Wonderful Shopping@Amazon

Monday, 20 November 2017

சன்புசா என்ற சமோசா



இன்று எங்கள் அலுவலக கேன்டீனில் மாலை சிற்றுண்டி சமோசா. 

சமோசா என்ற பெயரில் ஏதோ ஒன்று செய்து போட்டார்கள். உள்ளே பூர்ணம் சுவையாக இல்லை. வெளிப்புறம் பாதி வெந்து பாதி வேகாத மாதிரி இருந்தது.  எது செய்தாலும் சாப்பிட ஒரு கூட்டம் எங்கள் அலுவலகத்தில் உண்டு.

முன்பு இருந்த கேன்டீன் காண்ட்ராக்டர் சமோசாவை வெளியில் இருந்து வாங்கி வந்து போடுவார். சில நேரங்களில் பெரிய சமோசா அல்லது இரானி சமோசா கிடைக்கும். கூட்டம் அள்ளும். கூப்பன்கள் பறக்கும். வீட்டிற்கு பார்சல் வாங்கி செல்வார்கள் நம் மக்கள். சீக்கிரம் தீர்ந்து போய்விடும். ஒரு கட்டத்தில் யாரோ நிர்வாகத்திடம் புகார் தட்ட. அதோடு சமோசா சிற்றுண்டி நிறுத்தப்பட்டது.

விக்கிப்பீடியாவில் சமோசாவை பற்றி நாலு பக்கத்துக்கு தகவல்கள் நீள்கிறது. சமோசா 14 ஆம் நூற்றாண்டில அரேபியாவிலுருந்து இந்தியாவுக்கு வந்த சிற்றுண்டி. மொகலாய சமையல் கலைஞர்கள் பலவித சுவைகளில் தங்களது அரசர்களுக்கு விருந்து படைத்தார்கள்.  சமோசாவில் உள்ளே  வைக்கும் பூர்ணம் மாமிச துண்டு, பாதாம் முந்திரி மற்றும் உருளைகிழங்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.  அரசவை விவாதங்களில் இடம்பெற்ற முக்கிய சிற்றுண்டி.  அரசர்களை சந்திக்க வரும் முக்கிய விருந்தினர்களுக்கு பிரியாணியுடன் பரிமாறப்பட்ட  சிற்றுண்டி. சன்புசா என்ற பெயர் மருவி சமோசா ஆனது.

வடஇந்தியாவில் சமோசாவிற்கும் தென்னிந்தியா சமோசாவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சுவையும் வேறுபாடும்.  

தென்னிந்தியாவில் சோமார்ஸ் என்ற அரைவட்ட வடிவில் உள்ளே இனிப்பு பூர்ணம் வைத்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியை சுவைத்திருக்கலாம். திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு வரிசை தட்டில் வைக்கப்படும் முக்கிய சிற்றுண்டி. பின்னர் விழாவிற்கு வந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

தீபாவளி பண்டிகை பலகாரங்களில் இடம் பெற்ற முக்கிய இனிப்பு பண்டம்.  தீபாவளிக்கு  பத்து நாளுக்கு முன்னமே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் நம் வீட்டு பெண்கள்.   காலம் மாறிவிட்டது இப்போது எல்லாம் இனிப்பகங்களில் முன்கூட்டியே எண்ணிக்கையை சொல்லிவிட்டால் அவர்கள்  செய்து  தந்துவிடுவார்கள்.

 சரி இப்போது விசயத்துக்கு வருவோம்.

சுவையான சமோசுவிற்கு நான் எப்போதுமே நான் ரசிகன். முன்பு நுங்கபாக்கத்தில் வேலை செய்யும் போது ஹாட் சிப்ஸில் சுட சுட சமோசா சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு பஸ் ஏறுவேன்.  அலாதியான சுவை உள்ளளே பூர்ணம் முந்திரி பருப்பு சேர்த்த உருளைக்கிழங்கு மசாலா. தொட்டு கொள்ள தக்காளி சாஸ்.

ரிச்சி தெரு, பாரிஸ் கார்னர் இரண்டாவது கடற்கரை சந்து, மற்றும் அண்ணாசாலை அண்ணா - சாந்தி திரையரங்கம் மத்தியில் உள்ள டி கடையில் கிடைக்கும் டீயும் இராணி சமோசா அற்புதமான இணை.   

புரசைவாக்கம் சரவணா பவன் உணவகம் நேர் எதிரில், டைலர்ஸ் ரோடு, அயனாவரம் தபால் நிலையம் வாசல் இங்கெல்லாம் மாலை வேலையில் தள்ளு வண்டியில் தயாரிக்கபடுக்கபடும்  மினி சமோசா சாப்பிட ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.

இப்போது வடஇந்தியர்கள் ஆங்காங்கே தள்ளு வண்டியில் சமோசா சுண்டல் மசாலா விற்பதை பார்க்கலாம். சுவை சுமார் ரகம் தான். சுகாதாரம் கேள்விக்குறி  மற்றும் அங்கே குடிக்க வைக்கப்படும் தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இல்லை.  சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிப்பது நல்லது.

என்னுடைய இப்போதைய பிடித்த இடம் தேவி திரையரங்கம் பின்புறம் உள்ள பாம்பே லஸ்ஸி கடை அங்கே சுட சுட விற்கப்படும் சமோசா (ரூபாய் 12 ) சுவையானது.    கட்ச்சோரி, பாஸந்தி மற்றும் லஸ்ஸி எல்லாமே நல்ல சுவை. சுகாதாரமான இடம்.  தண்ணீர் சரில்லை. வீட்டு தண்ணீர் நிரப்பிய பாட்டில் எப்போதும் கைகளில் இருப்பது உசிதம்.   

மெயின் ரோட்டில் கடை இருந்தால் தான் நன்றாக வியாபாரம் ஆகும் என்ற எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். இந்த கடை தெருவின் உள்ளே இருக்கிறது. இருபது பேர் கொண்ட அவர்கள் குழு சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும். இந்த பக்கம் சமோசா அந்த பக்கம் கட்ச்சோரி என சுட சுட தயாராகிகொண்டிருக்கும்,  சாப்பிட ஆள்கள் வந்து கொண்டு இருப்பார்கள். 

அவர்கள் தயாரிக்கும் சிற்றுண்டியில் உள்ள சுவை தான் வாடிக்கையாளர்களை இழுக்கிறது. தொழிலை ஒரு தவம் போல் செய்கிறார்கள் இவர்கள். நேரம் கிடைத்தால் ஒரு எட்டு போய் வாருங்கள்.



- காளிகபாலி

Sunday, 19 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று

இயக்குனர் ஹெச். வினோத் தனது இரண்டாவது பட வாய்ப்பை திறமையாக பயன்படுத்தியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் வினோத். இதுவும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் அமைந்த திரைக்கதை.
கொள்ளையர்களை பற்றிய  இயக்குனரின் இன்போ கிராபிக்ஸ் டீடைலிங் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அது என்ன ? படத்தில் காண்க.

தான் இயக்குனரின் நடிகன் என மீண்டும் நிரூபித்துதிக்கிறார் கார்த்தி.  பண்பட்ட நடிப்பு.

இயக்குனர் வினோத் - நாயகன் கார்த்தியின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறது.
கொடூர கொலை-கொள்ளையில் ஈடுபடும் வட இந்திய கொள்ளையர்களை தேடி புறப்படும் தமிழக காவல்துறை குழுவினருக்கு நமது நாயகன் தலைமை தாங்கி கூண்டோடு அழிப்பது தான் கதை.   கதை ஒரு போலிஸ் அதிகாரி பார்வையில் விரிகிறது.

ராஜஸ்தானனின் வறண்ட நில பகுதிகலாகாட்டும், தஞ்சை, திருவாரூர், சென்னை என வான்வழி
காட்சிகளை தனது கேமரா கண்களில் நம் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

போலீசாருக்கு பணியின் பொது ஏற்படும் சிரமங்கள் /அசௌகரியங்கள் படத்தினூடு காணமுடிகிறது.

ராகுல் ப்ரீத் சிங்கின் இயல்பான நடிப்பும், போஸ் வெங்கட்டின் பங்காளிப்பும் அருமை.

ஜிப்ரானின் பின்னணி இசை ஒகே, தீம் மியூசிக் இருந்திருந்தால்.....நன்றாக இருந்திருக்கும்.
அபிமன்யு சிங்கின் வில்லத்தனம் மிரட்டல்.

ராஜஸ்தான் கிராமத்தில் கார்த்தி குழுவினர் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிராஜஸ்தானில்  நடைபெறும் அந்த பஸ் சேஸ் மற்றும் இறுதி கட்ட காட்சிகள் திக் திக் நிமிடங்கள்.

ரயில் சண்டை, கொள்ளையன் காளியுடன் ஆக்ரோஷ சண்டை வரும் என்று எதிர்பார்த்தேன் மற்றும்
டாக்குமெண்ட்ரி பீல் என இதெல்லாம் எதுவும் இல்லாமல் இயக்குனர் சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.


- காளிகபாலி


Saturday, 2 September 2017

ஆளை கொல்லும் நீலத்திமிங்கலம்




ப்ளூ வேல் விளையாட்டு,  நீல திமிங்கலம் , ஆளை கொல்லும் நீலத்திமிங்கலம். தினசரிகளில் இப்போது நாம் அன்றாடம் படிக்கும் செய்தி இது.

ப்ளூ வேல் விளையாட்டு விளையாடிய இளம் மாணவர் மற்றும் இளைஞர்களின் தற்கொலை. படிக்கும் போதே நெஞ்சு பதறுகிறது.

மாணவர் மற்றும் இளைஞர்களின் இத்தகைய நிலைமைக்கு யார் காரணம்?
நாமும் தான். அது தான் உண்மை.

இன்றைய மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு மைதான விளையாட்டு எட்டாக்கனி ஆகிவிட்டது. வணிக வளாகங்கள், சந்து பொந்துகளில் நடக்கும் பள்ளிகள் நாட்டில் நிறைய உண்டு.

உடற்கல்வி மற்றும் விளையாட்டு ('பீட்டி') வகுப்பு என்ற ஒன்று இன்றைய பள்ளி அட்டவணைகளில் உண்டா என்று தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லை. 

பெரும்பாலும் பள்ளி மைதானம் ஆண்டு விழா நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

என்னுடை பள்ளி நாட்கள் பெரும்பாலும் விளையாட்டு மைதாங்களில் கழிந்தது. கிரிக்கெட், கோகோ, ஐஸ்பாய், திருடன் போலீஸ், கால்பந்து, கபடி மற்றும் பிற விளையாட்டுகள்.

வீடு அருகில் உள்ள விளையாட்டு மைதாங்களில் கில்லி, கோலி, நொண்டி  மற்றும் சில விளையாட்டுகள்.

மேற்சொன்ன விளையாட்டுகள் விளையாடிய கடைசி தலைமுறை நாங்கள்.

இன்றைய குழந்தைகளை மைதானத்துக்கு அனுப்பவே பயபடுப்படுகிறோம், எங்கே குழந்தைகள் பிறருடன் சேர்ந்து கேட்டு போய் விடுமோ என்ற தேவையற்ற பயம். அவ்வுளவு ஏன் பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன் கூட சேர்ந்து இருக்க விடுவதில்லை நாம்.

நகரத்தில் வாழும் குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று கிடக்கிறது, டோரிமான், சின்சான், பென்டன், சோட்டா பீம் என மூழ்கி கிடக்கிறார்கள்
 
சரி, ப்ளூ வேல் விளையாட்டு மட்டும் தான் மாணவர் / இளைஞர்களை கொல்லுதா?

இன்றைய மாணவர் / இளைஞர்கள் நீல திமிங்கலம் ரூபத்தில் பல ஆபத்துக்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

- அதிக மதிப்பெண் வேண்டி மன அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்கள்.


- பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு. பிறர் முன் கண்டிப்பு காட்டுவது


- பெற்றோர் தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது  
  திணிப்பது.


- சமூக ஏற்றதாழ்வுகள், வெளி உலக ஏமாற்றங்கள்


- சாதி வேறுபாடுகள்.


- வறுமை மற்றும் அரசின் கொள்கை.

இதை எல்லாம் புரிந்துகொண்டு இனியாவது பிள்ளைகளை நண்பர்கள் போல் பாவித்து அவர்களின் உணர்வுகளை மதிப்போம். அவர்களோடு அதிக நேரம் செலவழித்தாலே போதும். தங்களுடைய மனக்குறைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் என்ன 'மெட்டீரியல்' (Material) என்று புரிந்துகொண்டாலே போதும் பாதி சங்கடங்களை தவிர்க்கலாம். அதற்கேற்றாற்போல் நாம் அவர்களை நாம் வழி நடத்தலாம்.

- காளிகபாலி