Wonderful Shopping@Amazon

Monday, 8 April 2019

வாசம் வீசும் நேரம்


"வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..."
 
"வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......"
 
வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில் தோன்றும் வாசம் எது?
 
நான் மாலை நேர டியூஷன் படிக்கச் சென்ற அந்த ஆசிரியை வீட்டின் பூஜையறையில் ஏற்றப்பட்ட ஊதுபத்தியின் நறுமணம்.

தஞ்சாவூர் உணவகங்களில் பூரிக்குப் பரிமாறப்படும் தண்ணீயான கிழங்கு மசாலா வாசம் உள்ளங்கையில்.

ஞாயிறன்று எங்கள் தெரு முழுக்க மீன் / கருவாடு வறுவல், பிரியாணி, மட்டன் குழம்பு தாளிப்பு எனக் கவிச்சு வாசம் வீசும். அதுவும் புரட்டாசி  மாசத்தில் அதையெல்லாம் மறந்து இருந்தால் இந்த வாசம் ஞாபகப்படுத்தும்.

குலதெய்வக் கோயில் கருவறையில் பத்தி, கற்பூரம், சந்தானம் கலந்த வாசம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தும்.

அம்மா குழம்பு தாளிக்கும்போது வரும் வடாம் வாசம் பசியைத் தூண்டும்.

மல்லிகை பூ நறுமணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திருமணமான புதிதில் மனைவி சூடிய ஜாதி மல்லிகைப்பூ வாசம் இன்றும் நினைவில்.

சனிக்கிழமை தோறும் வெட்டிவேர் மற்றும் மூளை கலந்த சீகைக்காய் வைத்து எண்ணெய் குளித்த பிறகு உடம்பிலிருந்து வெளிவரும் வெட்டிவேர் வாசம் மனசை நிரப்பும்.

சென்னை புரசைவாக்கம் மோட்சம் திரையரங்கில் (இப்போது இல்லை) சில படங்கள் பார்த்திருக்கிறேன், உள்ளே நுழையும்போது வரும் ஒரு மெல்லிய நறுமண வீசும், படம் பார்க்கும் சூழலை இனிதாக்கும்.

மாமாவுடன் கொத்தவால்சாவடி மாம்பழம் விற்கும் சந்திற்குள் செல்லும் போது பல ரக மாம்பழங்கள் சேர்ந்த ஒட்டுமொத்த வாசம் நினைவில் நிற்கிறது.

பள்ளியில் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர், எப்போதும் குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு வருவார். அவர் வகுப்பில் நுழைந்ததும், வகுப்பறை முழுதும் குட்டிகூர வாசனை காற்றில் பரவியிருக்கும். யாராவது குட்டிகூர வாசனைப் பொடி பூசிக்கொண்டு எதிரில் வந்தால் அந்த ஆசிரியர் முகம் என் மனதில் வந்து போகிறது.

சில வீடுகளில் உள்ள பூஜையறையில் நறுமணம் கமழும் ஊதுவத்தி வாசனை மனதுக்கு இதமாக இருக்கும். "நீங்கள் என்ன ஊதுவத்தி உபயோகப்பத்துறீங்க", என்று கேட்கவா முடியும்? நானும் நிறைய ஊதுவத்தியெல்லாம் வாங்கி உபயோகபடுத்தியாச்சு, ஆனால் அதுபோல ஒரு வாசனை இல்லை.

சமீபத்தில் சைக்கிள் ப்ராண்ட் தயாரிப்பான "WOODS" என்ற சந்தன ஊதுவத்தியை வாங்கி உபயோகப்படுத்தினேன். அடடா என்ன நறுமணம். இதே நறுமணத்தைச் சாதாரணச் சந்தனம் கலந்த சாம்பிராணி தூப் தருகிறது.

திருவையாறு ஐயாறப்பர் கோவில் தென்கோபுர வாசலில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் அருகில் உள்ள கடையில் ஐந்து ரூபாய் கொடுத்துக் குங்கிலியம் பொட்டலம் வாங்கி இங்குள்ள குண்டத்தில் அர்ப்பணிப்பார்கள். இதனால் விஷ ஜந்து கடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்

கோவில்களில் அபிஷேகம்,அலங்காரம் முடிந்து, காண்பிக்கபடும் குங்கிலியம் தூபம் மனதுக்கு ரம்மியமாக இருக்கும்.
 
பொதுவாகச் சாம்பிராணி புகை வாசம் நல்லது. விசேஷ நாட்களிலோ அல்லது வெள்ளிதோறும் சாம்பிராணி தூபம் காண்பித்தால் கண் திருஷ்டி விலகும் என்பார்கள். காதி வஸ்திராலயம் அல்லது பாரிமுனை கந்தசாமி தெருவில் உள்ள கடைகளில் ஏகப்பட்ட சாம்பிராணி வகைகள் கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம்.

வீடு முழுதும் வாசம் கமழ ரூம்ஸ் ஸ்பிரே மிதமாக அடித்துவிட்டால் போதும். சந்தையில் ஏகப்பட்ட நறுமணங்களில் ரூம்ஸ் ஸ்பிரே கிடைக்கிறது. தானியங்கி கருவியும் விற்கிறது, குறிப்பிட்ட இடைவெளியில் 'விசுக்', 'விசுக்' என்று நறுமணத்தைத் தெளிக்கும்.

நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடையில் வேலை செய்தபோது, போட்டிருக்கும் சட்டை எப்போதும் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். குளித்த பிறகும் அந்த வாசம் விடாது. இப்போது பாரிமுனை கந்தசாமி கோவில் தெரு நாட்டு மருந்து-குங்குமம்-மஞ்சள் கடைப் பக்கம் போனால் பழைய ஞாபகம் எல்லாம் வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னூஜ் என்னும் ஊரில் கடந்த நானூறு வருடங்களுக்கு மேலாக இயற்கைப் பொருட்கள் கொண்டு வாசனைத் திரவியங்கள் தயாரித்து வருகிறார்கள். இங்கிருந்து உலக நாடுகளுக்கு வாசனை பொருட்கள் ஏற்றுமதியாகிறது. ஆக்ராவிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கன்னூஜ். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.
சமீபத்தில் தி ஹிந்து தமிழ் நாளிதழில் தஞ்சாவூர் கவிராயர் எழுதிய கட்டுரையில் தஞ்சாவூரில் இன்றும் செயல்படும் நூறு ஆண்டுகள் பழமையான அப்துல் ரஹீம் அத்தர் கடை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
 
எனது நண்பர் ஒருவருக்குத் தலையில் ஏற்பட்ட காயத்தால் வாசனையை உணர முடியவில்லை.  இப்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.  நறுமணம் இல்லா வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

மறந்துவிட்டேன், முதல் மழை பூமியை நனைக்கும் போது வரும் அந்தக் கதகதப்பான மண் வாசனையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

நறுமணம் நல்ல மனநிலையை (Mood) தூண்டும். நம் மூலையில் பதிவாயிருக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் ஒரு கதை உண்டு. பழைய ஞாபகங்களைக் கிளறி விடும் சக்தி வாசத்துக்கு உண்டு.

உங்களுக்குப் பிடித்த வாசனை எது? ஏன் என்பதைப் பின்னூட்டதில் குறிப்பிடவும்.

வாசம் முற்றிய நிலையே நாற்றமோ?.


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

Friday, 5 April 2019

பரத் அனி நேனு (2018)

பரத் அனி நேனு (பரத் எனும் நான்) - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்த படம்.  சமகால அரசியலை மிகத் தீவிரமாகவும் /அழகாகச் சொன்ன படம்.

மெத்தப் படித்தவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாநில முதல்வராகிறான், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் போது, கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஏற்படுத்தும் இடையூறுகள், வீண் அவதூறுகளை எப்படி முறியடித்து மீண்டும் முதல்வராகிறான் என்பது மீதி கதை.

திரைப்படம் என்பது முழுக்க முழுக்க இயக்குநர் மீடியம்.  இயக்குநரின் குமுறல்களை நாயகன் வாயிலாக வெளிப்படுவதை அங்கங்கே சில இடங்களில் பளிச்.

கட்சித் தலைமை யாரை முதல்வராக நிறுத்தினாலும். தலைமைக்கு விசுவாசமாக நடந்துகொள்ளவேண்டும். தலைமையை மீறி யார் மீதும் கை வைக்க முடியாது.  அப்படி கை வைத்தால் வீண் அவதூற்றுக்கு ஆளாக வேண்டிவரும். கெட்ட அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் ஊடகத்தை வைத்து நாயகன் பெயரை டேமேஜ் செய்ய, அதனால் பதவி இழக்கிறான்.  பிறகு நாயகன் விளக்கம் தரும் அந்த பிரஸ் மீட் காட்சி அருமை.

போக்குவரத்து விதிகளை மதிக்காத மக்கள் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையாகட்டும், கல்வி, மருத்துவத்துறையில் உள்ள சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டவும் இயக்குநர் தவறவில்லை. அதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்  இயக்குநர் கொரட்டால சிவா.

தலைநகரத்தில் போடும் நலத்திட்டங்கள் குக்கிராமங்கள் வரை போய்ச் சேர்வதில்லை.  சாலை அமைப்பதாக இருந்தாலும் சரி, குழாய் பதிப்பதாக இருந்தாலும் சரி தலைநகரிலிருந்து அனுமதி வந்தால் தான் விடிவு என்ற நிலைமையை மாற்ற எல்லா கிராம பஞ்சாயத்துக்கும் கோடி ரூபாய் என்ற திட்டத்தை முதல்வர் கொண்டுவர, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்கள், அதற்கு முதல்வர் முன்வைக்கும் காரணங்கள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

தொகுதியை பற்றி முழுசா தெரிந்தவன் போட்டியிட முடியாத நிலைமை தான் இன்றும் நீடிக்கிறது. அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் புரிந்து, தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிட்டு ஒரு சாமானியனைச் சட்டமன்றத்துக்குத் தெரிந்தெடுக்க உதவுவார்.  

துர்கா மஹாலில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் அருமை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம்.  சட்டமன்ற அரங்க வடிவமைப்பு அட்டகாசம், நிஜ சட்டமன்றத்தையே கண்முன் கொண்டுவந்திருப்பர் கலை இயக்குநர் திரு சுரேஷ் செல்வராஜன்.

தேவையற்ற ட்விஸ்டுகள், திணிக்கப்பட்ட நகைசுவைக்காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் போன்ற அலப்பறைகள் இல்லாமல், படம் நேர்கோட்டில் சீராகப் பயணிக்கிறது.

சமீபத்தில் வந்த லூசிபர் மலையாள படமும் சமகால அரசியலைப் பேசுகிறது. ஆனால் தீர்வை முன் வைக்கவில்லை. மலையாளத்தில் வந்த தெலுங்கு படம் போல கமர்ஷியலாக இருக்க, பரத் அனி நேனு - தெலுங்கில் வந்த மலையாள படம் போல சீரியசாக இருக்கிறது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 3 April 2019

மரபு கட்டுமான வீடு - ஒரு பார்வை


லார்ரி பேக்கர் - பிரிட்டனில் கட்டிடக் கலை பயின்று இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற அறிஞர். காந்தியுடனான சந்திப்பு, அவர் வாழ்க்கையை மாற்றியது. கடைசி வரை அதில் உறுதியாக நின்றார். அவருடைய கொள்கை வெகு எளிது "நாம் இருக்கும் இடத்தை சுற்றி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கிடைக்கும் கட்டுமான பொருட்களை வைத்தே உறுதியான வீட்டைக் கட்டலாம். இதனால் பெருமளவு செலவு குறையும், பணத்தை மிச்சப்படுத்தலாம். கட்டிடமும் காலத்துக்கும் வரும்"

சமீபத்தில் நண்பர் ஒருவர், கவுதம் பாட்டியா எழுதிய லார்ரி பேக்கர் (பென்குவின் பதிப்பு) - படிக்கக் கொடுத்த புத்தகத்தில் உள்ளது மேலே சொன்னது.

என்னுடைய கிராமத்தில் எனக்குச் சிறிய இடம் உள்ளது. வீடு கட்டலாம் என்ற எண்ணம். ஆடம்பரமாக இல்லாமல் என் கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து லார்ரி பேக்கர் பாணியில் வீடு கட்டலாம் என்றுமுயற்சித்த போது கிடைத்த தகவல்கள் கீழே:

லார்ரி பேக்கர் முறையைப் பின்பற்றி வீடு கட்டும் வல்லுநர்கள் அங்கங்கே இருக்கிறார்கள். மரபு கட்டுமானம் என்ற பெயரில் சிலர் இயங்கி வருகிறார்கள். அவர்களிடம் விசாரித்ததில் மரபு கட்டுமானம் முறையை மக்கள் இன்னும் சந்தேகத்துடன் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். 

நாங்கள் இருந்த பழைய வீடு முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்ட ஒட்டு வீடு. சிமெண்ட் தரை, வெளியில் இரண்டு பக்கமும் திண்ணை.  காலி இடத்தில் செடி கொடிகள் நட்டு அந்த இடத்தை அழகாக வைத்துக்கொண்டோம். அப்போது நிறையக் கோழிகள் வளர்த்தோம். வெய்யிலாக இருந்தாலும் சரி மழையாக இருந்தாலும் சரி எந்தவித பாதிப்பும் இல்லாமல், இருபது வருடங்கள் எந்தச் செலவும் வைக்கவில்லை.
மரபு கட்டுமான வீடு

புதிதாக வீடு கட்டிய போது பழைய வீட்டை இடிக்க முடிவில்லை, மண் வீடு அவ்வளவு உறுதி.

லார்ரி பேக்கர் முறையில் கட்டப்பட்ட எத்தனையோ வீடுகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

கேரளா மாநில மக்கள் இன்றும் பின்பற்றும் லார்ரி பேக்கர் முறையிலான வீடு அழகாக இருக்கிறது. லார்ரி பேக்கர் பாணியிலான கட்டுமான முறைகள் / நுணுக்கங்கள் கேரளா மாநில கலாச்சாரத்தில் இரண்டறக்கலந்தது. இயல்பாகவே பின்பற்றப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் முக்கிய அரசு கட்டிடங்கள் லார்ரி பேக்கர்  வடிவமைத்து, குறைந்த செலவில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அவரிடம் பயின்றவர்கள் / அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் /
திருவனந்தபுரத்தில் உள்ள லார்ரி பேக்கர் ஹாபிடேட் மையம் அல்லது பாண்டிச்சேரி ஆரோவில்லில் கட்டிட ஆராய்ச்சி பள்ளியில் நடத்தப்படும் லார்ரி பேக்கர் கட்டுமான முறைகள் - பயிற்சி முகாம் வகுப்பில் சேர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் என ஆங்காங்கே தங்கள் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். சரியான ஆளைத் தேர்ந்தெடுப்பது தான் முக்கியம்.  அவர்களுடைய முந்தைய திட்டப்பணிகளை நேரில் சென்று விசாரித்துக் கண்டு வரவேண்டும். 

இன்னும் சொல்லப்போனால் மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு குறைந்த செலவு தான் பிடிக்கும் என்று தோன்றுகிறது.  காரணம் சிமெண்ட், மணல் மற்றும் செங்கல் பயன்பாடு குறைவது. அதற்குப் பதில் சுண்ணாம்பு கலவை, புளித்த மண் சுட்ட செங்கல் அல்லது அழுத்தப்பட்ட மண் கற்கள் (CSEB Blocks), மற்றும் பல பொருட்கள் தேவை. அதை கட்டுனரே ஏற்பாடு செய்து விடுவார்.

எங்களூரில் சுண்ணாம்பு கிளிஞ்சில்கள் விற்கும் கடை இருந்தது.  பொங்கல் பண்டிகை வரும் சில வாரங்களுக்கு முன்பு சுண்ணாம்பு கிளிஞ்சில்களை வாங்கி வந்து, தண்ணீரில் ஊறவைத்து, சுண்ணாம்பு அடிப்போம்.  அந்த பாத்திரம் அடியில் கை வைத்தால் சூடாக இருக்கும்.  வெய்யில் காலத்தில் வீடு குளுமை குளுமை கூல் கூல். இப்போது  சுண்ணாம்பு கிளிஞ்சில்கள்  விற்கும் கடையை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

மொசைக் தரை அல்லது சிவப்பு ஆக்சைடு தரை கால் பாதங்களுக்கு நல்லது மற்றும் வீட்டை குளுமையாக வைத்திருக்கும். ஆனால் மொசைக் தரை / சிவப்பு ஆக்சைடு தரை போட முன்பு ஆட்கள் இருந்தார்கள். இப்போது அவர்களும் இல்லை. வெளி மாவட்டங்களிருந்து தான் கூடி வர வேண்டும்.  அதற்காகும் செலவுகள் தனி. அதையும் கட்டுனரே ஏற்பாடு செய்து தருகிறார்.

மரபு கட்டுமான முறையில் கட்டப்பட்ட வீடுகளைப் பார்த்தால், மற்ற வீடுகள் மீது உங்கள் மனம் செல்லாது. காரணம் நேர்த்தியாகவும், அழகாகவும், எளிமையாகவும் அதே சமயத்தில் ஆடம்பரமாகவும் இருக்கும்.

நீங்கள் கோடி ரூபாய் கொட்டி வீடு கட்டியிருந்தாலும், சில லட்சங்கள் செலவழித்துக் கட்டிய மரபு மட்டுமான வீடு உங்களுக்குப் பிடிக்கும் காரணம் மேலே சொன்னது தான்.

லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமான முறையில் கட்டப்படும் வீடு தான் உங்கள் கனவு இல்லமெனில்.  மரபு வீடு கட்டுநரைச் சுதந்திரமாக இயங்க விட வேண்டும்.  அவர் கேட்பதை வாங்கி கொடுக்க வேண்டும்.  இறுதி வடிவம் பெறும்வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும்.

இத்தகைய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் வசதி உண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்

உங்களுக்கும் லார்ரி பேக்கர் பாணி அல்லது மரபு கட்டுமானம் பற்றிய புரிதல் இருக்கவேண்டும் (அடிப்படை விஷயங்கள்).  இணையத்தில் பார்த்து / கேட்டு / படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு http://agriwiki.in / http://www.vernarch.com போன்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் அல்லது கவுதம் பாட்டியா எழுதிய Laurie Baker: Life, Work, Writings என்ற புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

விரைவில் என்னுடைய லார்ரி பேக்கர் பாணியிலான மரபு கட்டுமான வீட்டு வேலை முடிந்ததும் புகைப்படங்களைப் பதிவிடுகிறேன்.

மரபு கட்டுமான வீடு கட்ட தேவையான தகவல்களை பெற கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் :


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி

Saturday, 30 March 2019

லூசிபர் (2019)

டியன் படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் லூசிபர்.  முரளி கோபியின் கதையில், பிரிதிவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகும் முதல் படம்.  சரி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

மாநில முதலமைச்சரின் மரணம். இரண்டாம் இடத்தில இருக்கும் நபர் (சாய் குமார் ) முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்.   அதைத் தொடர்ந்து வரும் குழப்பங்கள். முதல்வர் குடும்பத்தைச் சூழும் சூழ்ச்சிகள். அதை எப்படி மோகன்லால் முறியடித்து  முடித்துவைக்கிறார் என்பதே மீதி கதை.

நாம் பார்க்கும் அரசியல் முற்றிலும் வேறு. உள்ளே நடக்கும் விஷயங்கள் வேறு. வாரிசு அரசியல், அரசியல் கட்சிகளுக்குப் பணம் எப்படி வருகிறது. அரசியல் தொடர்பில்லாதவர்களின் ஆதிக்கம். ஆளும்கட்சியில் அவர்களுடைய தலையீடு என்பதையெல்லாம் இப்படத்தில் விரிவாகக் காணலாம்.  

லாலேட்டனின் அமைதியான, ஆர்பாட்டமில்லாத நடிப்பு.  வசனம் மொத்தமே இரண்டு பக்கங்களில் அடங்கிவிடும்.  மோகன்லால் நடித்த முந்தய சூப்பர்ஹிட் படங்களான இருபத்தியோராம் நூற்றாண்டு, நரசிம்ஹம் மற்றும் ராவணப்பிரபு வரிசையில் இப்படம் சேரும். இடைவேளைக்கு முந்தய ஆக்ஷன் பிளாக் மற்றும் சிறையில் நடக்கும் ஆக்ஷன் பிளாக் மாஸ்.

முதலைச்சரின் வாரிசாக வரும் டொவினோ தாமஸ், மகளாக மஞ்சுவாரியர், இயக்குனர் பாசில், வில்லன்கள் விவேக் ஓப்ராய் மற்றும் சாய் குமார் என அனைவரும் தம் பங்கினை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

கடைசி இருபது நிமிடம் இழுவை. தெலுங்கு மசாலா படத்தை நினைவூட்டுகிறது. ஒருவேளை தெலுங்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்தவோ என்னவோ. பிரிதிவிராஜுக்கு முதல் படம் போன்று தெரியவில்லை. அனுபவம் வாய்ந்த இயக்குனர் இயக்கியது போல இருக்கிறது லூசிபர் படம்.

கொசுறு: லூசிபர் என்ற பெயரில் அமெரிக்க ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் பாண்டஸி- நகைசுவை-திகில் கலந்த நாடக தொடர் 25.1.2016 முதல் மூன்று சீசன்களாக ஒளிபரப்பானது. இப்பொது நெட்பிலிக்ஸ் தொலைக்காட்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகவிருக்கிறது.    

இது மோகன்லால் ரசிகர்ளுக்கான படம்!!!

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 1 March 2019

சிறந்த யுடியூப் சேனல் (பகுதி - 1)

தினைந்து வருடங்களுக்கு முன்பு நம்முடைய திறமையை வெளிப்படுத்த எந்த மேடையும் கிடையாது ஆனால் இப்போது யுடியூப் தளம் அதற்கான சிறந்த பொது மேடையாக உள்ளதுசமீபகாலமாக நான் சில சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் குறிப்பிடத்தக்க சில சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் அதை பற்றி இப்போது  பேசுவோம்.

ஒரு யுடியூப்  சேனல் ஆரம்பிப்பதும், அதை தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல்திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை.   நல்ல கமெண்டுகளையும், நாராசமான கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவம் வேண்டும்.

சரி விசயத்துக்கு வருவோம்........

எபிக் லைப் (Epic Life):
ரோண்டா பைரன் எழுதிய ரகசியம் (The Secret) என்ற புத்தகத்தைக் கண்டிப்பாக முழுசாகப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அப்படிப் படிக்காதவர்கள், பாதியில்  நிறுத்தியவர்கள். எபிக் லைப் சேனலில் தி செகிரெட் புத்தகத்தின் அத்தனை பாடங்களையும் கேட்கலாம் / பார்க்கலாம். நல்ல குரல் வளம். confident - ஆன பேச்சு நம்மை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

As a Man Thinketh, Think and Grow Rich, Science of Getting Rich போன்ற புகழ் பெற்ற சுயமுன்னேற்ற நூல்களிலுருந்து பல சுவாரஸ்யமான விஷயங்களை எளிய தமிழில் சொல்லும் விதம் அருமை. அதுமட்டுமல்ல சமகாலத் தொழில்முனைவோர் பற்றிய அறிய தகவல்கள், அவர்கள் எப்படி ஜெயித்தார்கள், அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் பேசுகிறார் இந்த நண்பர்.

யார் இவர்? எப்படி இருப்பார்? எனத் தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தபோது, இப்பொது நேரிடையாக வீடியோவில் தோன்றி பேசுகிறார் திரு.குமார் அவர்கள். அதிகம் சொன்னால் சுவாரஸ்யமாகப் போய்விடும்.....நீங்களே பார்த்து / கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஏதோ ஒன்று நிச்சயம் இந்தச் சேனலில் கிடைக்கும்.

ஸ்பிரிட்யுவல் வேர்ல்ட் (Spiritual World):
நம்முடைய தினசரி பூஜை முறைகளில் செய்யவேண்டிய சின்ன, சின்ன மாற்றங்கள். குலதெய்வ வழிபாட்டின் அவசியம், குலதெய்வ வழிபாட்டு முறைகள், குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க எளிய வழிகள், குலதெய்வத்தை வீட்டினுள் வரழைக்கச் செய்யவேண்டிய பூஜைகள், விநாயகர் வழிபாட்டு முறைகள், அதன் மேன்மையும், மஹாலக்ஷ்மி பூஜையும், முறைகளும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஏற்ற தொன்மையான படையல் முறைகள், பூஜையில் இடம்பெறும் மஞ்சள், குங்குமம், வாழையிலை, வெற்றிலை, பாக்கு, பழம், பத்தி, சூடம், அவல், பொரிகடலை, அத்தர், வாசனை பூக்கள் போன்றைவைகளின் அவசியம். கடல் குளித்தளின் நன்மை. வியாபாரம் செழிக்கச் செய்யவேண்டிய பூஜைகள், மார்வாடிகள் பின்பற்றும் பூஜை முறைகள். ஒரு ரூபாயை பயன்படுத்தி உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பது எப்படி? திருநங்கை கையால் வாங்கும் முனைமுறியாத மஞ்சளின் மகிமை. நாஞ்சில் தமிழில், புரியும்படியாக எடுத்துரைக்கும் பாங்கு அருமை. வேறு பல விஷயங்களும் உண்டு, அதையெல்லாம் விடுத்து, உங்கள் பூஜை முறைகளைச் செம்மைப்படுத்த இந்தச் சேனலை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரண்யா பிரமோத்:
ஓடிய பெண்மணி அழகான தமிழில் தொகுத்து வழக்கும் ஆரோக்கியமான வட இந்திய, தென் இந்திய சமையல் குறிப்புக்கள் / செய்முறைகள் மற்றும் குழந்தைகள் உடல் எடை கூட, குழந்தைகளுக்குத் தேவையான வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய உணவு / கஞ்சி / சிற்றுண்டி வகைகள், எண்ணெய் இல்லாமல் பொறிக்கக்கூடிய சிற்றுண்டி வகைகள், தொப்பையைக் குறைக்க / உடல் இளைக்க எளிய கஷாய வகைகள் செய்முறை விளக்கத்துடன் உள்ள விடியோக்களைப் பார்த்து / கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை கரைக்கக்கூடிய கஷாயத்தைத் தினமும் காலையில் பருகிவருகிறேன். Good Result. நீங்களும் Try பண்ணலாம்.

குழந்தைகளுக்கு பிடித்த/ தேவையான உணவு வகைகளைப் பற்றி அதிக விடியோக்களை  இந்தப் பெண்மணி போட்டுள்ளார். பார்த்து / கேட்டுப் பயன்பெறலாம்.

சாணக்கியன்:
ஈரோட்டைச் சேர்ந்த திருமதி ஜான்சி என்பவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் வாய்ப்புகள் பற்றி விலாவரியாக (முதலீடு தொகை, எந்திரம் வாங்கும் செலவுஎங்கே கிடைக்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை அழகாகப் பேக் செய்வது எப்படி, சந்தைப்படுத்துவது எப்படிப் போன்ற தகவல்கள்) விளக்கி வீடியோ பதிவு போடுகிறார். அதுமட்டுமல்ல ஆங்கிலம் சரளமாகப் பேச, சரக்கு சேவை வரி என்றால் என்ன, சரக்கு மற்றும் சேவை வரி எண் பெறுவது எப்படி, சரக்கு மற்றும் சேவை வரி தாக்கல் செய்வது எப்படி? - எளிய தமிழில் உதாரண விளக்கத்துடன் சொல்லிக்கொடுக்கிறார்.

இவர் Ask Jhansi என்ற இன்னொரு சேனலில் தென்னிந்திய சமையல், சுவையான ஊறுகாய் வகைகள் பற்றிய செய்முறை மற்றும் பல விடியோக்கள் போட்டுள்ளார் பார்த்து / கேட்டுப் பயன்பெறலாம்,.

ஆலயம் செல்வீர்:
 இதுவும் ஒரு சுவாரஸ்யமான ஆன்மிக சேனல்சித்தர்கள் பற்றிய தகவல்கள், அவர்கள் அருளிய பாசுரங்கள், மருத்துவக் குறிப்புகள், ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் வழிபட வேண்டிய சித்தர்கள்.  (என்னுடைய நட்சத்திரக்குரிய சித்தரை சமீபத்தில் வழிபட்டேன்), பூஜை முறைகள், குளிகை கால பலன்கள், சோடகக்கலை, நட்சத்திர நாள், பௌர்ணமி, அமாவாசை  வழிபாட்டின் நன்மைகள் போன்ற ஏராளமான விடியோக்கள் உள்ளன. உங்களுக்கு தேவையானதை கேட்டு / பார்த்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.    

இரண்டாம் பகுதியில் இன்னும் சில  சேனல்களை பற்றி பேசுவோம்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி