Wonderful Shopping@Amazon

Friday 15 December 2017

திருப்பதி திருமலை தரிசனம்

சென்னைக்கு அடுத்தபடியாக நான் விரும்பும் ஊர் திருப்பதி திருமலை. ஒவ்வொரு முறை திருமலை செல்லும் போதும் புதிதாக ஏதாவது ஒரு வளர்ச்சி / மாற்றத்தை காணலாம். 

இரண்டு மாதத்திற்கொருமுறை போய் பெருமாளை தரிசித்துவிட்டு வருவது வழக்கம். குடும்பத்துடன் (வருடம் இரண்டுமுறை) யுகாதி மாற்றும் புரட்டாசி மாத தரிசனம்.  

உண்மையான ராமாராஜ்யம் நடப்பது அங்கே தான்.  ஓர் அரசுக்கு உள்ள கடமைகள் என்ன. அது எப்படி செயல்படவேண்டும். பிரச்சனைகளை போர்க்கள அடிப்படையில் எப்படி தீர்க்க பட வேண்டும் என்பதை திருமலை தேவஸ்தானம் நிர்வாகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  அப்படி ஒரு கட்டுக்கோப்பு.  Team Work பற்றி இன்று நாம் நிறைய பேசுகிறோம், அவர்கள் கடந்த 1932 முதல் சாதித்து வருகிறார்கள்.

ஓர் அரசிடம் உள்ள எல்லா துறைகளும் இங்கும் உண்டு. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, பொதுப்பணி, போக்குவரத்து, தகவல் தொழிற்நுட்பம், பேரிடர் மேலாண்மை மற்றும் பல. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மாற்றும் சேவர்த்திகளின் அர்ப்பணிப்பு.

எல்லோரையும் இயங்க வைப்பது அந்த பெருமாள் தான்.

அங்கப்ரதக்ஷணம்:

அங்கப்ரதக்ஷணம் நடைமுறையையை ஒரு நண்பர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பல முறை செய்திருக்கிறேன்.  அதிகாலை ஒரு மணி அளவில்  குளத்தில் குளித்துவிட்டு, ஈர வேட்டியுடன் வரிசையில் நிற்க வேண்டும். முதலில் பெண்கள் பிறகு ஆண்களை விடுவார்கள். அதற்குள் சுப்ரபாதம் சேவை தொடங்கி இருக்கும்.  சுவாமி சந்நிதியிலுருந்து சுற்று ஆரம்பமாகி  குபேரன் சிலையுடன் முடியும். பல மகானுபவர்கள் பாதம் பட்ட சந்நிதி.  நமது சரீரம் பட்டவுடன் நமக்கு ஏற்படும் சிலிர்ப்பு, அதை அனுபவித்தால் தான் தெரியும்.  

மார்கழி மாத குளிரில்  அங்கப்ரதக்ஷணம் செய்வது அற்புத அனுபவம். போன மாதம் கொட்டும்  மழையில் அங்கப்ரதக்ஷணம் செய்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

சுப்ரபாத சேவை முடிந்தவுடன் அங்கபிரதக்ஷணம்  செய்த பக்தர்களை ஸ்வாமியை தரிசிக்க விடுவார்கள்.

அங்கப்ரதக்ஷணம்  செய்த பக்தர்களை சுவாமி காண வரிசையில் காத்திருக்கும்போது  நிசப்தமான அந்த காலை வேளையில் சுப்ரபாத பாடல் ஒலிக்கும்.  அன்று முழுதும் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும்.

அன்னதானம்பிரசாதம்:

எப்போது போனாலும் அன்னதானம்பிரசாதம் உணவை தவறாமல் சாப்பிடுவதுண்டு.  எளிய உணவு சாம்பார், ரசம், மோர், துவையல் மற்றும் கூட்டு. இது தான் மெனு. எல்லாம் சுட சுட. அதிலும் மோர் மற்றும் புளி துவையல்  சேர்ந்த கடைசி பிடி / கவளம் உணவின் சுவை அற்புதமாக இருக்கும்.

தங்கும் வசதி :

சில நேரங்களில் போனவுடன் ரூம் கிடைக்கும், சில நேரங்களில் ரூம் கிடைக்காது. அப்போது லாக்கர் எடுத்து, அதில் எங்கள் உடமைகளை வைத்து விட்டு, சுவாமி தரிசனம் செய்ய கிளம்புவோம்.
அப்படி எதுவுமே கிடைக்காவிட்டால், லாக்கர் அறை/ சுவாமி சந்நிதி கோபுர வாசலில் படுத்துவிட்டு மறுநாள் கிளம்பி வீடு வந்து சேர்வோம்.


குடும்பத்துடன் சென்றால் சீக்கிர தரிசனம் அல்லது சேவா தரிசனம். தனியாக சென்றால் அங்கப்ரதக்ஷணம்  தரிசனம் அல்லது தர்ம தரிசனம். ஒரு முறை அங்கப்ரதக்ஷணம் அனுமதி சீட்டு வாங்கும்போது. பக்கத்து கவுண்டரில் சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் முறை தேர்வில் பெயர் கொடுத்திருந்தேன். மாலை ஆறு மணி குலுக்கல் தேர்வில் என் பெயர் தேர்வாயிருந்தது.  அப்புறம் என்ன, பெருமாளின் விருப்பம் இதுவே என்றெண்ணி ரூபாய் 120 /- செலுத்தி  சுப்ராபாத தரிசனத்தில் கலந்து கொண்டேன்.  அதற்கு பிறகு எப்போது சென்றாலும் சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் முறை தேர்வில் பெயர் கொடுப்பது வழக்கமாயிற்று.

சென்றமாதம் அப்பாவுக்கு சுப்ரபாத சேவைக்கான குலுக்கல் தேர்வில் பெயர் தேர்வாயிருந்தது. ஸ்வாமியை அருகிலிருந்து பார்த்தது அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம். அதே போல் எப்போது சென்றாலும் வராஹ சுவாமி தரிசனம் செய்துவிட்டு தான்  பெருமாளை தரிசிக்க செல்வது வழக்கம்.  இது என் அப்பா எனக்கு சொல்லி கொடுத்த வழிபாட்டு முறை.

பல முறை 8  மணி நேரம் வெளியே, 8  மணி நேரம் வைக்குண்டம் அறையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த்திருக்கிறோம்.  காத்திருப்பு - பொறுமை, சகிப்புத்தன்மையை கற்றுதந்திருக்கிறது.  எல்லா மாநில மக்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரூபாய் 300 சீக்கிரம் தரிசனம் /  அலிபிரி வழியாகவும் /ஸ்ரீவாரி மெட்டு வழியாகவும் நடந்து சென்று சுவாமி தரிசனம்
செய்ததுண்டு மற்றும் என் குழந்தைகளுக்கு எடைக்கு எடை பிரார்த்தனை நிறைவு செய்ததுண்டு.

ஓம் நமோ வெங்கடேசாய !

கோவிந்தா!! கோவிந்தா!!



- காளிகபாலி

No comments:

Post a Comment