Wonderful Shopping@Amazon

Saturday 12 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-128

நீங்கள் கேட்டவை (1984)

80-90-களில் கச்சேரி மேடைகளில் நான்காவது-ஐந்தாவதாக இந்த பாடலை பாடுவார்கள், அவர்களும் மேடையில் ஆடிக்கொண்டே பாடுவார்கள், காரணம் பாடலின் ரிதம் அப்படி. பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.  கல்லூரி ஆண்டு விழாக்களில் கூட இந்த பாடல் /நடனம் இடம்பெற்றது.

சில இயக்குநர்களுக்கு தனக்குத் தெரிந்த ஜானரில் படம் இயக்கவே விரும்புவார்கள், தெரியாததை ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணமாகக்  கூட இருக்கலாம். சிலர் எல்லா ஜானரிலும் படம் பண்ண விரும்புவார்கள்.

இப்படி இருக்கையில், "இவருக்கு அழகியல்/ மனித உறவுகளின் சிக்கல்களைத் தாண்டி, இவரால் படம் எடுக்க தெரியாது.." - யாரோ பேசியதை இவரது நண்பர் ஒருவர் இவரிடம் சொல்ல... "அப்படியா.." என்று அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், அடுத்து பக்கா வணிக படத்துக்கான வேலைகளில் இறங்கி /இயக்கி சிக்ஸர் அடித்தார். படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

யார் அந்த இயக்குநர்  என்ன படம் ?

1984 ஆம் ஆண்டு, தியாகராஜன், பானுச்சந்தர், அர்ச்சனா மற்றும் சில்க் ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து, இளையராஜா இசையமைத்து காலஞ்சென்ற இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய படம் 'நீங்கள் கேட்டவை'.  ஒரு தமிழ் பத்திரிக்கை, "பாலு மகேந்திரா, இதயா நாங்கள் கேட்டோம் .." என்று எழுதியது.  அதன் பிறகுத் தனது பாணிக்குத் திரும்பினார்.

என்னுடைய அண்ணன் பெருமாள் அவர்களுக்கு இந்த படத்தின் பாடல்கள் பிடிக்கும், தினமும் ஒரு முறையாவது டேப் ரெகார்டரில் கேட்டுவிடுவார்.

"அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி.." என்ற பாடல் தான் மேடை கச்சேரியை ஆக்கிரமித்தது. இன்றைய தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் தவறாமல் இடம்பெறுகிறது. மழலைகள் குரலில் கேட்கும்போது கூட நன்றாகத் தான் இருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன்...முதல் சரணம் கிளாசிக்கல், இரண்டாம் சரணம் வெஸ்டர்ன் கலவையில் இடம்பெற்ற  "ஒ வசந்த ராஜா.. " பாடலை தான் எப்படி மறக்க முடியும்.




- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




No comments:

Post a Comment