Wonderful Shopping@Amazon

Monday 1 June 2020

மூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020

மூன்றாவது சென்னை சுயாதீன திரைப்பட விழாவிற்குச் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த விகடனுக்கு நன்றி. திரைப்பட விழாவில் திரையிட்ட சில படங்களைப் பற்றிப் பேசுவோம்:

'ஃபாகுன் ஹவாய்'  (Fagun Haway)"

இயக்குநர் திரு டாக்கிர் அஹ்மத் இயக்கிய 'ஃபாகுன் ஹவாய்'  (தமிழில் : வசந்த காற்று) என்ற பெங்காலி மொழி படம் திரையிட்டார்கள். நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 1952.ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் நடைபெற்ற மொழி கிளர்ச்சி பற்றிய படம்.  உண்மையை மிக நெருக்கமாகச் சொல்லும் படம். 

இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை நம் தமிழகத்திற்கு உண்டு. அது மொழிப்போர். வேற்று மொழி திணிக்கப்படுவதை எதிர்த்தோம். அதே போன்று வரலாறு பங்களாதேஷ் நாட்டிற்கும் உண்டு என்பதை இந்த படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளமுடிந்தது.

ஒரு மொழி திணிப்பு எப்படி மனிதனை வெறியனாக்குகிறது, நாட்டை / பூர்வகுடி மக்களை மொழி திணிப்பு எப்படி பிளவு ஏற்படுத்துகிறது என்பதை இயக்குநர் மிக அழகாக நமக்குள் கடத்துகிறார். படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாகக் காவலராக வரும் யஷ்பால் சர்மாவின் நடிப்பு மிரட்டல்.

'நில மோசடி' - ஆவணப்படம்:

மறைந்த இயக்குநர் அருண்மொழி, தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி. அவருடைய மாணவர்கள் கொணர்ந்த ஆவணப்படம் 'நில மோசடி'.  டெல்டா மாவட்டங்களில் யாருக்கு அதிக நிலம் இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்குப்பின் உள்ள மோசடிகள், உழைப்பு சுரண்டல்கள், அடிமைத்தனம், வன்கொடுமை என எல்லாவற்றையும் இயக்குனர் புட்டு புட்டு வைக்கிறார்

இவ்வளவு நாட்களாக நாம் யாரை நல்லவர்களாக நினைத்திருந்தோமோ அவர்களுடைய  இருட்டு பக்கங்களை அறியும் போது நமக்குப் பேரதிர்ச்சியாகத்  தான் இருக்கிறது. தேசிய கட்சியிலேயே இருந்துகொண்டு தன்னுடைய அரசியல் பலம், செல்வாக்கு இவை மூலம் ஒரு தலைமுறையையே சுரண்டி வாழ்ந்த பலர் நாம் நாட்டில் உண்டு. அதுவும் சுதந்திரத்துக்குப் பிறகு நடந்தது தான் கொடுமை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒட்டு அரசியலுக்காக சில பிரதான கட்சிகளும் அமைதி காத்ததுதான் அவலத்தின் உச்சம். இந்த படத்தை பார்க்கும்போது 'கீழ்வெண்மணிப் படுகொலைகள்' எப்படி நடந்தது என்பதை ஊகித்துக்கொள்ளலாம். பாதகத்தை நிகழ்த்தியவர்கள் கடைசி வரை பிடிபடாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இந்த கொடுமை எல்லாம் நடந்துகொண்டிருக்கும் அதே வேளையில் வட தமிழகத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சென்னையில் பல ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினார்கள். எதற்காக ? தொழிற்கூடங்களை அமைக்க.  அவர்கள் எண்ணம் போலவே பல்வேறு தொழிற்கூடங்களை அமைத்துப் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள். இன்று அந்த குழுமத்தின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிக்கு மேல்.

சென்னை சுற்றிப் பல தொழிற்சாலைகள், அந்த குழுமத்திற்கு உண்டு. பள்ளிக்கூடங்கள், தொண்டு மருத்துவமனை, தொழிற்பயிற்சி கல்லூரி என ஆல்போல் தழைத்தோங்கி நிற்கிறது.
 
சனி, ஞாயிறு இரண்டு நாள் நடந்த விழாவில் ஏகப்பட்ட குறும்படங்களைத் திரையிட்டாலும் எனக்குப் பிடித்த மேற்சொன்ன இரண்டு படங்கள் உங்களுடன் பகிர்ந்தேன்.


நன்றி: தி இந்து தமிழ் பதிப்பகம் வெளியிட்ட 'அண்ணா - மாபெரும் தமிழ் கனவு' புத்தகத்திலிருந்து..


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     

1 comment: