Wonderful Shopping@Amazon

Wednesday, 29 September 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-106

 "ஹம்(1991)"

"ஹம்" - இயக்குநர் முகுல் ஆனந்த் இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கோவிந்தா நடித்து 1991-ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றியைப் பெற்ற படம்.

"ஹம்" திரைப்படத்தை என் பள்ளி இறுதியாண்டு நண்பர்களோடு பார்த்தது நினைவிருக்கிறது. நம்மூரிலும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. நடிகர் கோவிந்தா மற்றும் ரஜினிகாந்த் அமிதாப்பச்சனுக்குத் தம்பிகளாக நடித்திருப்பார்கள். கொஞ்ச நாள் கழித்து இதே மூலக்கதையை தழுவி ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் "பாட்சா"

கவிஞர் ஆனந்த் பாக்க்ஷி எழுத்தில், இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையில், இந்த படத்தில் இடம் பெற்ற தொடக்கப் பாடலான "சும்மா சும்மா தே தே", இந்தியாவையே அதிரவைத்தது. அமிதாப்-ஜி கண்களை உருட்டி உருட்டி ஆடும் நடனம் தான் என்ன. அடடா....வேற லெவல் எனர்ஜி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

இத்தனை எனர்ஜிக்கு முன் ஒரு துயர சம்பவம் நடந்தது, சரியாக 39 வருடங்களுக்கு முன், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் ................

1982-ஆம் ஆண்டு....!

"கூலி" படத்தின் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப்படுகிறது. நடிகர் புனீத் இஸ்ஸர்-உடன் சண்டையிடுகையில் கால் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் சுயநினைவிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செயின்ட் பிலோமினா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்குப் பின் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தியாவே அவருக்காகப் பிராத்தித்தது என்று தான் சொல்லவேண்டும். ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தீவிர அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பல மாதங்களாக மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார்

பச்சனின் அசல் பிறந்தநாள் அக்டோபர் 11, ஆனால் அவரது ரசிகர்கள் ஆகஸ்ட் 2- இரண்டாவது பிறந்த நாளாக வாழ்த்துக்களுடன் சமூக வலைத்தளங்களை நிரப்புகிறார்கள்.

அவரது ரசிகர்களின் அன்பு, பிரார்த்தனை மற்றும் அக்கறையை நினைவுகூர்ந்து, பிக்பி  தனது வலைப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “இன்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்பு மற்றும் வாழ்த்துக்களை வெளிப்படுத்தும் அனைவருக்கும், என் நன்றியும், அன்பும் .. கேட்கவும் பார்க்கவும் ஒரு அற்புதமான அனுபவம் மற்றும் என் நல்வாழ்வுக்கான அக்கறையையும் பிரார்த்தனையையும் ....... நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி."

இங்கே ஒரு ட்விஸ்ட்.

சில வருடங்களுக்கு முன்பு பச்சன் அவர்கள் முழு உடல் பரிசோதனையின்போது, விபத்து-அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம்  பரவிய ஆஸ்திரேலியன் ஆன்டிஜென் ஹெப்படைடீஸ் பி வைரசால் அவருடைய கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதை மருத்துவர்கள்  கண்டறிந்தார்கள். சிகிச்சைக்குப் பின் இப்போது அவர் 25 சதவீத கல்லீரலுடன் தான் வாழ்ந்து வருகிறார்.

இப்போதும், அமிதாப்பச்சன் "கவுன் பனேகா கோரோபதி"-இன் புதிய சீசனை நடத்துகிறார். ராஷ்மிகா மந்தனாவுடன் இயக்குநர் விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில்  "குட்பை" படத்தில் நடிக்கிறார் மற்றும் தீபிகா படுகோனே-பிரபாஸுடன் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.

இது அந்த பாடல்.. கேட்டு மகிழுங்கள்.........


 

 
நன்றி: Google, "Indian Express"

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 

 

 



Thursday, 14 January 2021

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-105

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

காட்சி - 1: 1893-ஆம் ஆண்டு

சுமார் 127 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 11 அன்று, சுவாமி விவேகானந்தர், மதங்களின் பாராளுமன்றத்தின் சிகாகோ மாநாட்டில் சிறப்பான சொற்பொழிவு நிகழ்த்தினார். 1893-இல் இந்து மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய சுவாமி விவேகானந்தர் சகிப்புத்தன்மை, மதம் மற்றும் அனைத்து வகையான வெறித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியம் குறித்துப் பேசினார்.
 
காட்சி - 2 : 1963-ஆம் ஆண்டு

"எனக்கு ஒரு கனவு இருக்கிறது"

ஆகஸ்ட் 28, 1963 அன்று வேலை மற்றும் சுதந்திரத்திற்கான வாசிங்டன் பேரணியில் அமெரிக்கச் சிவில் உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய ஒரு பொது உரை "ஐ ஹேவ் எ ட்ரீம்", அதில் அவர் சிவில் மற்றும் பொருளாதார உரிமைகள் மீட்பு மற்றும் அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

காட்சி - 3 : 1964-ஆம் ஆண்டு

ரிவோனியா விசாரணையில் 1964 ஏப்ரல் 20 அன்று நெல்சன் மண்டேலா ஆற்றிய மூன்று மணி நேர உரையின் சாராம்சம் :"நான் இறக்கத் தயாராக இருக்கிறேன்".
 
காட்சி - 4:  2005- ஆம் ஆண்டு

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆற்றிய உரையின் முக்கியச் சாராம்சம் : "நம்மை நாமே முழுமையாக நம்புவது, எந்தத் துறையாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்க வேண்டும், நீங்கள் விரும்பும் நபரை இழக்காதீர்கள், மற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்".
 
இப்படி பேச்சைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். பேச்சு சமூக மாற்றத்தை உண்டாக்கவேண்டுமன்றி பதற்றத்தை உண்டாக்கக்கூடாது. குறைந்தபட்சம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் சரி.
  
நிற்க.
 
இன்றைக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். மைக் கிடைத்தால் போதும் பேசி தள்ளிவிட வேண்டியது அல்லது சமூக ஊடகங்களில் எதையாவது பேசிவிட்டுச் சர்ச்சையில் சிக்கினால் "நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை", "அது அவருடைய சொந்த கருத்து", "என்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது", "அது என்னுடைய பேச்சே அல்ல" இப்படிப் பல காரணங்களைப் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை கூறுவதை நாம் கேட்கலாம்.

சமீபத்திய உதாரணம்: பிரபல செய்தி சேனல் உரிமையாளர் மாநில அரசின் கடுங்கோபத்துக்கு ஆளானதும், பின்பு நீதிமன்ற பிணையில் வெளிவந்ததும் நினைவிருக்கலாம்.

எங்கேயோ படித்தது ஞாபகம் வருகிறது "இரண்டு வயது முதல் பேசக் கற்றுக்கொள்கிறோம், ஆனால் கடைசிவரை எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில்லை" இது எனக்கும் பொருந்தும். நானும் இப்படி ஏதாவது பேசி, பிறகு முழிப்பதுண்டு.

சில நேரங்களில் அலுவலகத்தில் நாள் முழுதும், மதிய இடைவேளைக்குப் பிறகும் தொடரும் மீட்டிங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் எனக்கு வரும் தூக்கம் இருக்கிறதே.. அப்பப்பா ..கட்டுப்படுத்தவே முடியாது. இதில் மேடையில் பேசுபவர் என்னைப் பார்த்துப் பேசுவது போல இருக்கும், அந்தச் சூழ்நிலையில் உங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படி இருக்குமென்று.

சிறு வயதில் அடிக்கடி வாரியார் ஸ்வாமிகள் அவர்களின் ஆன்மிகச் சொற்பொழிவு சென்னை தொலைக்காட்சியில் கேட்டதுண்டு.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை அயனாவரம் மார்க்கெட் பொதுக்கூட்டத்தில் திமுகத் தலைவர் கலைஞர் அவர்களின் மாமாவுடன் சென்று பேச்சைக் கேட்டிருக்கிறேன். அறிஞர் அண்ணாவின் எழுச்சிக்குப் பிறகு தான் மேடைப் பேச்சுக்குத் தமிழகத்தில் தனிக் கவுரவம் ஏற்பட்டது என்று சொல்வேன்.

தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், நடிகர் எஸ் எஸ் சந்திரன், நாஞ்சில் சம்பத் மற்றும் வைகோ இவர்களுடைய பேச்சு வெகு காலம் தமிழக அரசியல் மேடையை அலங்கரித்தது. முன்னர்ச் சொன்ன மூவரின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமுடியாது.

இன்றைய அரசியல் மேடைப் பேச்சு வெறும் அவதூறு நிறைந்த, சாரம் இல்லாத மற்றும் ஆவேச பேச்சாகிவிட்டது.

அண்ணா வழிவந்தவர்கள் கூட மேடைப் பேச்சில் தடுமாறுவது தான் அவலம்.

சரி நமக்கெதற்கு அதெல்லாம்.. நாம் விஷயத்துக்குச் செல்வோம்...

பிறகு அதிகம் கேட்டது காலஞ்சென்ற திருத் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடையது.

அம்மா சமையலறையில் எங்களுக்கும், அப்பாவுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருப்பார். நாங்கள் பள்ளிக்குத் தயாராக இருக்கும் ஐந்து நிமிட இடைவேளையில் காலஞ்சென்ற திரு தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் பேச்சைக் கேட்டுவிடுவோம். என்னுடைய வகுப்பில் அன்றைய விவாதப் பொருள் இவர் சொன்ன கதையில் வரும் நகைச்சுவை. இவருடைய பேச்சைக் கேட்காத நாளே இல்லை எனலாம்.

வரலாற்றில் அநேகமாகத் திட்டுமென மேடை ஏற்றப்பட்டவர்கள் தான் புகழ் பெற்றிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். அப்படித் தான் சென்னை வானொலியில் "பண்ணை இல்லம்"விவசாய நிகழ்ச்சியில் பேசி வந்த திரு சுவாமிநாதன் அவர்கள் "இன்று ஒரு தகவல்" பேச வந்தார். அது இவ்வளவு பெரிய தாக்கத்தையும், வெற்றியையும் பெரும் என்று அவரே கூட நினைத்திருக்கமாட்டார்.
அனைவருக்கும் புரியும்படியாக எளிய குரலில், தெளிவான நடையில் குட்டிக்கதை சொல்வார், கடைசியில் சிந்தனையை தூண்டும் நகைச்சுவையுடன் கதையை முடிப்பார்.

நான் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் வரை அவருடைய பேச்சைத் தொடர்ந்து கேட்டு வந்தேன். இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவருடைய பேச்சு இன்றும் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது.



நன்றி: Google

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 



"கிராக்" (2021)

"கிராக்" (2021)

 நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் திரைப்படம் பார்த்தது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எப்போதுமே திரையரங்கில் படம் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். கடைசியாக ஊரடங்கிற்கு முன்பு அல்லு அரவிந்த் நடித்து திருவிக்ரம் இயக்கிய "அலா வைகுண்டபுரமுலோ" படம் பார்த்தேன்

சரி விஷயத்துக்கு வருவோம்......

"கிராக்" படத்தின் முன்னோட்ட காணொளி என்னைப் படம் பார்க்கத் தூண்டியது. எனக்கு மட்டுமல்ல நீண்ட நாட்களாகத் திரையரங்கு சென்று படம் பார்க்கக் காத்திருந்த ஆந்திர சினிமா ரசிகர்களுக்கும் மாபெரும் விருந்தாக அமைந்திருக்கிறது இப்படம். அதற்கு முதல் நாள் வசூலே சாட்சி.

"கிராக்" கோபிசந்த்-ரவிதேஜா இணையில் வந்திருக்கும் மூன்றாவது படம். அநேகமாக இந்த வருடத்தின் முதல் தெலுங்கு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு ஆர்ட் படம் சுலபமாக எடுத்துவிடலாம், ஆனால் கமர்சியல் படம் எடுப்பது கொஞ்சம் சிரமம் தான். அனைத்துத் தரப்பு பார்வையாளர்களையும் படம் திருப்திப் படுத்தவேண்டும். அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இந்தப் படம் அப்படி இருந்ததா என்று கேட்டால், நிச்சயமாக இருந்தது என்று சொல்வேன்.

எனக்கு மாஸ் மகாராஜா ரவிதேஜா நடித்த படங்கள் பிடிக்கும் காரணம், படம் முழுதும் இழைந்தோடும் அவருடைய அந்த எனர்ஜி லெவல். படத்தினூடே வரும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் பிளாக் எனப் படத்தையே படத்தைக் கலகலப்பாகிவிடுவார். இந்தப் படத்திலும் அது கொஞ்சமும் குறையவில்லை.

வழக்கமான போலீஸ் கதை இல்லை. ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை. கமர்சியல் சினிமா ஃபார்முலா படி வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருந்தால் அதை முறியடிக்கக் கதாநாயகன் போராடுவார். இதில் சமுத்திரக்கனி வில்லன் கதாபாத்திரம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நமது கதாநாயகன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பது மீதி வெண் திரையில்.

ஸ்ருதிஹாசன்-ரவிதேஜா கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. துணைக் கதாபாத்திரங்கள் என்று சொன்னால் வரலக்ஷ்மி சரத்குமார், ஆளி மற்றும் பலர் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். எஸ் தமனின் இசையில் சில பாடல்கள் கேட்கத் தூண்டுகிறது மற்றும் பின்னணி இசை அருமை. ஸ்டண்ட் இயக்குநர்கள் ராம்-லக்ஷ்மன் இணையின் உழைப்பு ஒவ்வொரு ஆக்ஷன் ப்ளாகிலும் தெரிகிறது.

மொத்தத்தில் இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கும் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து "கிராக்"
 
 
நன்றி: Google

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 

 
 

Wednesday, 16 December 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-104

ராஜாவின் டவுன் பஸ் பாடல்கள்

காலை 6.00 மணி

கும்பகோணம் பேருந்து நிலையம் - திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலுக்குப் பரிகார பூஜை செய்ய மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்தில் உட்கார்ந்திருந்தோம். பயணிகள் வர வர பேருந்து நிரம்பியது. அப்போது பாடல்களை ஒலிக்கவிட்டார் ஓட்டுநர். 'கோவில்காளை' படத்தில், பாடகர் மனோ மற்றும் ஜானகி அம்மா பாடிய "சோலைக்குயில்கள் ரெண்டு " என்ற இனிமையான முதல் பாடல், பேருந்து கிளம்பியிருந்தது. பேருந்தில் அருமையான ஒளியமைப்புச் செய்திருந்தார்கள். பாடலில் இடைஇடையே வரும் தபேலா இசைக்கருவியின் சத்தம் கூடத் துல்லியமாகக் கேட்டது. இரண்டாவதாகப் 'பாண்டிய நாட்டுத் தங்கம்' படத்திலிருந்து "சிறு கூட்டுல..." பாடல் ஒளிபரப்பானது, அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கிவிட்டோம். கோவிலிலிருந்து தாங்கும் விடுதிக்குத் திரும்பியவுடன் இந்தப் பாடலை அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இளையராஜா பாடல்களைக் கேட்கத் தமிழகம் முழுதும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும் வேண்டுமாம் - இது நண்பனின் ஆசை. நீங்கள் தொலைக்காட்சியில் கேளுங்கள், அலைபேசியில் கேளுங்கள், சிறந்த தலையணியுடன் கேளுங்கள், வானொலியில் கேளுங்கள், காரில் கேளுங்கள் ஆனால் எல்லாவற்றையும் விடப் பேருந்தில் பயணம் செய்யும்போது ஜன்னலைப் பார்த்துக்கொண்டே இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது (அதே பாடல்கள் தான்) ரம்மியமாக ({வேறு மாதிரி) இருக்கும்.

ஒரு முறை தனியார் மொபஸல் பேருந்தில் பயணம் செய்யும்போது, இனிமையான ராஜா பாடல்கள் பயணத்தைச் சுகமாக்கியது. 'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற "நிலா காயுது ..." பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. பேருந்திலிருந்த பயணிகள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார்கள். இடையில் வரும் முத்த சத்தம் ..பயணிகள் முகத்தில் நமட்டுச் சிரிப்பு ..ஓட்டுநருக்கு என்ன தோன்றியதோ சடாரெனப் பாய்ந்து பாடலை மாற்றி விட்டார் .. என்ன செய்யச் சிலருக்கு இப்படியும் சங்கடம்.

நம்மிடம் இருப்பதை விட நம்மூர் ஓட்டுநர்களிடம் தான் இளையராஜாவின் அத்தனை பாடல்கள் அடங்கிய ஒலிநாடகள்/சிடிக்கள் இருக்கிறது. நீங்கள் பிரதி எடுக்கக் கேட்டுப் பாருங்களேன், அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்த கால் சென்டர் கார் ஓட்டுநர் வருத்தத்துடன் கூறியது : " ராஜா சார் பாட்டு கேசட்ட எவனோ ஆட்டயபோட்டான், கஷ்டப்பட்டுச் சேர்த்துவச்சது.." பின்னே உட்கார்ந்து வண்டி ஓட்டற்றவனுக்குத் தான் கஷ்டம் தெரியும், ராஜாவின் பாடல்கள் தான் அவர்களுக்குத் துணை. அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

இசைஞானியின் அதிகாரப்பூர்வ தலத்தில் "டவுன் பஸ் பாடல்கள் தொகுப்பை" கேட்டு மகிழுங்கள்.



நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-103

'டிக் டிக் டிக்' (1981)

வார இறுதி நாள் கமல்-மாதவி பாடல்களுடன் கழிந்தது. இதுவும் ஒரு துள்ளலான பாடல் தான். கமல்-மாதவி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் அபாரமாக இருக்கும். மாணவர் பருவத்தில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். 'மோனோ' இசை தான் அதிலேயே வயலின், கிட்டார் போன்ற இசை கருவிகளின் துல்லியமான இசை தடையின்றி காதில் பாய்ந்து, மனதில் பதிந்தது. இந்த பாடலை எப்போது கேட்டாலும் பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி, கமல்-மாதவி நடித்து 1981-ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி, ராஜா சார் இசையில் இடம்பெற்று, தாசேட்டன்-ஜென்ஸி பாடிய "பூ மலர்ந்திட .." என்ற இனிமையான Semi-classic பாடல்.  நடனத்தின்போது மாதவியின் கண்கள் அப்பப்பா Scorching Beauty.. என்ன ஓர் பாவம். பாடல் இடையில் தாசேட்டன் "ஐலவ்யூ, ஐலவ்யூ..ஐ லவ் யூ"....... என ஹம் செய்யும் அழகே அழகு.

"படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம்
நான் இருந்திட ஸநிதப மபதநி.."
 
சரி, நீங்களும் இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்:


 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி