Wonderful Shopping@Amazon

Friday 7 January 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-124

இணைந்த கைகள் (1990)

 
 
ன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டு கொண்டே என்னைக் கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990களில் பயணித்தது. அட ... 'இணைந்த கைகள்' படமாயிற்றே....

முதல் ரீலில் வரும் ஆக்ஷன் பிளாக், நண்பர்கள் இணையும் இடைவெளி  காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி ஆக்ஷன் பிளாக்,  ரயில் நிலைய கிளைமாக்ஸ் என மனதில் ஓடியது படம்.  'இணைந்த கைகள்' படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் இணைந்து, பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில்  முதல் நாள் முதல் காட்சி பார்த்தோம். எனக்குப் பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.



ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து, நாசர், செந்தில் ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்து "முற்றிலும் இளைஞர்களுக்காக" என்ற கோஷத்துடன் மிகுந்த பொருட்செலவில் வெளிவந்த பிரம்மாண்ட படம்.

சமூக ஊடகங்கள் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் படத்துக்காகப் பரவலான  எல்லா தினசரி முன்னணி பத்திரிக்கை, வார இதழ் மற்றும் வானொலியிலும் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆபாவாணன். சென்னை மவுண்ட் ரோட்டில் பிரமாண்டமான விளம்பர பதாகை இடம்பெற்றது நினைவிருக்கிறது. விளம்பரங்கள் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

- மறைந்த இயக்குநர் என். கே விஸ்வநாதனின் விறுவிறு இயக்கம்.
- மனோஜ் கியானின் இனிமையான பாடல்கள் /பின்னணி இசை. 
சண்டைக் காட்சிகள்.
சென்டிமென்ட் காட்சிகள்.
- அப்போதைய முன்னணி நடிகர்கள் நடித்தது.
- நாசரின் வில்லத்தனம்.
கதாநாயகனுடன் மோதும் சண்டைக்காட்சியில் வித்தியாசமான
   தோற்றத்தில் குள்ளமணி.
கிளைமாக்சுக்கு முந்திய பாடலான "அந்தி நேர தென்றல் காற்று..."
   அப்போது    பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இப்போதும் எனக்குப் புரியாத விஷயம், அத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது தான்.  

கொசுறு செய்தி:

இணையத்தில் எதையோ தேடும் பொது கிடைத்த தகவல்கள் தமிழில் இதோ:

இயக்குநர் சாணக்கிய இயக்கத்தில் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழில் மற்றும் என்.டி ஆர் தெலுங்கில் நடிக்கவிருந்த படம் இணைந்த கைகள்.  மிகுந்த பொருட்செலவில் எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஈரானில் படப்பிடிப்பு மற்றும் ஈரானிய நடிகையை அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. எம்.எஸ் விஸ்வநாதன் பாடல்களும் தயார். படப் பூஜையில் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

'நிலவு ஒரு பெண்ணாகி', 'அவள் ஒரு நவரச நாடகம்' மற்றும் 'கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்' போன்ற இனிய பாடல்கள் பின்னர் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்றது.

Thanks: YouTube

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

No comments:

Post a Comment