Wonderful Shopping@Amazon

Thursday, 26 July 2018

இட்லி

நீங்கள் அசல் இட்லி எப்போது சாப்பிட்டீர்கள்?

வயதான நண்பர் சொல்வதை கேளுங்கள் :

"தீபாவளி அன்று தான் எங்கள் வீட்டில் இட்லி. எப்படா பொழுது  விடியப்போகிறது என்றிருக்கும். தீபாவளிக்கு முதல் நாளே  அம்மா மாவு அரைத்து தயாராக வைத்துவிடுவாள். அப்பா தீபாவளி அன்று காலை சீக்கிரம் எழுந்து ஆட்டுக்கறி வாங்கி வந்துவிடுவார். நாங்கள் குளித்து முடித்து வந்தவுடன் அம்மா இட்லி, கறி குழம்பு மற்றும் கேசரி, அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் கார சட்னி. என எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருப்பாள். சாமி கும்ப்பிட்டுவிட்டு சாப்பிடுவோம்.  அம்மாவின் கைமணம், இளம் ஆட்டுக்கறியின்  சுவை, பூ போன்ற  இட்லி அடுத்த தீபாவளி வரை தாங்கும்.

மதியத்துக்கு தலைக்கறி குழம்பு பெரிய பாத்திரத்தில் மிதமான சூட்டில் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும்.  அதை தவிர யாரவது முக்கிய விருந்தாளி வந்தா தான் எங்கள் வீட்டில் இட்லி."

இது என் கதை:

"என்னங்க டிபன் ரெடி பண்ணட்டுமா"

"வேண்டாம் நான் கேன்டீனில் சாப்பிட்டுகிறேன்"

அன்று கேன்டீனில் காலை சிற்றுண்டி இட்லி-வடகறி-சட்னி  இட்லியை பிய்த்து வடகறியில் தோய்த்து வாயில் வைக்கிறேன், அதிர்ச்சி. இட்லி வேகவே இல்லை. சரி அடுத்த இட்லி... அதுவும் அதே கதை. அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.  பேசாமல் வீட்டிலேயே சாப்பிட்டிருக்கலாம்

சமீபத்தில் எங்கள் அலுவலக கேன்டீனில் 11 வகை தோசை மேளாவை நடத்தினார்கள்.  இட்லியே ஒழுங்கா சுட தெரியவில்லை தோசை மேளாவாம்.!

இட்லி என்ற பெயரில் எதையோ உண்டு வாழ்கிறோம் நாம்.

நம்மாளுக என்னதான் பிஸ்ஸா, பர்கர், பாஸ்தா என்று சாப்பிட்டாலும் கடைசி புகலிடம் நம் இட்லி தான்.  ஆனால் நம்மவர்களுக்கு அந்த பழைய பக்குவம் மறந்து நீண்ட நாட்கள் ஆகிறது.  இட்லி நன்றாக மென்மையாக இருக்க வேண்டி, இட்லிக்கு மாவு அரைக்கும் போது  சில இடங்களில் ஜவ்வரிசி, வெள்ளை அவுல் இன்னும் பல பொருட்கள் சேர்க்கப்படுகிறது.


சிறந்த இட்லிக்கான குறிப்பு:

- 4 பங்கு புழுங்கல் அரிசி
- 1 பங்கு உளுத்தம்பருப்பு அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம்

இதில் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும்.
அரிசி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு குடையக் குடைய அரைக்க வேண்டும். முதலிலேயே தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்க வேண்டும். ஒரு முக்கால் மணி நேரம் உளுந்து நன்கு மசிந்ததும் /அரைத்ததும் உளுந்தை எடுத்துவிட்டு அரிசியைப் போட்டு அரைக்கவும். அரிசியை ரொம்ப வழு வழுப்பாக அரைக்காமல் சிறிது நற, நறவென்று அரைத்து உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் எது ?

மிளகாய் பொடி, ஹோட்டல் சாம்பார், பாம்பே சட்னி, நிலக்கடலை சட்னி, வெங்காய சட்னி, பூண்டு கார சட்னி, சிக்கன் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, மீன் குழம்பு, மட்டன் குழம்பு,

பதார்த்தங்கள் வீட்டுக்கு வீடு மாறுபடும். என்னுடைய சாய்ஸ் முன்பு அம்மா வைக்கும் ஹோட்டல் சாம்பார், இப்பொது 'மின்சாரம்' செய்யும் நிலக்கடலை சட்னி மற்றும் ஆட்டுக்கால் பாயா.

அம்மா மிகுதியாக உள்ள இட்லிகளை பிய்த்து மசாலா சேர்த்து திடீர் உப்புமா செய்து தருவாள்.  அதை சாப்பிட நீ, நான் என்று போட்டி போடுவோம். அவ்வுளவு சுவையாக இருக்கும்.

மூன்று இடங்களில் இட்லி சாப்பிட்டது மறக்க முடியாது

ஒன்று, திருமூர்த்தி மலை அருவியில் குளித்துவிட்டு வந்தவுடன் அங்கே உள்ள உணவகத்தில் சுட சுட இட்லி -வடை-சாம்பார் சட்னி சாப்பிட்டது.

இரண்டு, குற்றாலத்தில் கண் சிவக்க குளித்து விட்டு மூன்று வகை பதார்த்தங்களுடன் சுட சுட இட்லி சாப்பிட்டது.

மூன்று, காலை  சுவாமி தரிசனத்துக்கு பிறகு ஸ்ரீவல்லிபுத்தூர் தேரடி அருகில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட இட்லியை விட அந்த உணவாக ஊழியர் வாஞ்சையாக கேட்டு கேட்டு பரிமாறிய விதம் இன்னும் நினைவில் உள்ளது.

ஹோட்டல் சரவண பவன் ஆரம்பித்த புதிதில் சாம்பாரில் முக்கிய மினி இட்லி சுவையாக இருக்கும்.

நாங்கள் குடியிருந்த பழைய அக்ராஹாரத்தில் ஒரு பாட்டி இட்லி சுட்டு விற்கும்.  வீட்டில் ஒரு சில நாள் அம்மா டிபன் போடவில்லையென்றல் அந்த பாட்டி கடையில் தான் தம்பிகளுக்கும்  எனக்கும் சேர்த்து இட்லி வாங்கி  வருவேன். மிருதுவான இட்லி, மொறு மொறு சிறிய மசால் வடை மற்றும் காய்ந்தமிளகாய் போட்டரைத்த உடைத்தக்கடலை தண்ணீ சட்னி சுவை
பிரமாதமாக இருக்கும். சல்லீசான விலை.  இப்பொது பாட்டியும் இல்லை, இட்லி கடையும் இல்லை

லோட்டா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா? நான் சாப்பிட்டிருக்கிறேன். வழக்கமான இட்லி சட்டியில் கீழ் தட்டை எடுத்து விட்டு சின்ன சின்ன லோட்டாவில் அம்மா தாளித்த இட்லி மாவை ஊற்றி வைப்பாள். இரண்டு லோட்டா இட்லி நாலு இட்லிக்கு சமம்.  அதனுடன் தொட்டு கொள்ள ஹோட்டல் சாம்பார் நல்ல இணை.

மருத்துவர் கு சிவராமன் சொன்னது போல் உளுந்துக்கு பதில் உடைத்த கருப்பு உளுந்து  சேர்த்து இட்லிக்கு மாவு தயார் செய்கிறோம் எங்கள் வீட்டில், இட்லி நல்ல சுவையாக இருக்கிறது. நீங்களும் செய்து பாருங்கள்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 25 July 2018

கோவில் திருக்குளங்கள்

எந்த கோவிலுக்கு சென்றாலும் நான் முதலில் பார்த்து வியப்பது, பரந்து விரிந்திருக்கும் அழகான திருக்குளமும் அதன், விஸ்தாரணமும்.

பிரசித்திபெற்ற கோவில்களுக்கு தொலைதூரத்திலுருந்து வரும் யாத்ரீகர்கள்  நீராட  பண்டைய காலத்தில் அமைக்கப்பட்டதே திருக்குளங்கள்.  அதுமட்டுமல்ல ஊரின் தண்ணீர்  தேவையையும்  அது பூர்த்தி  செய்தது திருக்குளங்கள்.  திருக்குளம் கோவிலுக்கு அணிகலன் போன்றது, அழகு சேர்ப்பவை,

புகழ் பெற்ற கோயில் குளங்களில் உள்ள நீர் பிரம்ம தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம் என இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

திருக்குளங்கள் நாட்டின் பொக்கிஷம். நீங்கள் உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் நம்முர் திருக்குளங்கள் போன்ற அமைப்பை வேறெங்கும் காணமுடியாது.  திருவெள்ளறை ஸ்வஸ்திக் திருக்குளம், கர்நாடகாவில் உள்ள ஹூலிக்கெறே கல்யாணி திருக்குளம், குஜராத்தில் உள்ள உலகப்பிரசித்திபெற்ற ராணி கா வாவ் குளம் ஓர் உதாரணம்.  இப்பொது புதிய நூறு ரூபாய் தாள்களில் ராணி கி வாவ் படத்தை காணலாம்.

திருவேலங்காடு கோவில் குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம், மதுரை மாரியம்மன் தெப்பகுளம், திருவள்ளூர் வீரராகவ சுவாமி திருக்குளம், கும்பகோணம் மகாமக திருக்குளம் போன்றவை தமிழ்நாட்டில் உள்ள பெரிய குளங்களில் ஒன்று.

திருக்குளம் பல அறிய வரலாற்று நிகழுவுகளை நமக்கு நினைவு படுத்துகிறது. 

திருப்புலீச்சரத்து திருக்குளத்திலே மூழ்கி திருநீலகண்டநாயனாரும் மனைவியாரும் மூப்புப்பருவம் நீங்கி, இளைமைப்பருவம் உடையவர்களாய்ப் பிரகாசித்தார்கள்.

திருஞானசம்பந்தருக்கு அன்னை பராசக்தி ஞானபால் தந்தது சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்மா தீர்த்த குளத்தங்கரையில். இன்றும் சாட்சியாக இருக்கிறது.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் திருக்குளம் "சங்கு தீர்த்தம்" என்றழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.  2011-ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் அமிர்தசரஸ் என்னும் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.  வசந்த மண்டபத்தில் 10 நாட்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். நின்ற கோலத்திலும், சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.  1939 மற்றும் 1979 ம் ஆண்டுகளில் நடந்த இந்த வைபவம் அடுத்து 2019 ம் ஆண்டு நடக்கும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் பொற்றாமரைக் குளம் சிறப்பு மிக்க ஒன்று.  சிவபெருமானை பூஜிப்பதற்காக இந்தக் குளத்தில் இருந்துதான், பொன் தாமரை மலரைப் பெற்றான் இந்திரன்.
திருக்குறளின் பெருமையை நிலைநாட்டிய சங்கப் பலகை இந்தத் திருக்குளத்தில் தோன்றியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. ஒரு நாரைக்கு சிவபெருமான் அருளியபடி, இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், இன்னபிற நீர்வாழ் உயிரினங்களும் இல்லாமல் இருப்பது இன்றும் காணப்படும் அதிசயங்களில் ஒன்று.  பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, பொற்றாமரைக் குளத்தில் இருந்து நக்கீரரை உயிர்ப்பித்துக் கொடுத்தார் சிவபெருமான்.

திருப்பதி தேவஸ்தானம் திருக்குளத்தை நன்கு பாராமரிக்கிறது.  திருமலையில்  ஶ்ரீவராகசாமி ஆலயம் அருகே திருக்குளம் உள்ளது. குளத்தில் குளித்துவிட்டு ஶ்ரீவராகசாமியை  தரிசித்து விட்டு, பின்பு பெருமாளை தரிசிக்க செல்ல வேண்டும்.

குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும், காரணம்? அங்கே கொங்கணர் சித்தர் ஜீவசமாதி ஆனவர்.  ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர். இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

மேலும், பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் இந்த குளத்தில் தான் கலக்கிறது.

சென்ற வருட கோடை விடுமுறைக்கு மதுரை சென்றபோது, மதுரை மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றோம். மாரியம்மன் தெப்பக்குளம் வற்றிபோய் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். "மதுர மரிக்கொழுந்து வாசம்....." பாடலில் வரும் தெப்ப குளமா இது என்று தோன்றியது.

திருவள்ளூர் வீரராகவ சுவாமி திருக்குளம் முழுதும் நிரம்பியதை சிறுவயதில் கண்டிருக்கிறேன். இப்போதைய நிலை பற்றி சொல்ல வேண்டாம்......

கோடை பள்ளி விடுமுறைக்கு திருவேலங்காட்டில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு செல்லும் முன் அம்மா என்னை "குளதாண்ட போவாதே" என எச்சரிக்கை செய்வாள்.  குளத்துபடிகளில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடிக்கும்.

ஒரு முறை ஆந்திராவில் உள்ள நந்தியால் கோவிலுக்கு இரவு போய் சேர்ந்தோம்.  விடியற்காலையில் குளத்தில் குளிக்க சென்று தண்ணீர் குளிராக இருக்குமென கால் வைக்க தயங்கினோம், மாறாக குளத்து நீர் வெது வெதுப்பாக இருந்தது. பிறகென்ன நன்றாக குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தோம்.

எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் திருக்குளத்தில் குளித்துவிட்டு தான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இதுதான் ஐதீகம். ஆனால் குளிக்கும் நிலையில் குளங்களை இல்லை என்பதே உண்மை. கழிவு நீர் கலப்பு, பாசி படிந்த படிகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு கடைகள்.  குளத்தில் கால் வைக்கவே பயமாக இருக்கிறது 

சமீபத்தில் திருப்போரூர் முருகன் கோவில் குளத்தில் கால் அளம்பிவிட்டு ஸ்வாமியை தரிசிக்க செல்லலாம் என்று இறங்கினால், படி முழுதும் பாசி படர்ந்து வழுக்கையாக இருந்தது.  அங்குள்ளவர்கள் எச்சரித்தததால், குளத்தை பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன்.

ஏரி, குளங்களைய நாம் விட்டு வைக்கவில்லை, கோவில் குளங்களை சும்மா விடுவோமா.

புரசைவாக்கம் டேங்க் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளுக்கு பின்னே கொஞ்சம் எட்டி பாருங்கள், மிகப்பெரிய குளம் தெரியும்.

பூவிருத்தமல்லி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைகளுக்கு பின்னே பார்த்தால் மிகப்பெரிய குளம் தெரியும்.

இது போல் பல ஊர்களில் திருக்குளத்தை மறைத்து நிறைய ஆக்கிரமிப்புகளை காணலாம்.

மழைக்காலத்தில் சாலையில் சேகரமாகும் / வழிந்தோடும் நீர் எல்லாம் திருக்குளத்தில் விழும் படி மற்றும் ஏரி நிரம்பினால் உபரி நீர் திருக்குளத்தில் சேர பின்பு அது நிரம்பி உபரி நீர் வேறு குளங்களுக்கு  சேரும்படி நம் முன்னூர்கள் வழி செய்தார்கள்.  ஆனால் நாம் அதையெல்லாம் அடைத்துவிட்டு தண்ணீர் புகாதபடி செய்துவிட்டோம்.

ஆயிரம் குளங்களை வெட்டலாம் ஆனால் ஒரு திருக்குளத்தை கூட நம்மால் உருவாக்க முடியாது.

- காளிகபாலி

Saturday, 30 June 2018

அது ஒரு மாம்பழ காலம்

மா பலா வாழை என முக்கனிகளில் முதல் கனியான  மாம்பழ சீசன் முடிய இன்னும் சில நாட்களே உள்ளது.

மாங்கனி ஒரு சமத்துவ கனி. சிறியவர் முதல் பெரியவர் வரை, ஏழை, பணக்காரன் என எல்லா தரப்பினரும் விரும்பு உண்ணும் ஒரு கனி மாங்கனி.
நமது உணவுகளில் இடம்பெறும் ஒரே கனி மாங்கனி. கனிகளுக்கெல்லாம் அரசன் மாங்கனி; ஆம் இது ராஜகனி; தேவகனி.

ஆப்பிள், திராட்சை, கொய்யா, சாத்துக்குடி இத்தியாதி, இத்தியாதி  என எல்லா கனிகளுக்கு ஒரு நிரந்தர சுவை இருக்கும். ஆனால் மாங்கனிக்கு மட்டுமே ஒவ்வொன்றுக்கும் தனி தனி சுவை.

Image from Google
கோடை வந்துவிட்டால் மாங்காய் கார பச்சடி, மாங்காய்-வெள்ளம் இனிப்பு பச்சடி, கத்திரிக்கா-முருங்கை-மாங்காய் கலந்த சாம்பார், மாங்காய் சாதம் மற்றும் தொட்டுக்கொள்ள மாம்பழம் என மாங்காய் /மாம்பழ நுகர்வு எங்கள் வீட்டில் மிகுதியாக இருக்கும்.

சமீப காலமாக எங்கள் குடும்பத்தின் மாம்பழ நுகர்வு குறைந்துகொண்டே வருகிறது . காரணங்கள் பல இருந்தாலும் செயற்கை முறையில் பழுக்கவைத்து மாம்பழங்கள் விற்கப்படுகிறது. அதை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே வாங்க அச்சமாயிருக்கிறது.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டில் இருக்கும்போது,  கொத்தவாள்ச்சாவடியிலுருந்து மாமா இரண்டு வெற்றிலை கூடை நிறைய செந்தூரா மற்றும் நீளம் வகை மாம்பழம் வாங்கி வருவார்.  சாப்பிட அவ்ளோ சுவையாக இருக்கும்.

கொட்டி போன சிறு சிறு மாங்காய் வகை ஒன்று உண்டு. பாட்டி மொத்தமாக வாங்கி வந்து அறிந்து, உப்பு போட்டு வெய்யிலில் காயவைத்து ஊறுகாய் தயாரித்து, ஹார்லிக்ஸ் பாட்டிலில் நிரப்பி அம்மாவுக்கு கொடுத்து அனுப்புவாள். சில மாதங்கள் வரும்.  அலாதியான சுவையாக இருக்கும்.  இப்பொது அது போல ஊறுகாய் போட்டு கொடுக்க பாட்டி இல்லை.

இப்பொது ஊறுகாய் போட யாரும் மெனக்கெடுவதில்லை, எல்லா வகையான ஊறுகாய்கள் சந்தையில் பாட்டிலில் அடைத்து சல்லிசான விலையில் சந்தையில் விற்கப்படுகிறது.

"வெறும் மாங்காய் அதோடு சேர்த்து பச்சைமிளகாய் ஒரு கடி கடித்து தயிர் சாதம் அல்லது பழைய சாதத்தோடு சாப்பிட ரணகள சுவையாக இருக்கும்" - இது ஒரு நண்பரின் அனுபவம்.

அதுமட்டுமா மாங்காய்த் துண்டுகள் தொட்டுக்கொள்ள உப்பு, மிளகாய்  - இது
அபார சுவையுடைய காம்போ.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்கள் இப்பொது சர்வ சாதாரணமாக சந்தையில் கிடைக்கிறது.  சௌகார்பேட் மின்ட் தெருவில் சுவையான உலகப்புகழ் பெற்ற ரத்னகிரி மாம்பழம் நல்ல விலையில் கிடைக்கிறது. வாங்கி சுவைக்கலாம்.

வருடம் முழுதும் மற்ற பழங்களை விற்று பெரும் இலாபத்தை விட மூன்று மாதங்களில் மாம்பழங்கள் ஈட்டி தரும் இலாபம் அதிகம் - இது ஒரு பழக்கடைக்காரரின் கூற்று.
Image from Google
நான் குடியிருக்கும் வீட்டில் ஒரு மாமரம் உண்டு. சீசனில் நல்ல கனி கொடுக்கும் மரம் அது. காலையில் கதவை திறந்தால் அணில் கடித்து /சாப்பிட்டு போட்ட  மாங்கனிகள் / துகள்கள்  கீழே  விழுந்து கிடக்கும்.  அந்த இரண்டு மாதம் மரத்தில் வாழும் அணில்களுக்கு கொண்டாட்டம் தான்.

கிருஷ்ணகிரியில் நடத்தப்படும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி சென்னையில் நடத்தினால், என்னை போன்ற  சென்னைவாசிகளுக்கு எத்தனை வகை மாங்கனிகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எங்கள் தெருவில் நீண்ட நாட்களை பூட்டி இருக்கும் ஒரு வீட்டின் வாசலில் உள்ள மாமரத்தில் பழங்கள் பழுத்து கிழே விழுந்து கிடக்கிறது. ஆனால் எடுக்க தான் ஆள் இல்லை.  தன வீட்டில் விளைந்த மாம்பழங்களை சாப்பிட கொடுப்பினை இல்லை போலும் அந்த வீட்டின் உரிமையாளருக்கு.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Friday, 29 June 2018

வாசிப்பே சுவாசம்

வாசிப்பு பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு தமிழ் கற்று கொடுத்த ஆசிரியையை தான் காரணம். அவர் எப்போதும் ஏதாவது ஒரு தமிழ் புத்தகம் கையில் வைத்திருப்பார். புத்தக தலைப்பை எழுத்து கூட்டி படிப்பதுண்டு.

அப்பா எப்போதும் முடிதிருத்த எங்கள் தெருவிலுள்ள நடராஜன் அண்ணன்
முடிதிருத்த கடைக்கு கூட்டி செல்வார். அப்போது தினத்தந்தி வசிக்கும் பழக்கம் ஏற்பட, பள்ளி விட்டதும் நேராக நடராஜன் கடைக்கு சென்று அன்றைய தினத்தந்தி நாளேடை வாசித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். இது விடுமுறை நாட்களிலும் தொடர்ந்தது  தினத்தந்தி, ராணி மற்றும் குமுதம் வரை நீண்டது. சிலசமயங்களில் நடராஜன் கடை மூடியிருந்தால் செம கடுப்பாயிருக்கும்.  எப்போதுமே நடராஜன் அண்ணன் வாசிப்பு  பழக்கத்தை ஊக்குவிப்பவராக இருந்தார். தினத்தந்தியின் எழுத்து நடை, செய்தியை சொல்லும் பாங்கு இதெல்லாம் எனக்கு பிடிக்கும். அப்போது வேறு எந்த தினசரி நாளிதழும் என்னை கவரவில்லை. அதன் பிறகு தினத்தந்தி எத்தனையோ மாற்றங்களை கண்டது.  இப்பொது வாசிப்பது தி இந்து தமிழ்.   தி இந்து தமிழில் வரும் செய்தி கட்டுரை என்னுடைய முதல் தேர்வு.  அதற்காகவே தி இந்து தமிழுக்கு மாறினேன்.

கோடை விடுமுறையில் மாமா கடையில் அவருக்கு உதவியாக இருப்பேன். அப்போது குங்குமம், மஞ்சள் மற்றும் இன்ன பிற வஸ்துகள் பொட்டலம் மடிக்க பழைய ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு மற்றும் வண்ணத்திரை    பயன்படும். மதியவேளையில் பழைய வார இதழ்களை படிப்பது வழக்கமாயிற்று.  குமுதம் நடுப்பக்க படம், விகடன் மதன் நகைச்சுவை கார்ட்டூன், கல்கண்டு லேனாவின் ஒருபக்க கட்டுரை இதெல்லாம் எனக்கு பிடித்தவை.

வாசிப்பு பழக்கம் பள்ளியை தாண்டி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது. 

பாட்டி வீட்டில் குடியிருந்த குடும்பத்தினர் மூலம் ஒரு இனிய நாளில் தி இந்து ஆங்கில நாளேடு அறிமுகமானது.  அர்த்தம் புரியுதோ இல்லையோ அப்படியே புரட்டி பார்ப்பது. அப்போது மூன்றாம் பக்கம் சென்னை நகர திரையரங்கில் ஓடும் சினிமாக்கள் பற்றிய பத்தி செய்தி இடம்பெறும்.  அங்கிருந்து தான் வாசிக்க தொடங்கினேன், பின்பு மெல்ல முக்கிய செய்திகள் மற்ற விஷயங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.

என்னை சுற்றி யார் யாரெல்லாம் தினசரி மற்றும் வார இதழ் வாங்குகிறார்களோ, அவர்களிடம் கூச்சப்படாமல் கேட்டு வாங்கி படிப்பதுண்டு.  கல்கி / தேவன் சிறுகதைகள் எனக்கு பிடித்தவை.

கிளை நூலகம் செல்ல ஆரம்பித்து, விடுமுறை நாள் முழுதும் நூலகத்திலேயே இருந்ததுண்டு. எங்கள் ஊருக்கு சென்றால் அங்குள்ள கிளை நூலகத்துக்கு செல்வதுண்டு. வாரம் ஒரு நாள் பள்ளியில் நூலகத்தில் உட்கார வைப்பார்கள். படிக்க புத்தகம் தந்து பிறகு வாங்கி வைத்துவிடுவார்கள்.
பள்ளியில் நடக்கும் வினா விடை போட்டியில் என்னுடைய பெயர் கண்டிப்பாக இருக்கும்.

இந்த வாசிப்பு பழக்கம் பள்ளி / பட்டய பாட புத்தகங்களையும் இயல்பாக வாசிக்க தூண்டியது. தேர்வில்  கேள்விகளை புரிந்துகொண்டு, விடைகளை சொந்தமாக எழுத உதவியது. ஒன்று முதல் பத்து வரை இரண்டாவது மொழி பாடம் இந்தி, பன்னிரெண்டாம் வகுப்பு  மற்றும் பட்டய படிப்பில் இரண்டாவது மொழி தமிழ் எடுத்து படிக்கும் அளவுக்கு வாசிப்பு பழக்கம் கைகொடுத்தது.

இப்பொது செய்திகளை / புத்தககங்களை வாசிக்க கிண்டில், அலைபேசி, இணையதளம் மற்றும் கணினி பல தளங்கள் இருந்தாலும்,  எப்போதும் புத்தகங்களே என்னுடைய பயணதுக்கு  துணை.

என்னுடைய வாசிப்பு அடுத்தகட்டதுக்கு நகரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. முக்கிய படைப்புக்களை தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தாலும், அதற்கான சூழல் அமையவில்லை என்பதுதான் உண்மை.

நெருக்கடியான மற்றும் வறட்சியான காலகட்டத்தை கடக்க வாசிப்பு பழக்கம் துணையாயிருந்தது.

இன்னும் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், நேரமின்மையால்  முடியவில்லை.

இந்த வருடம் புத்தக கண்காட்சிக்கு பையன்களை அழைத்து சென்று புத்தகங்கள்  வாங்கி கொடுத்தேன்.  எப்படியோ அவர்களும் மெல்ல வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போக போக தான் தெரியும்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Wednesday, 17 January 2018

மூன்று பல்புகள்


இப்போதெல்லாம் திரையரங்கில் படம் பார்ப்பது பிடிக்கிறது. சமீபத்தில் பார்த்த மூன்று படங்கள்.

வேலைக்காரன் : 'தனிஒருவன்' போல அல்லது சேரி வாழ் மக்கள் சிரமங்களை சொல்லும் ஒரு பொலிடிகல் திரில்லராக இருக்கும் என்று போனால் உணவு கலப்படம், அது இது என்று எங்கெங்கோ கொண்டு போய் கடைசியில் கம்யூனிசம் போதிக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா.

அஞ்ஞாதவாசி: திருவிக்ரம் ஸ்டைலிஷ் இயக்குனர், அவருடைய படங்களில் வசங்கள் தெறிக்கும். ஆக்ஷன் பிளாக் பிரமாதமாக இருக்கும்.

திருவிக்ரம், பவன் கல்யாண்  இதற்கு முன்பு ஜல்ஸா, அத்தரின்டிக்கி தாரேடி போன்ற படங்களில் இணைந்திருக்கிறார்கள். அதனால் அஞ்ஞாதவாசி படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியது. தமிழ் படத்துக்கு இணையாக சென்னை மற்றும் புறநகர் புகுதிகளில் உள்ள  திரையரங்கில் அஞ்ஞாதவாசி திரையிடப்பட்டது.  பவன் கல்யாணுக்கு சென்னையிலும் ரசிகர் கூட்டம் உள்ளது போலும். எனக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது அத்தரின்டிக்கி தாரேடி போல ஒரு முழுநீள ஆக்ஷன் + குடும்ப சென்டிமென்ட் படமாக இருக்கும் என்று போனேன்.

அத்தரின்டிக்கி தாரேடி எனக்கும் என் பசங்களுக்கும் பிடித்த படம். மா தெலுங்கு தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும் பார்ப்போம். முதல் ரீல் முதல் கடைசி ரீல் வரை விறுவிறு திரைக்கதை அமைத்திருப்பார் திருவிக்ரம். உயிரோட்டமான தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் இனிய பாடல்கள்.

அத்தரின்டிக்கி மற்றும் அஞ்ஞாதவாசி ஏறக்குறைய ஒரே கதை போல இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் எம்.எஸ் அம்மா பாடல் ஒலிக்கும் இதில் டி,கே பட்டம்மாள் பாடல்.

அதில் கதாநாயகன் வீட்டு பெயர் - 'நந்தா' இதில் 'விந்தா'.
அதில் போமன் இரானி தாத்தா இதில் அப்பா.
அதில் கதாநாயகன் 'கார் ஓட்டுநர்' இதில் 'அந்தரங்க உதவியாளர்'
அதில் நதியா அத்தை இதில் குஷ்பு வளர்ப்பு அம்மா.
இரண்டிலுமே கதாநாயகன் தன்னுடைய இருப்பை மறைத்து வாழ்வான்.

அத்தரின்டிக்கியில் நகைசுவை அபாரம் அஞ்ஞாதவாசியில் நகைசுவை பகுதி குறைவு. ஆக்ஷன் கோரியோக்ராபி இரண்டிலுமே அருமை. அதுமட்டும் போதுமா,,...!

பச்.. இந்தமுறை திருவிக்ரம் மாஜிக் மிஸ்ஸிங்.

ஸ்கெட்ச்: ஸ்கெட்ச் டிரெய்லர் நன்றாக இருந்ததால், சரி விக்ரம் எதிரிகளை ஸ்கெட்ச் தூங்குவார் போல என்று நினைத்து போனால், இங்கே தவணை நிலுவை கட்டாத வண்டியை தூக்குகிறார். நிச்சயமாக விக்ரமுக்கு ஏற்ற கதை இதுவல்ல. விக்ரம் என்ற ஆளுமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறன்.
சரி மேலும் எதற்கு பல்பு வாங்கவேண்டும் என்று மற்றைய இரண்டு படத்துக்கு போகாமல் தவிர்த்து விட்டேன்.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி
 

Monday, 1 January 2018

அம்மாவின் சமையல்

தனி குடித்தனம் வந்த புதிதில் அம்மாவின் சமையலை ரொம்பவே மிஸ் செய்தேன். மின்சாரம் (சம்சாரம்) அப்போது தான் தனியாக சமைக்க ஆரம்பிதித்திருந்தாள். அவள் வைக்கும் சாம்பார், ரசம் மற்றும் காரக்கொழம்பு எல்லாம் ஒகே தான், ஆனால் காரசாரம் இல்லாதிருந்தது. எப்படியோ அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டேன். இப்பொது பரவாயில்லை நன்றாக சமைக்கிறார்.

அம்மா சமைத்த சிலவற்றை நினைத்து பார்க்கும் பொது, இன்றைய இளையதலைமுறைக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா என்று தெரியவில்லை. 

வெந்தய குழம்பு:முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து விடுவார். மறுநாள் காலை குக்கரில் சாம்பார் பருப்புடன்  வெங்காயம், தக்காளி ஊறவைத்த வெந்தயம் வேகவைத்து. பருப்பு கடையும் மண் சட்டியில் இவையெல்லாம் கொட்டி கடைந்த பிறகு தாளித்தால் வெந்தயம் குழம்பு தயார். மூன்று வேளையில் வெந்தயகுழம்பு வெவ்வேறு இணையில் சாப்பிடுவோம். அதில் தொட்டு கொள்ள அரிசி வத்தல் -வெந்தய குழம்பு சாதம் ஜோரான இணை.  மறுநாளைக்கும் வெந்தய குழம்பு நன்றாக இருக்கும்.
உப்பு உருண்டை: ஊறவைத்த பச்சரிசியை முறுக்கு மாவு பதத்துக்கு அரைத்து, தாளித்து கொள்ள வேண்டும்.பின்பு கையால் உருண்டை பிடித்து இட்லி குக்கரில் வைத்து ஆவி பிடித்து இறக்கி.ஆறிய பிறகு சாப்பிட்டால் அபார சுவையாக இருக்கும்.  தொட்டு கொள்ள கார சட்னி அல்லது அப்படியே சாப்பிடலாம். சனிதோறும் எங்கள் இரவு சிற்றுண்டி இது.
ஆட்டு குடல் கறி: ஞாயிறு  காலை ஆட்டு குடல் வாங்கி வந்து 4 -5 முறை  நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் வேக வைத்து, கறி குழம்பு போல் செய்வார்.  நன்றாக வெந்து குடல் பஞ்சு போல் இருக்கும். சுட சுட சாதத்துடன் குடல் கறி குழம்பு ஊற்றி சாப்பிட்டால் கொண்டா கொண்டா என்று இறங்கும்.
ஹோட்டல் சாம்பார்: தீபாவளி, பொங்கல், எங்கள் பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் அம்மா ஹோட்டல் சாம்பார் செய்வார். அதிகாலை  வெங்காயம், தக்காளி மற்ற துணை பொருட்கள் தயாராக இருக்கும். பருப்பு வெந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு வதக்கி, பின்பு கடைந்து சிறிது நேரத்தில் ஹோட்டல் சாம்பார் தயார் செய்துவிடுவார். இன்னொரு அடுப்பில் இட்லி வெந்துகொண்டிருக்கும். கேசரி, ஹோட்டல் சாம்பார் மற்றும் இட்லி எங்கள் வீட்டின்  Signature டிஷ். சமீபகாலமாக மின்சாரமும் ஹோட்டல் சாம்பார் நன்றாக சமைக்க ஆரம்பித்திருக்கிறார்.

வெண்ணை - நெய்: இப்பொது பல நிறுவனங்களின் நெய் சந்தையில் கிடைக்கிறது.  அம்மா எப்போதுமே வெண்ணை வாங்கி வந்து அதை பக்குவமாக காய்ச்சி உபயோகப்படுத்துவார்.வெண்ணெயை காய்ச்சி அடுப்பு அணைக்கும் முன்பு முருங்கை இலையைசிறிது கிள்ளி போடுவார். அது பொரிந்ததும் தனியாக எடுத்து கேழ்வரகு மாவுடன் கலந்து  சர்க்கரை சேர்த்து எங்களுக்கு கொடுப்பார்.  அது சுவையுடன் இருக்கும். வெண்ணை காய்ச்சும் போதெல்லாம் தவறாமல் கிடைக்கும் இது.

சாதாரண ரசம் சாதத்துக்கு வேர்க்கடலை வறுத்து உப்பு மிளகாய் தூள் கலந்து வைத்து விட்டால் போதும், ஜம்மென்று சாதம் இறங்கும்.

கருவாட்டு குழம்பு, கேழ்வரகு களி, கேழ்வரகு கஞ்சி, உளுத்தம் கஞ்சி, மிளகு குழம்பு இதெல்லாம் அரிய உணவுவகைகளாகிவிட்டது.

நாங்கள் இளம்வயதில் சாப்பிட்ட உணவில் இருந்த சுவை, மனம், தரம்  எங்கள் பிள்ளைகள் சாப்பிடும் இன்றைய உணவில் இல்லை என்பதே உண்மை.  ஒரு முழுமையான ஊட்ட சத்து உணவு வீட்டில் கிடைத்தது. இப்பொது முழுமையான ஊட்டச்சத்தை ஈடுகட்ட நம் பிள்ளைகளுக்கு எதை எதையோ வாங்கி கொடுக்க வேண்டிருக்கிறது.

ஹோட்டல் உணவு எங்கேயாவது வெளியூர் போகும்போது தான் சாப்பிடமுடியும். இப்பொது மாதம் இரண்டு அல்லது ஒரு நாள் ஹோட்டல் உணவு கட்டாயமாகிவிட்டது.

அடுப்பில் சமைக்கும் போதும் சரி,  எரிவாயு அடுப்பில் சமைக்கும் போதும் சரி  திட்டமிட்டு சீக்கிரம் சமைத்து விடுவார் அம்மா. அதே வேகத்தில் வேலைக்கு செல்லும் அப்பாவுக்கும், பள்ளி / கல்லூரி செல்லும் எங்களுக்கும் மதிய உணவு கட்டி கொடுத்துவிடுவார்.

நாம் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டிருக்கும்போது நமது அம்மாக்கள் துரித
சமையலுக்கு தேவையான தொழிற்நுட்பங்களை கற்றுக்கொண்டு அநாயசமாக அதை உபயோகப்படுத்திக்கொண்டிருந்தார்கள். என்ன புரியலையா....? அதான் சட்னி/ மசாலா அரைக்க மிக்ஸி, இட்லி மாவரைக்க கிரைண்டர், குளிக்க வெந்நீர் வைக்க வாட்டர் ஹீட்டர், குக்கர், மின் அடுப்பு போன்றவைகள். வீட்டிலாகட்டும் அல்லது அலுவலகத்திலாகட்டும் புதிய தொழிற்நுட்பங்களை விரைந்து கற்றுக்கொள்வது பெண்களே...!

மசாலா, கோதுமை மாவு, இட்லி மாவு, சீயக்காய், புட்டு மாவு, மிளகாய் தூள் எல்லாமே நேரடியாக அரவை இயந்திரத்தில் அரைத்து உபயோக படுத்தினர் நமது அம்மக்கள். இப்பொது சந்தையில் கிடைப்பதெல்லாம் ஆயத்த சமையல் பொருட்கள். விலை மலிவு, சுவை குறைவு.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி

Thursday, 28 December 2017

இணைந்த கைகள் (1990)

இணைந்த கைகள் (1990)
 
 
 
இது பட விமர்சனம் அல்ல. இன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை கேட்டு கொண்டே என்னை கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990 களில் பயணித்தது.

முதல் ரீலில் வரும் சண்டை காட்சி, நண்பர்கள் இணையும் அந்த இடைவெளி  காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி சண்டை காட்சி,  இறுதி காட்சி என மனதில் படம் ஓடியது. இணைந்த கைகள் படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் 20 பேர் சேர்ந்து பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில்  முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். எனக்கு பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.




இன்று காலை அலுவலகம் வரும் வழியில் "அந்தி நேர தென்றல் காற்று..." என்ற பாடலை ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டு கொண்டே என்னை கடந்து போனார் ஒருவர்.  எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே... என்ற நினைவு 1990 களில் பயணித்தது.

முதல் ரீலில் வரும் ஆக்ஷன் பிளாக், நண்பர்கள் இணையும் அந்த இடைவேளை காட்சி அப்போது வரும் ஆர்ப்பரிக்கும் பின்னணி இசை. குள்ளமணி ஆக்ஷன் பிளாக், ரயில் நிலைய கிளைமாக்ஸ்  என மனதில் படம் ஓடியது. 'இணைந்த கைகள்' படம் வெளிவந்தபோது நான் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். வகுப்பு  நண்பர்கள் 10 பேர் சேர்ந்து பூவிருந்தமல்லி சுந்தர் 70 MM  திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த படம். எனக்கு பிடித்த படம். அதன் பிறகு 2 -3 முறை பார்த்திருப்பேன்.

ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, சிந்து, நாசர், செந்தில் ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்து "முற்றிலும் இளைஞர்களுக்காக" என்ற கோஷத்துடன் மிகுந்த பொருட்செலவில் வெளிவந்த பிரம்மாண்ட படம்.

சமூக ஊடகங்கள் வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் படத்துக்காக பரவலான  எல்லா தினசரி முன்னணி பத்திரிக்கை, வார இதழ் மற்றும் வானொலியிலும் விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆபாவாணன். சென்னை மவுண்ட் ரோட்டில் பிரமாண்டமான விளம்பர பதாகை இடம்பெற்றது நினைவிருக்கிறது. விளம்பரங்கள் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இப்போதும் எனக்கு புரியாத விஷயம் இந்த படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது தான்.  தேவையான எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படம்.

- மறைந்த இயக்குனர் என். கே விஸ்வநாதனின் விறுவிறு இயக்கம்.
- மனோஜ் கியானின் இனிமையான பாடல்கள் /பின்னணி இசை. 
- சண்டை காட்சிகள்.
- சென்டிமென்ட் காட்சிகள்.
- அப்போதைய முன்னணி நடிகர்கள் நடித்தது.
- நாசரின் வில்லத்தனம்.
- ஹீரோவுடன் மோதும் சண்டைகாட்சியில் வித்தியாசமான தோற்றத்தில் குள்ளமணி.
- கிளைமாக்சுக்கு முந்திய பாடலான "அந்தி நேர தென்றல் காற்று..." அப்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கொசுறு செய்தி:

இணையத்தில் எதையோ தேடும் பொது கிடைத்த தகவல்கள் தமிழில் இதோ:

இயக்குனர் சாணக்கிய இயக்கத்தில் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் தமிழில் மற்றும் என்.டி ஆர் தெலுங்கில் நடிக்கவிருந்த படம் இணைந்த கைகள்.  மிகுந்த பொருட்செலவில் எடுக்க திட்டமிடப்பட்டது. ஈரானில் படப்பிடிப்பு மற்றும் ஈரானிய நடிகையை அறிமுகபடுத்த எண்ணியிருந்தார் எம்.ஜி.ஆர். சத்யா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. எம்.எஸ் விஸ்வநாதன் பாடல்களும் ரெடி. பட பூஜையில் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.

நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம் மற்றும் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் போன்ற இனிய பாடல்கள் பின்னர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்றது.

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.

- காளிகபாலி