Wonderful Shopping@Amazon

Friday 26 April 2019

மூளையின் போதை

ன் அலுவலகத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவை கட்டுரைகளாக முகநூலில் பதிவிடுவது வழக்கம். அதைப் படிக்கும் நண்பர்கள் "நீ ஏன் எழுதக்கூடாது" என்பார்கள், என் தோழியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
என் மாமாவிடம் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தேன். அவர் அதை அவர் தன்னுடைய ப்ளாகில் வெளியிட்டார். “ஒரு பேனாவின் முடி திறக்கப்பட்டது, ஒரு படைப்பாளியின் கற்பனை சிறகுகள் விரிந்தது” என்ற தோழியின் புகழாரம் மூலையில் போதை ஏற்றியது. இரவு முழுக்க என் பதிவை நானே திரும்பத் திரும்பப் படித்தேன். நான் எழுத்தாளன் ஆனேன் என்ற எண்ணம் நெஞ்சில் நிழலாடியது. அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு மனது துடித்தது.
 
ஒருநாள், காலை தினசரியில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது (போதை மூளை கண்ணில்பட வைத்தது) “படைப்பாளிகளே, உங்கள் புத்தகத்தை நீங்களே வெளியிடலாம்” . ஒரு நாள் பயிற்சிப் பட்டறை. இன்றே முன்பதிவு செய்யுங்கள். நுழைவு கட்டணம் ரூபாய் ஐந்நூறு" என்றிருந்தது. ஆசை அதிகமானது நாமும் புத்தகம் எழுதுவோம் என்று . மனம் மட்டும் பொறுமை என்றது, மூளை அதைக் கேட்கவே இல்லை. முன்பதிவு செய்து அங்குச் சென்றேன்.  
 
அழகான பெண்கள் வரவேற்றார்கள், ரூபாய் 500ஐ பெற்றுக் கொண்டு அரங்கினுள் அனுமதித்தார்கள், மனதை வருடும் இசை, இதமான மெல்லிய வாசனை அந்த அரங்கை நிறைத்தது. என்னைப் போல் சிலர் வந்திருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து, மேடையில் ஒருவர் தோன்றினார். தன்னை இவ்விதம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
 
"நான் இன்று புத்தகம் எழுதுகிறேன், பல விருதுகள் வாங்கியிருக்கிறேன், பல படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறேன், நான் தான் உங்கள் கோச்.... எப்போதும் என் வகுப்பு நிரம்பி வழியும், இன்று சிறப்பு வகுப்பு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு, ஐந்து பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். என் மூளை விழித்தது. ஐந்து பேர் வந்ததும் வகுப்புத் தொடங்கியது.
 
தன்னைத் தானே பெருமையாக ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு. பவர்பாய்ண்ட் விளக்கக்காட்சி மூலம் ஒரு சைக்கிளைக் காண்பித்து “10 வருடங்கள் முன்பு ஒருவர் இதில் பொருட்கள் விற்று தான் வாழ்க்கை நடத்தினார், இன்று அவர் நூறு கோடிக்கு வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார், இப்போது அவரிடம் மூன்று ஆடி வாகனங்கள் இருக்கிறது, வியாபாரத்தில் கவனம் செலுத்தியதால் அவரிடமிருந்த படைப்பாற்றல் ஒளிந்து கொண்டது. ஆனால் அவருடைய ஆசை, தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று, அவர் இந்த வகுப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன் வந்தார், அவரை ஒரு படைப்பாளியாக உருமாற்றினேன். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் எழுதிய புத்தகம் வெளிவந்து, இன்று அது சக்கை போடு போடுகிறது" என்றார்.  
 
பிறகு மாமேதைகள் கதைகள், கடின உழைப்பின் கதைகள், விடாமுயற்சி கதைகள் என்று ஸ்லைடு மேல் ஸ்லைடு போட்டு வெறியேற்றினார். நீங்களும் இவர் போல் ஆகலாம், அவர் போல் ஆகலாம், உங்களால் முடியும், உங்களால் முடியாதது ஏதுமில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை, நேரம் ஒதுக்கி வந்திருக்கும் நீங்கள் தான் நிஜப் படைப்பாளி. நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றப் பிறந்தவர்கள். மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்னுடைய எட்டு நாள் பயிற்சி வகுப்பிற்கு வந்து பயன்பெறுங்கள் என்று கூறி இடைவேளை விட்டார் . மூளையின் மொத்த போதையும் இறங்கியது.

அடுத்து, ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஒரு தலைப்பு கொடுத்து எழுதச் சொன்னார். பிறகு, "நீங்கள் எழுதும் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து என்
அடுத்த புத்தகத்தில் வெளியிடுவேன், இது தான் அந்தப் புத்தகத்தின் அட்டை மற்றும் அதன் தலைப்பு என்று வண்ணமயமான அட்டையைக் காட்டினார். அட்டை தான் புத்தகத்தின் முகம், இதற்கான செலவு மட்டும் ரூபாய் 30,000. என் வகுப்பில் சேர்ந்தால் இரண்டாவது நாள் உங்கள் புத்தக

தலைப்பு, மூன்றாவது நாள் இதுபோல் உங்கள் புத்தக அட்டை கிடைத்துவிடும். முற்றிலும் இலவசம் என்றார். மூளை சிந்திக்கத் தொடங்கியது “மவுண்டு ரோடு DTP நிலையத்தில் கொடுத்தால் வெறும் 300 ரூபாய்க்குக் கிடைக்கும்" என்றது. அட்டையை வீட்டில் மாற்றி வைத்து (உந்து சக்தியாம்!), தினமும் அதைப் பார்க்க வேண்டுமாம், அப்போதுதான் 40

நாளில் புத்தகத்தை நிறைவு செய்ய முடியுமாம். 41வது நாள் உங்கள் படைப்பில் ஒரு புத்தகம் தயார். புத்தகம் சந்தைப்படுத்துதல் செலவு ரூபாய் ஒரு லட்சம் முதல் ஆறு லட்சம் வரை செலவு ஆகுமாம். 3 மொழிகள், 8 நாடுகளில் உங்கள் புத்தகத்தை விற்றுத் தருகிறோம் அதுவும் இலவசம், வகுப்பில் சேர்வோருக்கு என்றார்.

வகுப்பு தேதியைக் கூறிவிட்டு. நட்சத்திர விடுதியில் முழு நாள் பயிற்சி வகுப்பு, காலை சிற்றுண்டி, சுவையான மதிய உணவு, என்றும், அத்தனையும் சேர்த்து வெறும் ஒரு லட்சம் +GST என்றார். இன்றே ரூபாய் 10000 கட்டி பதிவு செய்தால் 35% தள்ளுபடி வேறு. “உங்கள் கற்பனை, உங்கள் எழுத்து, நான் ஒரு வழிகாட்டியே ” என்று முடித்தார் . நின்ற பேருந்தைத் தள்ளாமல் “ஏ தள்ளு தள்ளு தள்ளு” என்று ABCD படத்தில் வரும் வடிவேல் நகைச்சுவை தான் மூலையில் ஓடியது. சிரித்தும்விட்டேன், அவரும் அதைக் கவனித்தார் நால்வரில் ஒருவர் பண அட்டையை மூலம் கட்டண முன்பதிவு செய்தார்.

நான் பிறகு பார்க்கலாம் என்று கிளம்பினேன். அவர் என்னை ஒரு மந்திர புன்னகையோடு வழியனுப்பினார். பின்னர், தூண்டிலில் சிக்காத மீனைப் போல நழுவினேன்.

என் மனசு சொன்னது “நான் அப்பவே சொன்னேன் கேட்டியா". என் மூளையோ “நம் மூளையை வைத்துச் சம்பாதிக்கப் பார்த்த அவன் மூளையின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தது" .

தோழி சொன்ன வார்த்தைகளை மனது புரிந்துகொண்டு. நடந்தவற்றை அதை ஒரு கதையாக்கி உங்கள் முன் சமர்ப்பித்தது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி தளத்திற்காக இரா.லோகேஷ் 🙏 

1 comment:

  1. எகஎ அப்படினா!? எப்படி கதை எழுதுவது இது தபால் மூலம் கதை எழுத பயிற்சி தரும் நிறுவனம். இந்த பயிற்சி நிலையத்தை நடத்தியவர் எழுத்தாளர் அமரர் ரா கி ரங்கராஜன் சுருக்கமா ராகிரா அவர் பேரை சுருக்கி கூப்பிடும் விதத்திலேயே அவருடைய பயிற்சி நிலைய பெயரும் இருந்தது இதில் சில நூறு பேர் அவரிடம் பயிற்சி பெற்றதும் அதில் சிலர் படைப்புகள் குமுதம் ஆனந்தவிகடன் மற்றும் சில பத்திரிகைகளில் வந்ததும் உண்மை- இவையெல்லாம் 1980 களில் நடந்தது. ஆனால் மிகவும் பிரபலமான படைப்பாளிகள் உருவானார்களா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் கட்டுரை சொல்லும் கருத்து வேறு மாதிரியானது. சிலரின் எழுத வேண்டும், தம் படைப்புகள் நூல் வடிவம் பெற்று பல்வேறு புக் ஸ்டோர்களில் காட்சிபடுத்தப்பட்டு பல வாசகர்களை சென்றடைய வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகவைத்து மிக பெரிய அளவில் பணம் பண்ணி விடா துடிக்கும் வேட்கைதான் பெரிதாக தெரிகிறது. கால சூழலுக்கு ஏற்ற விதத்தில் இப்படியும் பணம் பண்ணலாம் என்று கிளம்பியுள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது- உங்கள் அனுபவம் மற்றவர்க்கு எச்சரிக்கை!

    ReplyDelete