக்குச் செய்து சாப்பிட்டுப் பாருங்கள், நாக்கில் உள்ள சுவை அரும்புகளுக்கு இன்னொரு சுவையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்.

வெங்காயமும் அதன் அரசியலும் பற்றி எழுதலாம் என்று தோன்றியது, ஆனால் கீழே உள்ள சுட்டி என் வேலையைச் சுலபமாக்கிவிட்டது. நீங்களும்
வியக்க வைக்கும் அந்தச் சுவாரஸ்யமான கதையைப் படித்துப் பாருங்கள்................

மக்கள்ஸ்! சின்ன வெங்காயம் வைத்து புதுசாக நீங்கள் செய்த பதார்த்தத்தைப் பற்றி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....!


Link Thanks : Dinamani.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Wednesday, 9 October 2019

குப்பையே என்றாலும் ...... பகுதி - ஒன்று


"குப்பையே என்றாலும் அது வெளிநாடு போல் வருமா ...." என்று பாடத் தோன்றுகிறது.

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தோம். வெகு சீக்கிரமாகத் தொடங்கிய வேலை முடிய மதியம் ஆனது.

இந்த முறை நெகிழி பாத்திரங்களுக்குப் பதில் ஸ்டீல் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் நிரப்பி வைப்பதில். மனைவி தீவிரமாக இருந்தாள். சில நாட்களுக்கு முன்பு பாரிமுனை ஈவினிங் பஜாரில் அளவு வாரியாக ஸ்டீல் கொள்கலன்களை வாங்கி வந்தோம். முடிவில் ஏராளமான நெகிழி பாத்திரங்களைக் காயலான் கடைக்கு எடைக்குப் போட வைத்திருந்தோம்.

உணவு பொருட்கள் அடைத்து வரும் நெகிழி பாத்திரங்களைத் தூக்கிப் போடா மனது வராமல், அதில் வேறு உணவுப் பொருட்களை நிரப்பி வைக்கப் போய் நிறையச் சேர்ந்துவிட்டது.

எங்கள் வீட்டிலேயே இப்படி என்றால் ... மற்ற வீட்டில் / இடத்தில் எவ்வளவு சேரும்....அது கடைசியில் எங்கே சென்று... என்ன ஆகுமோ.........நினைக்கவே பயமாக இருக்கிறது. இப்போது விஷயம் என்னவென்றால் .....

நாம் குப்பைகளைக் கையாளும் விதத்தைப் பார்த்தால் எனக்குப் பயமேற்படுகிறது. குப்பைகளை மலைபோல் குவித்துக் காற்று மாசடைவதைப் பற்றி / சுற்றுப்புறச்சூழலைக் கருத்தில் கொள்ளாமல் எரிக்க விடுவது.

சமீபத்தில் டிஷ்கவரி சானலில் கழிவு மேலாண்மை பற்றிய குறும்படம் பார்த்தேன், அதைப் பார்த்தவுடன் தான் தெரிந்தது நாம் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து போகும் குப்பைகளுக்குப் பின் உள்ள வியாபார சாம்ராஜ்யம். அதைப் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு:
மேலை நாடுகள் திடக் கழிவு மேலாண்மை என்ற திட்டத்தைக் கவனமாகவும்/ திறம்படக் கையாளவும் அதற்குரிய சட்டங்களை வரைந்துள்ளது.
அமெரிக்கா பல துறைகளில் வளர்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், குப்பை உற்பத்தியிலும் அதற்கு முதலிடம். அமெரிக்கா வருடத்துக்கு 250 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. ஒரு நல்ல விஷயம் .... 30% குப்பை மறுசுறழ்ச்சி செய்யப்படுகிறது, மீதி உரமாகத் தயாரிக்கப்படுகிறது

சில நகரங்களில் வீட்டில் உற்பத்தியாகும் கழிவுகளுக்கேற்ப வரி அல்லது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எளிதில் மறுசுழற்சி ஆகும் கழிவுகளுக்குக் குறைந்த கட்டணமும், மறுசுழற்சியாக அதிக நேரம் பிடிக்கும் கழிவுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் ஊரிலும் இது நடைமுறைக்கு வரலாம்.

பெரிய நிறுவனங்கள் வகைத் தொகை இல்லாமல் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறது, இதனால் கடல் உயிரினங்கள் அழிகிறது, மீன் உற்பத்தி பாதித்தப்படுகிறது. சில நாடுகள் கழிவுகளைக் கடலில் கொட்ட நிறுவனங்களை அனுமதிக்கிறது

உலகம் முழுதும் கழிவுகளைக் கையாளும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளது.

அமெரிக்காவின் மிகப்பெரிய கழிவு மேலாண்மை நிறுவனத்தில் உலகப் பணக்காரர் திருப் பில் கேட்ஸ் அவர்கள் பல மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்போதைய $285 பில்லியன் மதிப்புள்ள கழிவு மேலாண்மை சந்தை அப்படியே இரட்டிப்பாக மாறும். அமேசான் நிறுவனம் $10 மில்லியன் டாலர் முதலீட்டைக் கழிவு மேலாண்மை துறையில் செய்துள்ளது.

எந்தந்த நாடுகளில் கழிவு மேலாண்மை செம்மையாக இல்லையோ அங்கு நோய் உற்பத்தி பெருக்கம் அதிகம் காணப்படும்.

சில நாடுகள் கழிவுகளை இறக்குமதி செய்கிறது, அதில் ஸ்வீடனும் ஒன்று. தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்த பிறகு, கழிவு மேலாண்மை நிறுவனங்கள் எப்போதும் பிசியாக இருக்க அவர்கள் இதைச் செய்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் நாட்டை எந்தளவுக்குச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள் என்று யூகித்துக்கொள்ளலாம்.

மேலைநாடுகளில் கழிவுகளிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள், பிரிட்டன் கழிவுகளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதற்குப் பதில் மின்சாரமாகப் பெறுகிறது. போலந்து நாடு, மக்களிடமிருந்து கழிவுகளைப் பெற்று, மின்சாரம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்குகிறது.

இயக்கிய அரபு அமீரகம் அதிகப்படியான கழிவுகளை உற்பத்தி செய்து அதைத் திறம்பட மறுசுழற்சி செய்கிறது

உலகின் தலைசிறந்த, கழிவு மேலாண்மைத் துறையில் நாற்பது வருடம் அனுபவம் கொண்ட நிறுவனம் "என்விரோ செர்வ்". கழிவு மேலாண்மைத் துறையில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை வகுத்து இத்துறையில் புகும் புதிய நிறுவனங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

பல நாடுகள் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று. நாம் இப்போது தான் நெகிழியைத் தடை செய்திருக்கிறோம். இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

விண்வெளியில் குப்பை, இமயமலையில் குப்பை, மின்னணு குப்பை, குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சரி, உங்கள் மின்னஞ்சலில் உள்ள குவிந்து கிடக்கும் குப்பைகளை எப்போது அகற்றப் போகிறீர்கள்?


நன்றி: Youtube /Alux.com



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Thursday, 3 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் - 16


முந்தானை முடிச்சு (1983)

முந்தானை முடிச்சுப் படம் பற்றி ஏராளமான விஷயங்கள் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. இது வேறு தகவல்....

உங்களுக்குத் தெரியுமா ... அக்காலத்தில் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திர ஆடியோ காஸெட் அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. ஊரில் எந்தத் தேநீர்க் கடைக்குப் போனாலும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்கும், மக்களும் சளைக்காமல் கேட்பார்கள். சினிமா - One Time Wonder. காஸெட் அப்படி இல்லை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

எங்கள் அண்ணன் பெருமாள் தினமும் ஒரு முறையேனும் முந்தானை முடிச்சு ஒலிச்சித்திரம் கேட்டு விடுவார். ஒரு கட்டத்தில் வசனங்கள் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. கேட்டு முடித்தவுடன் படப் பாடல்களை ஒலிக்கவிட்டு, அதையும் ஒரு ரவுண்டு கேட்டு முடிப்பார். "விளக்கு வெச்ச நேரத்துல....". பாடல் எனக்குப் பிடிக்கும்.

பிறகு கொஞ்ச நாள் கழித்து VCR -வீடியோ காஸெட் அந்தப் படம் பார்த்தேன், நான் முதலில் பார்த்த பாக்யராஜ் படம் முந்தானை முடிச்சு ......
நாயகன் பாக்யராஜ், கதாநாயகி ஊர்வசி மற்றும் ஊர் பெரியவர்கள் மத்தியில் நடக்கும் அந்த முக்கியமான காட்சி, பிறகு ஊர்வசி குழந்தையைத் தாண்டுவது போன்ற காட்சி வரும்....அந்த இடத்தில ராஜா போட்ட பின்னணியிசை அமர்க்களமாக இருக்கும். இதோ அந்தக் காட்சி:
 நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

 

திருப்பதி திருக்குடை ஊர்வலம்


திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருப்பதி திருக்குடை ஊர்வலம் - சென்னையில் மட்டுமே நடக்கும் பிரத்தியேக நிகழ்வு. மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா போல். வடசென்னை மக்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மற்ற மாவட்டங்களில் இது போல ஒரு விழா உண்டா என்று தெரியவில்லை. செப்டம்பர் மாதம் பதினைந்து தேதிக்கு மேல் "திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது..." என்ற சுவரொட்டி விளம்பரம் சென்னை முழுதும் காணலாம். அந்தந்த ஊரில் திருப்பதி திருக்குடை எப்போது வரும் என்ற தேதியையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஊர்வலம் திருவிழா பற்றிய சிறு குறிப்பு : தங்கசாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில் உள்ள ஒரு குடும்பம் அழகிய வேலைப்பாடுகளுடைய குடைகளைச் செய்து பரம்பரை பரம்பரையாக ஏழுமலையான் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்குகிறார்கள். திருப்பள்ளி தெருவில் தொடங்கி, யானை கவுனி , ஓட்டேரி, புரசைவாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர்,  திருமுல்லைவாயில், ஆவடி, திருவள்ளூர் வழியாகத் திருப்பதி சென்றடையும்.

எனக்குத் தெரிந்து ரொம்பக் காலமாக இது நடந்து வருகிறது. திருப்பதி குடை வருவதற்கு முந்திய மூன்று நாட்களுக்கு ஆவடியில் சாலையோரம் தாற்காலிக கடைகள் போடுவார்கள். விளையாட்டுப் பொம்மைகள் கடை, வளையல் கடை, ராட்டினம், நொறுக்குத்தீனி கடை என ஏராளமான கடைகள் இருக்கும். பல குடும்பங்களில் திருப்பதி திருக்குடை வைபவத்தன்று பொருட்கள் வாங்குவதற்காகவே காத்திருப்பார்கள். "கொட வருதுல்ல, அப்ப வாங்கித்தாரேன்" என்ற பேச்சு வழக்கு எங்கும் கேட்கலாம். பள்ளி முடிந்து விட்டி வீட்டுக்கு வரும்போது எல்லாக் கடைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவது எனக்குப் பிடிக்கும். நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். மாநகரப் பேருந்து நெரிசலில் ஊர்ந்து செல்லும்.

திருப்பதி குடை விழாவில் பேரப்பிள்ளைகளுக்குப் பொம்மைகள், வளையல், ரிப்பன், சாந்து, பொட்டு, ஹேர்கிளிப் போன்று பொருட்கள் வாங்கித் தருவது எல்லாத் தாத்தாக்களும் கௌரவமான விஷயமாகப் பார்ப்பார்கள். எங்கள் தாத்தாவும் எங்களைக் கூட்டிப்போய் விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவார். அடுத்தப் பத்து நாளைக்கு எங்களுக்கு அது தான் Sensation.

ஆவடி சின்னம்மன் கோயில் அருகே ஒரு வீட்டில் வருடா, வருடம், திருப்பதி திருக்குடை நிகழ்வின் போது திருப்பதி பெருமாளை அழகாக வரைந்து, கீழே திருப்பதி மலைப் பாதை போன்று களிமண் கொண்டு அமைத்து அதில் கார், பஸ் மற்றும் பக்தர்கள் நடைபாதை எனத் தத்ரூபமாக வடிவமைத்து, அழகிய வண்ண ஒளி விளக்குகளால் அலங்கரித்துக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். பார்க்க அழகாக இருக்கும்.  நான் மணிக் கணக்காக நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஆவடிக்குக் குடை வருவதற்கு முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, ஊரெங்கும் அன்னதானம் வழங்குவார்கள். நாங்களும் ஒரு வருடம் பொங்கல், ஒரு வருடம் வெண்பொங்கல் என வழங்கியிருக்கிறோம்.

ஆவடியில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் குடைகள் நிறுத்திவைக்கப்படும். அப்போது அப்பா அம்மா எங்களைத் தரிசனத்துக்கு அழைத்துப் போவார்கள்.

மேலே சொன்னது எல்லாம் பழைய கதை, இப்போது நிலைமை மாறிவிட்டது காலப்போக்கில், திருப்பதி திருக்குடை கைங்கரிய குழு இரண்டு குழுக்களாக ஆகிவிட்டது. எது அசல் எது நகல் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்தக் குழு முதலில் வருகிறது என்று தெரிவதில்லை. முன்பு போல இருந்த அந்த ஆரவாரமெல்லாம் போய் வருடங்கள் ஆகிறது. சாலையோர கடைகளைக் காணோம்.  மக்களின் ஆர்வமும் குறைந்துவிட்டது.


 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Tuesday, 1 October 2019

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்!

பத்தாப்பு பள்ளி நண்பர்கள் சந்திப்பு

ண்பன் ஜோசப் திருமண விழாவுக்குப் பிறகு இதெல்லாம் நடந்தது.....

கிருஷ்ணா ஆரம்பித்த பத்தாப்பு பள்ளி நண்பர்கள் வாட்ஸப் குழுவில் என்னோடு சேர்த்து பதினைந்து பேர் இணைந்திருந்தோம். பண்டிகை கால வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். மற்றபடி எங்கள் குழு அப்படியே தான் இருந்தது.

ஜோசப் கல்யாணத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு குழு நண்பர்கள் எல்லோரும் சந்தித்தோம். அப்போது கிருஷ்ணா வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்குச் சென்னை வந்திருந்தான்.

"என்னடா நம்ம கூடப் படிச்சா 160 பேருல வெறும் 15 பேர் தான் குரூப்ல இருக்கோம், இன்னும் நிறையப் பேர சேர்க்கணும்டா" என்று சொல்லிவிட்டு, அவனே தொடர்ந்தான் "நான் சென்னையிலிருந்து கிளம்பரத்துக்குள்ளாற நிறையப் பேர சேர்த்துட்டுப் போகப்போகிறேன்" என்றான்.

"ரெண்டு வரசதுக்கப்புறம் வந்திருக்க, குடும்பத்தோடு நேரம் செலவழி, மற்றத பிறவு பாத்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு நாங்கள் கலைந்தோம். நானும் அதை மறந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மூன்று நாள் கழித்து, வாட்சப்பில் (புதிய) உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டி கைப்பேசி எண்களை, கொடுத்திருந்தான் கிருஷ்ணா. நான் சேர்க்க ஆரம்பித்தேன், உறுப்பினர்கள் சேர, சேர எங்கள் வாட்ஸப் குழுக் களைக் கட்ட ஆரம்பித்தது. சுமார் இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கிறோம், உலகின் வெவ்வேறு மூளையிலிருந்து வாட்ஸப் மூலம். தங்கம் விலையேற்றம் போல உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏற ஆரம்பித்தது. மொத்தத்தில், குழு ஆரம்பித்த கிருஷ்ணா தொடக்கப் புள்ளி.

நீண்ட வருடங்கள் பேசாமல் இருப்பவர்கள் பேசினால் என்ன ஆகும்? வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது. எனக்கும் அது புது அனுபவம் தான். அதற்கு முன்பு வாட்ஸப் அரட்டையில் இப்படி மணிக் கணக்கில் உட்கார்ந்தது இல்லை.

அப்போது தான் அந்த யோசனை உதித்தது. எல்லோரும் சேர்ந்து சந்தித்தால் என்ன ? என்று தோன்றியது. பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு முடிவானது. சந்திக்கும் இடம் முடிவாவதில் சிக்கல் நீடித்தது. ஒருவர் அண்ணா நகர் கோபுரம் என்று சொல்ல, இன்னொருவர் ரிசார்ட், இன்னும் ஒருவர் மெரினா கடற்கரை என்று பரிந்துரைக்க. இன்னொரு நண்பன் ஓமர் தன் வீட்டில் சந்திப்பு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, நண்பன் கோவிந்த் அவனுடைய அலுவலகத்தில் உள்ள அரங்கை ஏற்பாடு செய்வதாய்ச் சொல்ல. என்ன செய்யலாம் என்று யோசித்த போது...காலை அரங்கத்தில் கூடி மதிய உணவு முடிந்தவுடன், மாலை நண்பன் ஓமர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள முடிவானது. தேதி மற்றும் நுழைவு கட்டணம் முடிவானது.

இன்னும் பல நண்பர்கள் குழுவில் சேர்ந்தனர். குறுகிய காலத்தில் எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடந்தது.

சந்திப்பு விழாவுக்கு முந்திய நாள் ஒரு பயலுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை, வாட்ஸப் அரட்டை விடிய விடிய நீடித்தது.

அந்த நாளும் வந்தது................

எனது வீட்டிலிருந்து சற்று அருகில் தான் அந்த அரங்கம். காலை 10.30. மணிக்குள்ளாகவே சென்றுவிட்டேன். விழா ஏற்பாடு செய்த நண்பர்கள் கோவிந்த,அறிவு, ராஜேஷ், ராஜேந்திரன் மட்டும் இருந்தனர். யாரும் வர காணோம். மனதில் ஒரு வித பயம், கேள்வி, யாரும் வராமல் போனால் செய்து வைத்த உணவு என்னாவது ? சில நிமிடங்களில் எங்கள் பயம் அகன்றது.

பதினோரு மணிவாக்கில், ஒருத்தர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர். பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் நண்பர்களைப் பார்த்ததால் மனது மகிழ்ச்சியில் பொங்கியது. முத்தமிடல், கட்டித்தழுவல் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் நண்பர்கள்.

அன்றும், இன்றும் எத்தனையோ, எவ்வளவோ மாறிவிட்டன, சொன்னால் நம்பமாட்டீர்கள் சில நண்பர்களை / தோழிகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை, பெயர் கேட்டுத் தான் தெரிந்துகொள்ள முடிந்தது.

வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் தவிரக் குழுவில் உள்ள 60.சதவீதம் பேர் வந்திருந்தனர். இதுவே எங்களுக்கு வெற்றி. சிலர் ஊரில் இருந்தும் வரவில்லை.

சந்திப்புக்கு வரமுடியாத வெளிமாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டில் உள்ள நண்பர்களுக்கு Live Updates கொடுத்தனர் விழாவுக்கு வந்த நண்பர்கள்.

சரியாக மதியம் ஒரு மணிக்கு கேக் வெட்டப்பட்டது, கூடவே சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அரங்கத்தில் அவரவர் கூடிப் பேசி களித்தனர். இடையில் சூப் பரிமாறப்பட்டது.நேரம் போவதே தெரியாமல் பேச்சும், அரட்டையும் நீடித்தது.
மாலை மூன்று மணிக்கு எல்லோரையும், உணவறைக்கு (அன்பாகத் தான்!) விரட்டினோம். புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தி, பாயசம், சாதம், ரசம், அப்பளம், ஊறுகாய் மற்றும் ஐஸ்-கிரீம் - இது தான் உணவுப் பட்டியல். குழுவில் உள்ள சமையல் கலை படித்த நண்பன் அறிவு மேற்பார்வையில் இத்தனையும் செய்து பரிமாறப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு அரங்கத்தில் அனைவரும் ஆஜரானோம், எல்லோரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டோம். நண்பன் ரஜினிகாந்த் "முகிலே, முகிலே, ஓ முகிலே" என்ற கன்னட பாடலை பாடினான். அதே பாவத்துடன் பாடினது தான் ஆச்சரியம். எங்களை மீண்டும் பழைய காலத்துக்குக் கொண்டு சென்றான். கிண்டல், கேலி, பாட்டு என நேரம் போனதே தெரியவில்லை. பின்னணியில் இளையராஜாவின் 80களில் வெளிவந்த பிரபல பாடல்களை ஒலிக்கவிட்டோம். சூழ்நிலையை மேலும் ரம்மியமாகியது.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில், அனைவரும் சேர்ந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினோம்.

மாலை ஐந்து மணிக்கு.......... வெகு தொலைவிலிருந்து வருகை தந்த நண்பர்களை வழியனுப்பிவிட்டு, நண்பன் ஒமர் வீட்டுக்குச் சென்றோம்.
அங்குத் தேநீர், சிற்றுண்டி, கொஞ்சம் பேச்சு, முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் கலைந்து சென்றோம்.

அன்று இரவு எனக்குப் பசி எடுக்கவில்லை, படுக்கையில் விழுந்தேன். மறுநாள் காலை அலுவலகத்தில் வேலை ஓடவில்லை, மனது முழுதும் முந்தைய நாள் நிகழ்ச்சி ஆக்கிரமித்ததது. சில நண்பர்கள் கைப்பேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

அடுத்துச் சந்திப்பு 2020ல் இதே போலச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன் அவரவர் பெண்டு-பிள்ளைகள் விசேஷத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி




Friday, 27 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-15

சத்ரியன்(1990)

த்ரியன் - வித்தியாசமான விஜயகாந்த்தை இதில் பார்க்கலாம். விஜயகாந்த்துக்கு மொத்தமே ஒரு பக்கத்துக்குத் தான் வசனமே. வழக்கமான பழிவாங்கல் கதை தான் அதை மணிரத்தினம் சிஷ்யர் கே சுபாஷ் தனது திரைக்கதையால் மெருகேற்றியிருப்பார். படம் கொஞ்சம் Violent-ஆக இருக்கும். கதாநாயகனுக்கு (பன்னீர்செல்வம்) இணையான கதாபாத்திரம் வில்லன் (அருமைநாயகம்). மலையாள நடிகர் திலகன் இதில் பின்னியிருப்பார். அவர் பேசும் "பழைய பன்னீர்செல்வமா வரனும் " என்ற வசனம் மெர்சலாக இருக்கும்.

இதில், சரியாகச் சொன்னீர்கள்....... அந்தப் பாட்டு தான். என்ன சொல்வது இந்தப் பாடலை பற்றி... சுவர்ணலதாவின் சொக்க வைக்கும் குரலைப் பற்றிச் சொல்வதா, அல்லது பானுப்ரியாவின் நளினத்தைப் பற்றிச் சொல்வதா, அல்லது படமாக்கிய இயக்குநரைப் பற்றிச் சொல்வதா, பாடலை எழுதிய கவிஞர் வாலியின் வரிகளைச் சொல்வதா அல்லது ராஜா சாரின் இசை அமைப்பு பற்றிச் சொல்வதா தெரியவில்லை. மொத்தத்தில் ஐவர் நிகழ்த்திய மாயாஜாலம்.

பாடகிகள் ஜென்சி, எஸ் பி சைலஜா, உமா ரமணன் போன்று சுவர்ணலதாவின் குரலும் தனித்துவமானது. "அட டா நானும் மீனைப் போலக் கடலில் பாயக்கூடுமோ......" அந்த இடத்தில் கவனம் வைத்துக் கேளுங்கள், அந்தக் குரலின் விஸ்தீரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இதோ அந்த பாடல் : 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Thursday, 26 September 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-14

மகாநதி(1994)

1994-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்தது. காணும் பொங்கல் அன்று அனந்த திரையரங்கில் பார்த்தேன்.  பெரிய திரை, விசாலமான அரங்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம். சாதாரண வணிகப் படம் போல் அல்லாமல் ஒரு மாதிரி வித்தியாசமாய் எடுத்திருப்பார் கமல். என்னைப் பாதித்த படங்களில் மகாநதியும் ஒன்று.  என்னுடன் வந்த நண்பர் கடைசி நேரத்தில் லிட்டில் ஆனந்த்தில் வேறு படம் சென்று விட்டார். படத்தைப் பற்றிச் சிலாகித்து  சொன்னவுடன், நல்ல படம் பார்க்கத் தவறவிட்டதை எண்ணி வருந்தினார். அந்தச் சிறை சண்டைக் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் படத்தின் Highlight. மகாநதி - சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம்.

சரி விஷயத்துக்கு வருவோம், படத்தின் தொடக்கப் பாடலான "பொங்கலோ, பொங்கல்", இப்போதும் பொங்கலன்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒலிக்கிறது. ஆனால் இப்படத்தில் இன்னொரு அழகான பாடல் உண்டு. "ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்.." எஸ்.பி.பி மற்றும் திருமதி உமா ரமணன் அவர்களின் காந்தக் குரலும் பாடலுக்குப் புதிய வண்ண சேர்க்கும்.
 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி