Wonderful Shopping@Amazon

Tuesday 22 February 2022

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-131

'ஷோலே'(1975)

மேற்கத்திய கௌபாய் படத்தின் சாயலில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, சஞ்சீவ் குமார் மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் நடித்து, இயக்குநர் ரமேஷ் சிப்பி இயக்கத்தில்  1975-ஆண்டு வெளியான  'ஷோலே' இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படம், இதற்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்று சொல்ல மாட்டேன், ஆனால் கமர்சியல் படங்களில் ஒரு மைல்கல் 'ஷோலே'.

என் மாமாவுக்குப் பிடித்த படம். திரையரங்கில் இந்த படத்தைப் பார்த்த அனுபவத்தைக் கதை கதையாகச் சொல்வார். அன்றைய காலகட்டத்தில் அவர் வயதுடையவர்களுக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்திய படம்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அவ்வப்போது Performance அலவன்ஸ் கொடுப்பார்கள், அப்படிக் கிடைத்த சொற்ப பணத்தில் நுங்கம்பாக்கம் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் இந்த படத்தின் ஒரிஜினல் டிவிடி வாங்கி படம் பார்த்தேன்.

தொடக்கத்தில் வரும் அந்த ரயில் சண்டைக் காட்சி, அதுவரை இந்திய சினிமா பார்க்காதது, முதல் முறையாகப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டு தான் போனார்கள். சரியாக ஐந்து வருடம் கழித்து 'முரட்டுக்காளை' படத்தில் கிளைமாக்ஸ் ரயில் சண்டைக் காட்சியை வைத்து இயக்குநர் எஸ் பி முத்துராமன் தமிழ் ரசிகர்களின் ஆசையைத் தீர்த்துவைத்தார்.

'ஷோலே' வெளியாகி 45 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்களை உங்களுக்காகத் தருகிறோம்...

'ஷோலே' படத்தில் கதாநாயகனாக 'ஜெய்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சத்ருகன் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், வளர்ந்துவரும் நடிகரான அமிதாப்பச்சன் தான் அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்று யூகித்து அப்படத்தின் தயாரிப்பாளரான ஜி பி சிப்பி தேர்வு அவரை செய்தார்.

கதைப்படி 'வீரு' கதாபாத்திரத்தில் சஞ்சீவ் குமார் மற்றும்  தாக்கூர் பல்தேவ் சிங் வேடத்தில் தர்மேந்திரா நடிப்பதாக இருந்தது. இரண்டு பேரும் ஹேமாவுடன் காதல் வயப்பட்டதால். காதலை இழக்க விரும்பாத தர்மேந்திரா, ஹேமாவுடன் ஜோடியாக நடிக்கும் 'வீரு' கதாபாத்திரத்தை கேட்டுப்பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1980 இல், தர்மேந்திரா ஹேமா மாலினியை மணந்தார்.

'எந்திரன்' படத்தில் வில்லனாக நடித்த டேனி தான் 'ஷோலே' படத்தின் வில்லனாக நடிக்கவிருந்தார், ஆனால் ஆப்கானிஸ்தானில் ஃபெரோஸ் கானின் 'தர்மாத்மா' படப்பிடிப்பிலிருந்ததால் டேனியால் நடிக்க முடியாமல் போனது.
பிறகு அம்ஜத் கான் உள்ளே வந்தார், அவரது குரல் பலவீனமாக இருப்பதாகக் கதாசிரியர் ஜாவேத் அக்தர் உணர்ந்தார். பின்பு அதுவே வில்லன் கதாபாத்திரத்துக்கு பிளஸ்-ஆக அமைந்தது வேறு கதை.

'ஷோலே' படத்தின் அசல் க்ளைமாக்ஸில் வில்லன் கப்பர் சிங், தாக்கூரால் கொல்லப்பட வேண்டும். காட்சியும் இப்படித்தான் படமாக்கப்பட்டது, ஆனால் படத்தின் கிளைமாக்ஸை தணிக்கைக் குழு ஏற்கவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும்,தாக்கூரால் கொல்லப்படக்கூடாது என்றும் வாரியம் பரிந்துரைத்தது. அதனால் படத்தின் கிளைமாக்ஸ் பின்னர் மாற்றப்பட்டது.

கதாசிரியர்களில் ஒருவரான சலீம்கானுக்கும்  ஹனி இரானியின் தாயாருக்கும் இடையே நிஜ வாழ்வில் நடந்த உரையாடல்தான் 'ஷோலே' படத்தில் அமிதாப்பச்சன் தனது நண்பரான வீருவின் திருமணத்தைப் பற்றிப் பேச, பசந்தியின் தாயைச் சந்திக்கும் நகைச்சுவை காட்சியாக இடம்பெற்றது

எல்லா வெற்றிப் படங்களுக்கும் நடப்பது தான் 'ஷோலே' படத்திற்கும் நடந்தது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் அவ்வளவாகக் கூட்டம் வரவில்லை, திரையரங்குகளிலிருந்து தூக்கப்படவிருந்தது, ஆனால் ரசிகர்களின் வாய்மொழி விமர்சனம் கூட்டத்தை வரவழைத்தது. பிறகு படம் வெற்றிபெற்று, இந்தியா முழுவதும் சுமார் 100 திரையரங்குகளில் வெள்ளி விழாவைக் கொண்டாடிய முதல் திரைப்படமாகும்.
 
இந்த படம் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 



- காளிகபாலி    

நன்றி: https://www.youtube.com and Times Of India

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

1 comment:

  1. the author has nicely gathered information about this film in a very vivid and lucid manner comments from kumar k k nagar chennai

    ReplyDelete