Wonderful Shopping@Amazon

Wednesday, 13 December 2017

தூக்கத்தை மீட்போம்


"தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்"
                                   - கவிஞர் கண்ணதாசன்
நாங்கள் சிறுவர்களாயிருந்த போது மாலை 7.30 மணிக்கு இரவு உணவு முடித்துவிட்டு வானொலி ஒளிபரப்பாகும் விவிதபாரதி வர்த்தக நிகழ்ச்சியில் 'வண்ணச்சுடறில் இன்றுநாடகத்தை கேட்டுக்கொண்டே தூங்கிவிடுவோம்.

பள்ளி / கல்லூரி படிக்கும் போது கூட 9.30 மணிக்கு படுக்கைக்கு சென்று விடுவோம். வயது ஆக ஆக தூக்கம் குறைந்து விழித்திருக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிகரிக்கும் மன அழுத்தத்தால் தூக்கம் கெடுகிறது /தடைபடுகிறது.  மன அழுத்தம் / மன உளைச்சலால் எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
சில பேருக்கு புதிய இடம், புதிய சூழலில் படுத்தால் தூக்கம் வருவதில்லை.
பயணம் செய்யும்போது தூங்குபவர்கள் அனேகம் கார், பஸ், ரயில், விமானம் என எதிலும் உட்கார்ந்த உடன் தூங்கி விடுவார்கள், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
பஸ், ரெயிலில் பயணிக்கும்போது உடன் பயணம் செய்யும் சக பயணி நம் மேல் தூங்கி விழுவதையும் பார்க்கலாம். கொஞ்சம் நேராக கழித்து  நம்மை அறியாமல் நாமும் தூங்கி வழிய ஆரம்பிப்போம்.
தூங்குவதற்காகவே பயணம் செய்பவர்களும் உண்டு.  ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்யும்போது தூக்க வருவதேயில்லை. அதே மூன்றாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணம் செய்யும் போது படுத்த உடன் தூங்கிவிடுவேன், அதோடு சென்னையில் எழுவேன். 

புறநகர் ரயிலில் பயணம் செய்யும்போது இடம் கிடைத்தால் தூங்குவது உண்டு. சில சமயம் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தை தவறவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி பஸ் படித்து வீடு வந்து சேர்வதுண்டு.


பள்ளி / கல்லூரி கோடை விடுமுறையில் மொட்டை மாடியில் நண்பர்களுடன் தூங்குவோம். வீட்டை சுற்றி தென்னை மரங்கள். நல்ல காற்று வரும். அதோடு நல்ல உறக்கமும் வரும்.  காலையில் சூரியன் முகத்தில் விழும் வரை தூங்குவோம். திருட்டு பயம் காரணமாக இப்போதை மொட்டைமாடியில் படுக்க பயமாயிருக்கிறது.

ஒரு நாள் லீவு போட்டு நாள் முழுவதும் தூங்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் இன்னும் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை காரணம் அப்பொழுதும் வீட்டில் ஏதாவது  வேலை இருக்கும்.

சினிமா தியேட்டரில் காசு கொடுத்து வந்து தூங்குபவர்களும் உண்டு.

திருப்பதி திருமலையில் வாடகை அறை / லாக்கர் கிடைக்காவிட்டால் கிடைத்த இடத்தில தூங்குவதுண்டு. எப்பேர்ப்பட்ட தூக்கம் வரும் தெரியுமா. கனவே வராது.

பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்தின் / அலுவலின் போது தூங்கி வழியும உறுப்பினர்கள் காணலாம். அறிவியல் மாநாட்டில் தூங்கி வழியும் விஞ்ஞானிகளை அவ்வபோது தினசரி ஏடுகளில் செய்தி/படம் காணலாம்.

அலுவலக நாட்களில் காலை படுக்கையை விட்டு  எழமுடிவதில்லை ஆனால் ஞாயிறு காலை சீக்கிரமே தூக்கம் கலைந்துவிடுகிறது.


மருத்துவமனையில் பணிபுரிந்தபோது தூங்காமல் இரவு நேரப்பணி செய்த அனுபவம் எனக்குண்டு.  நோயாளிகள் வரவில்லையென்றால் சற்று நேரம் கண் அயரலாம். பெரும்பாலும் மழை கால இரவுகள் இன்னும் கூடுதல்
நேரம் தூங்கலாம்.

காலை சீக்கிரம் எழவேண்டும் என்று நினைத்து படுத்தால், சரியான நேரத்துக்கு எழமுடியும் காரணம் மூலையில் உள்ள சர்க்காடியன் கடிகாரம்.

நல்லெண்ணெய் குளியல் போட்ட சனிக்கிழமை இரவு தூக்கம் ஆளை தள்ளும். மறுநாள் ஞாயிறு காலை ஆடுகால் வாங்கிவந்து சூப் செய்து அருந்துங்கள். உடலுக்கு புது தெம்பு கிடைக்கும்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு தூக்க குறைபாடு அல்லது தூக்க மூச்சுத்திணறல் நோய் (Sleep Apnea) உள்ளது.  நம்மை போல் அவருக்கு படுத்த உடன் தூக்கம் வராது. அதற்கென்றே வெளிநாட்டிலிலுருந்து வரவழைத்த ஒரு நெபுலைஸர்  கருவியை அணிந்து கொண்டு தான் தூங்க வேண்டும். அதுவே இப்பொது வழக்கமாகி போனது. பலபேருடைய தூக்கத்தை கெடுத்தவர் ........பின்பு எப்படி தூக்கம் வரும்!


இன்னொரு நண்பருக்கு ராஜாவின் தாலாட்டு வரிசை பாடல்களை கேட்டுக்கொண்டே தூங்குவது தான் வழக்கமாம். சிலருக்கு ராஜா மற்றும் ஜிக்கி பாடல்கள் கேட்டால் தூக்கம் வரும்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 6  முதல் 22 வரை உள்ள பாசுரங்கள் தூக்கம் மற்றும் துயிலெழுப்புதல் பற்றி பேசுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு  இரவு முதல் காலை வரை கண் விழித்து, பரமபதம் ஆடி, பிறகு குளித்து பெருமாளுக்கு பூஜை செய்து பகல் முழுதும் தூங்காமல் இரவு தூங்கும் வழக்கம் எங்கள் வீட்டு பெண்களிடம் இருந்தது.  ஆனால் எப்போது வயது ஆகிவிட்டதால் அந்த பழக்கம் மெல்ல மறைந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடுவார்கள் எங்கள் ஊர் திரையரங்கில். முதல் படம் வரை தான் தாக்குப்பிடிக்கமுடியும் அப்புறம் ரசிகர்கள் தூக்கத்திடம் சரண். இப்போது அதுபோல் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள் போடும் திரையரங்கம் உள்ளதா தெரியவில்லை.

- காளிகபாலி

Friday, 8 December 2017

எழுத்து பிச்சர் பாட்டு

 
 
எழுத்து பிச்சர் பாட்டு
 
பிலிம் டிவிசன் படம் முடிகிறது.
திரையரங்கில் பேரைமதி நிலவுகிறது. 
தணிக்கை சான்றிதழ் அறிவிப்பு.

முதலில் கோவில் கோபுரம்
பட பட வென்று பறக்கும் புறாக்கள்.
பின்பு இடம்பெறும் படத்தலைப்பு.
அதை தொடர்ந்து ஆரம்பமாகும் பாடல்.



80 -90 களில் எல்லா முன்னணி இயக்குனர்களும் பின்பற்றிய உத்தி இது அபாரமான படைப்பாளிகள் அவர்கள்.

எழுத்து பிச்சர் பாட்டு - படத்தின் பெயர் போட்டவுடன் தொடங்கும் தொடக்க பாடல் அல்லது பெயர்களோடு வரும் பாட்டு. 80  -90 களில் பெருபாலும் எல்லா படங்களிலும் தவறாமல் இடம் பெற்றது.

தொடக்க பாடலை தவறவிட்டவர்கள் மீண்டும் அடுத்த காட்சி முதலிலுருந்து பார்த்தவர்களும் உண்டு.

ரசிகனை முதல் பாடலிலியே இழுத்து உட்கார வைக்க பின்பற்றப்படும் நுட்பம் இது.

எழுத்து பிச்சர் பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் படத்தில் கதையையோ அல்லது கதாநாயக /நாயகி பற்றியதாக இருக்கும்.  இது தான் கதை / இது தான் நாயக / நாயகியின் இயல்பு என இயக்குனர் ரசிகனுக்கு புரியவைத்துவிடுவார்.  படம் பார்க்கும் ரசிகன் படத்தில் ஒன்றா ஏதுவாயிருக்கும் இப்பாடல்.

பெரும்பாலும் ராஜா சார் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம்பெற்றன. "இப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் இசைஞானி இளையராஜா"  என்ற வரி கட்டாயம் இடம் பெரும்.  அவர் பாடிய அனைத்து எழுத்து பிச்சர் பாடல்களும் சூப்பர் ஹிட் மற்றும் வெள்ளி விழா படங்களாகும்.  ராஜா சார் எழுத்து பிச்சர் பாடலை பாடினால்  படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை நிலவிய காலமது.

இதோ சில எழுத்து பிச்சர் பாடல்களை கேட்டு பரவசமாகுங்கள்.








- காளிகபாலி







Thursday, 7 December 2017

வருட செயல் திட்டம் (Yearly Action Plan)

அலுவலகத்தில் துறை தலைவருக்கு தனி உதவியாளராக சேர்ந்த புதிது.
புதிய நடைமுறை கற்றுத்தரப்பட்டது அதாவது ஒவ்வொரு மாதமும் செயல் திட்ட அறிக்கை தயாரித்து நிர்வாக இயக்குனருக்கு அனுப்பவேண்டும். அதில் அந்த மாத இலக்குகள், சென்ற மாத இலக்குகளின் நிலை ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். சில நாட்கள் கழித்து நிர்வாக இயக்குனர் அதில் சில குறிப்புகளுடன் திருப்பி அனுப்புவார்.

விளையாட்டாக வருட செயல் திட்டம் எழுத ஆரம்பித்தேன், அது சரியாக வரவே, ஒவ்வொரு வருடம் டிசம்பர் 25  இரவு அன்று புதிய வருடத்திற்கான செயல் திட்டம் எழுதுவது வழக்கமாயிற்று. கடந்த 2012 முதல் பின்பற்றி வருகிறேன். நல்ல விஷயமாயிற்றே உங்களுக்கும் உபயோகமாக இருக்கட்டுமே....

திட்டம் போட்டு வாழவேண்டும், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும், வாழ்க்கையில் ஒரு ஒழுங்கை கொண்டு வரவேண்டும் என நினைப்பவர்கள் மேலும்  தொடரலாம்.

உங்கள் வருட செயல் திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?

உங்கள் வருட செயல் திட்டம் 4 - 5  பதிகளாக  பிரித்து கொள்ளவேண்டும் அதாவது
1.  உங்களை பற்றி: கெட்ட பழக்க வழக்கங்களை விடுதல். புகைபிடித்தல், குடி, குட்கா, முன்கோபம் இத்தியாதி, இத்தியாதி நல்ல பழக்கங்களை கடைபிடிப்பது உ.ம் நடை பயிற்சி, அமைதியாக இருத்தல், யோகா, மாரத்தானில் பங்கேற்பது, உணவு கட்டுப்பாடு, சனி தோறும் நல்லெண்ணெய் குளியல்  போன்ற சில விஷயங்கள்.

2. குடும்பம்: பெற்றோர், மனைவி மக்களிடம் அன்பாக இருத்தல். அவர்களுடன் அதிக நேர செலவிடுதல்.

3. தொழில்/வேலை: தொழில் மேம்பாடு, அடைய வேண்டிய புதிய இலக்குகள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க தயாராயிருப்பது போன்றவை, புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிவது.

4. ஆன்மிகம்: தரிசிக்க வேண்டிய புதிய திருக்கோயில்கள், குலதெய்வ வழிபாடு (மிக முக்கியம்).

5. பொதுவானவை: புதிய பொருட்கள் வாங்க வேண்டியவை, புதிய வீடு / மனை வாங்க முயற்சி செய்வது, பள்ளி கட்டண செலவுகளை சமாளிப்பது, கோடை சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்.

ஒரு நோட்டு புத்தகத்திலோ அல்லது பழைய டைரியிலையோ எழுதி வைக்க வேண்டும். டிசம்பர் 25  முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை தினமும் காலை, மாலை படித்து மனதில் ஏற்றி கொள்ளுங்கள்.  பிறகு  அதை எங்காவது ஒரு இடத்தில பத்திரமாக வைத்துவிட்டு வழக்கம் போல் உங்கள் வேலையை பாருங்கள்.

பிறகு வருட இறுதியில் அதாவது டிசம்பர் 25 ல் டைரியை எடுத்து எழுதி வைத்த வருட செயல் திட்டத்தை மீண்டும் படியுங்கள். இதில் சில இலக்குகளை நிச்சயம் அடைந்திருப்போம். நிறைவேறிய விஷயங்களை பச்சை நிற  பேனாவை கொண்டு அடித்துவிடவும்.  

நிறைவேறாததை அடுத்த வருட செயல் திட்டத்தில் சேர்க்கவும்.  இந்த வருடமோ அடுத்த வருடமோ உங்கள் கடினமான/ சின்ன சின்ன இலக்குகளை நிச்சயம் அடைவீர்கள்.

இந்த வருட செயல் திட்ட பயிற்ச்சியால் உங்கள் லட்சியம் தெளிவாகும், அது வலுவாகும். இதனுடைய பயன்களை காலப்போக்கில் நீங்களே உணர ஆரம்பித்துவிடுவீர்கள்.

- காளிகபாலி

Tuesday, 5 December 2017

கிணறு - ஒரு கால பொக்கிஷம்

இன்றைய காலத்தில் அதிசயமாக பார்க்கப்படும் வஸ்து.  சமீபத்தில் பெய்த மழையில் கிணறு நிரம்பியிருப்பதை பார்க்கும் போது மனது அடையும் சந்தோஷத்துக்கு அளவில்லை.

எப்போதுமே கிணற்று தண்ணிறில் குளிப்பது தான் வழக்கம். கோடை காலத்தில் தண்ணீர் குளுர்ச்சியாகவும். மழை காலத்தில் தண்ணீர் வெது வெதுப்பாக  இருக்கும்.  மாடியில்  விழும் மழை நீர்  கிணற்றில் சேரும்படி வீட்டில் வசதி செய்ப்பட்டுள்ளது அதனால் மழை நீர் வீணாவதில்லை.

கிணற்று நீர் தான் குடிக்க, சமையல் மற்ற செய்ய எல்லாவற்றுக்கும்.   கேன் தண்ணீர் இப்போது வரை வீட்டில் அனுமதி இல்லை.

ஒரு கோடை காலத்தில் கிணறு வற்றும் நிலைக்கு சென்றது.  பிறகு 10  அடிக்கு ஆழ படுத்தி உள்ளே உரை இறக்கினோம்.  அடுத்து வந்த மழை கிணற்றை நிரப்பியது.

எங்கள் வீட்டு (40 அடி) கிணறு அமைக்க / எடுக்க 30 நாட்கள் ஆனது  15  நாட்கள் உரைகள் செய்ய மற்றும் 15  நாட்கள் பள்ளம் தோண்டி உரைகள் இறக்க. 

சுற்று வட்டாரத்தில் எங்கள் வீட்டு கிணற்று நீர் தான் குடிக்க ஏற்றது. 25  மேற்பட்ட குடும்பங்களின் தாகத்தை தீர்த்தது.

அடிக்கடி நீர் இறைக்கும் வாளி அறுந்து விழுந்துவிடும். அதை எடுக்க பாதாள கொலுசு என்ற கருவியை கயிற்றில் பொருத்தி சுற்றுவோம். சிறிது நேரம் கழித்து பாதாள கொலுசு வாளியை லாவகமாக மேலே கொண்டு வரும்.

எப்போதும் நான் கிணற்றடியில் குளிப்பது  தான் வழக்கம். திரும்ப வராத சுகமான நாட்கள் அவை.

துணி துவைப்பது, சாமான் துலக்குவது எல்லாம் கிணற்றடியில் தான். அந்த  நீர் அருகில் உள்ள வாழை மரங்களுக்கு செல்லும்.  அவைகள் செழிப்பாக வளர்த்து நிற்கும்.

பள்ளிக்கு செல்லும் முன் வீட்டு தேவைகளுக்கு நீர் இறைத்து அண்டாவை   நிரப்பிவிட்டு செல்லவேண்டும். இது அம்மாவின் கட்டளை.

கிணற்றுக்கு அம்மா குங்குமம் மஞ்சள் பூசி அங்கே மாலையில் விளக்கேற்றுவாள். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை நாட்களில் அதற்கும் ஒரு பூஜை உண்டு.

எங்கள் ஊர் வயக்காட்டில் உள்ள கல் கிணறு மிகப்பெரியது. பார்க்கும்போதே பயமாயிருக்கும்.  எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும்.  என் வயதையுடையவர்கள் தொட்டி மேலே இருந்து குதிப்பார்கள்.  நடு ஆழதுக்கு  சென்று மேலே வருவார்கள். எனக்கு நீச்சல் தெரியாது  அதனால் நான் படிக்கட்டுலேயே உட்கார்ந்து குளித்துவிட்டு வருவேன்.
ஊரில் பெரிய முன்சீப் கிணறு இருந்தது. வற்றாத கிணறு.  மக்கள் எப்போதும் தண்ணீர் எடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவரவர் தங்கள் சொந்த ராட்டினம் கயிறு மற்றும் வாளியுடன் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.  "கிரீச், கிரீச்" என்ற ராட்டினம் சத்தம் எப்போதும்  கேட்டு கொண்டே இருக்கும்.  இப்பொது அந்த இடத்தில கிணறு இல்லை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.  

இன்றைக்கு கிணற்றை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.  கிணறெடுக்கும் ஆட்களும் கிடைப்பதில்லை. அந்த தொழிற்நுட்பம் கிட்டத்தட்ட மறைந்து விட்டது.  தண்ணீர் தேவைக்கு போர்வெல் தான் ஒரே தீர்வாகிவிட்டது,  சில மணி நேரத்தில் 300  முதல் 900 அடிகள் தோண்டி தண்ணீர் எடுத்துவிடும்.

எனக்கு தெரிந்த பெரும்பாலான கிணறு இருந்த வீடுகளில் இப்போது ஆழ் துளை கிணறு ஆக்கிரமித்துள்ளது.  கிணறுகள் மூடப்பட்டு விட்டன. 
ஆனால் கிணற்றின் இடத்தை எப்போதுமே போர்வெல் நிரப்பாது.

- காளிகபாலி




Monday, 27 November 2017

ராஜா தி கிரேட்


மாஸ் மகாராஜா ரவி தேஜா நடித்து தீபாவளிக்கு வந்த படம் ராஜா தி கிரேட்

பலம் வாய்ந்த வில்லனை பார்வையற்ற நாயகன் எதிர்கொள்வது தான் கதை. இதிலும் படம் முழுதும் ரவி தேஜாவின் எனர்ஜி மற்றும் இயக்குனர் அணில் ரவிப்புடியின் இயக்கமும் படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது. நாயகனின் நச் அறிமுகம் கபடி ஆட்டத்தில் தொடங்குகிறது.

முதல் பத்து நிமிடம் பிரகாஷ்ராஜின் பகுதி.  வில்லனின் பலம் பற்றி  நமக்கு புரியவைத்து விடுகிறார் இயக்குனர்.

படம் முழுதும் ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் நகைச்சுவை கைகொடுக்கிறது.

நாயகனின் அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்பு அருமை.

இரயில் மீது ஏறி கூகிள் உதவியுடன் வில்லனின் இருப்பிடத்தை அடையும் நாயகனின் உத்தி அருமை.

அடிக்கடி நாயகன் உதிர்க்கும் வார்த்தை (I'm blind but trained) "நான் பார்வையற்றவன் ஆனால் பயிற்ச்சி பெற்றவன்".

டார்ஜிலிங் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அதிரடி.

இந்திய சினிமாக்களில் பார்வையற்ற நாயகன் சோகமாக காட்சியளிப்பான், அவனனுக்கு ஒரு காதலி இருப்பாள்.  ரசிகர்களின் பரிதாபத்தை பெற நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தில் அதெல்லாம் இல்லை. இவன் மிகுந்த தன்னம்பிக்கையுடவன். எதையும் எதிர்கொள்ள பயிற்ச்சி பெற்றவன். அவன் அம்மாவே அவனது  பலம்.  காதலியின் அப்பாவை கொன்ற வில்லனை வெற்றி கொள்வான்.

இன்றைய காலகட்டத்தில்  பார்வையற்றோக்கு தகுந்த பயிற்ச்சி அளித்தால் அவர்கள் சராசரி மனிதர்கள் போல வாழ்வார்கள்.   இந்தியாவில் பார்வையற்றோர்க்கு ப்ரைளே பயிற்ச்சி மட்டுமே அளிக்கப்படுகிறது.

ஒரு சில தொழில் நிறுவனங்கள் பார்வையற்றோர்க்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.

 
மும்பை போவாயில்  உள்ள மதீரா & மைம் உணவகம் முழுக்க முழுக்க காது கேளாத மாற்றுதிறனாளிகலால் செயல்படுகிறது.  சைகை பாஷையை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.  இதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிறுவனங்கள் மாற்றுதிறனாளிகளை ஆதரிக்கிறது.

சாதனை புரிந்த மாற்றுதினாளிகள் வெளிநாட்டில் ஏராளமானோர் உண்டு.  கூகிள் செய்தல் பட்டியல் நீளும். இந்தியாவில் அத்தகையோரை விரல் விட்டு எண்ணி விடலாம்.
மாற்றுதிறனாளிகளுக்கு நாம் எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறோம் என்பதை தினசரி நாளிதழில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

எனது சகோதரரும் ஒரு மாற்றுதிறனாளி தான். அவருக்குரிய சலுகைகள் பெற ஒவ்வொரு முறையும் எவ்வளவு அலையவேண்டியிருக்கிறது தெரியுமா.

மாற்றுதிறனாளிகளுக்கு இலவச இரண்டு சக்கர வாகன திட்டத்தில் பெற எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம்.  பிறகு எங்கள் மனு நிராகரிக்கப்பட்டது காரணம் 70 சதவீத ஊனம் இருந்தால் தான் இரண்டு சக்கர வாகனமாம்.  அதாவது படுத்த படுக்கையாக  இருக்கணும் போல.  இது தான் இன்றைய நிலைமை.

- காளிகபாலி

Wednesday, 22 November 2017

வேர்க்கடலை, நிலக்கடலை, கலாக்காய்



வேர்க்கடலை, நிலக்கடலை, கலக்காய் என பல பெயரில் அழைக்கபடுகிறது புரதம் நிறைந்த தின்பண்டம்.
எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம்.  என்னுடய பயண பையில் வறுத்த உப்பு வேர்கடலை, கடலை மிட்டாய், மற்றும் கடலை உருண்டை போன்றவை எப்பொதும் இடம் பெறும்.

சிறுவயதில் டவுசர் பாக்கெட்டில் தின்று மிச்சம் வைத்த வேர்க்கடலை
துகள்கள் எப்போதும் இருக்கும். நாளடைவில் டவுசர் பாக்கெட் கறை படிந்து காணப்படும்.

முன்பு மாநகர மின் இரயிலில் சிறு கூடையில் “கடல, கடல ….சால்ட கடல, வறுத்த கட்ல, டைம் பாஸ் கடல” என் அண்ணாக்கள் கூவி கூவி விற்பார்கள். சிறு மூடி அளவு ஓரு ரூபாய், இரண்டு ரூபாய் கடைசியில் ஐந்து ரூபாய் வரை ஆனது.  வீடு வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கில் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கென்று தனி வாடிக்கையாளர்களும் உண்டு.  காலமாற்றத்தால் அவர்கள் மறைந்து போனார்கள்.  இப்போது அனைத்தும் பாக்கெட்களில், குறைந்தபட்ச விலை பத்து ரூபாய்.

மார்க்கெட்டில் ஒரு படி வேர்க்கடலை ரூபாய் 30/- இரண்டு படி ரூபாய் 50/-  உப்பு போட்டு வேக வைத்து பசங்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். சிறந்த மாலை சிற்றுண்டி.

இப்போது அவித்த கடலை விற்கப்படுகிறது சுமார் ரகம் தான். அதிக உப்பும், பழையதும் கலந்து விற்கப்படுகிறது. சிலது பருப்பு இல்லாமல் காலியாக இருக்கும்.

தள்ளு வண்டியில் மணலில் வறுத்த வேர்க்கடலை, அது வேறு வித சுவை. அதில் உள்ள எண்ணை பசை உறிஞ்சப்பட்டு, கடலை பொன்னிறமாக மொறு மொறுவென்று இருக்கும்.

வீட்டில் பெரும்பாலும் காலை சிற்றுண்டியான இட்லி, தோசைக்கு வேர்கடலை சட்னி ஜோரான இணை.

புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதமாகட்டும், ரசம்  சாதமாகட்டும், பகலோ, இரவோ தொட்டுக்கொள்ள எண்ணையில் பொரித்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா கலந்த வேர்கடலை போதும். சாதம் இறங்கிவிடும்.
கேழ்வரகு களியுடன் தொட்டுக்கொள்ள வேர்க்கடலை கெட்டி சட்னி நல்ல இணை.

ஒன்றும் பாதியாக பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த முருங்கை கீரை பொரியலை கேழ்வரகு கூழ் உடன் குடிப்பது உடலுக்கு நல்லது.

சமீபத்தில்  அலுவலக கேன்டீனில் சாப்பிட்ட பொடித்த வேர்க்கடலை தூள் கலந்த கொத்தவரங்கா பொரியல் நன்றாக இருந்தது.

இப்பொழுது பிரட் மேல் தடவி சாப்பிட வேர்க்கடலை பசை பாட்டிலில் அடைத்து விற்கப்படுகிறது. கொஞ்சம் விலை அதிகம்.  வாங்கி வந்த இரண்டு நாளிலேயே பசங்க காலி செய்து விடுகிறார்கள்.

எனது முதல் விமான பயணித்தின்போது குளிர்ந்த பீர் உடன் தோல் உரித்த வறுத்த உப்பு வேர்க்கடலையும் சேர்த்து தந்தார்கள்.

வயலில் விளைந்த இளம் வேர்க்கடலை கொத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சமீபத்தில் என்னுடைய நண்பர் கோவில்பட்டியிலுருந்து வேர்க்கடலை பர்பி வாங்கி வந்தார்.  சுட சுட செய்து கொடுத்ததாக சொன்னார்.  சுவை அபாரம்.

வருடா, வருடா, பெங்களூருவில் அரசு மற்றும் விவசாயிகள் இனைந்து பசவனகுடியில் நடத்தும் பிரசித்தி பெற்ற கலக்காய் திருவிழா நவம்பர் மாதம் நடக்கும்.  கர்நாடக மாநில விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நிலக்கடலையை சிவனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டகளிருந்தும் விவசாயிகள் நிலக்கடலை கடை விரிப்பார்கள், வித, விதமான கடலை ரகங்கள் வாங்கியும், வகை வகையான கடலை தின்பண்டங்கள் சுவைத்தும் மகிழலாம்.  நமது மாநில எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, தரமபுரி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கடலை ரகங்களை விற்பதை காண்லாம்.  வாய்ப்பு கிடைத்தால் ஒரு நடை போய் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் சிந்தாமணி எனும் ஊரில் ஒரு வித கார சுவையுடன் வறுத்த வேர்கடலை விற்கிறார்கள்.  அவ்வூரில் இது பிராதான தொழில்.  அவ்வூரிலிருந்து யாராவது உறவினர் சென்னை வந்தால் நமக்கும் சேர்த்து வாங்கி வருவார்கள்.

சரி, இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த நிலக்கடலை பயிரை / கடலைச் சாகுபடியை பிரபலப்படுத்தியவர் திரு.வளவனூர் கோவிந்த அய்யர் என்ற சாதனையாளர். அவர் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  அவசியம் அதை பற்றி தெரிந்து கொள்வோம், இதோ இந்த சுட்டியை அழுத்தவும்: http://solvanam.com/?p=30613
- காளிகபாலி