Wonderful Shopping@Amazon

Wednesday 16 December 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-104

ராஜாவின் டவுன் பஸ் பாடல்கள்

காலை 6.00 மணி

கும்பகோணம் பேருந்து நிலையம் - திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலுக்குப் பரிகார பூஜை செய்ய மயிலாடுதுறை செல்லும் தனியார் பேருந்தில் உட்கார்ந்திருந்தோம். பயணிகள் வர வர பேருந்து நிரம்பியது. அப்போது பாடல்களை ஒலிக்கவிட்டார் ஓட்டுநர். 'கோவில்காளை' படத்தில், பாடகர் மனோ மற்றும் ஜானகி அம்மா பாடிய "சோலைக்குயில்கள் ரெண்டு " என்ற இனிமையான முதல் பாடல், பேருந்து கிளம்பியிருந்தது. பேருந்தில் அருமையான ஒளியமைப்புச் செய்திருந்தார்கள். பாடலில் இடைஇடையே வரும் தபேலா இசைக்கருவியின் சத்தம் கூடத் துல்லியமாகக் கேட்டது. இரண்டாவதாகப் 'பாண்டிய நாட்டுத் தங்கம்' படத்திலிருந்து "சிறு கூட்டுல..." பாடல் ஒளிபரப்பானது, அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கிவிட்டோம். கோவிலிலிருந்து தாங்கும் விடுதிக்குத் திரும்பியவுடன் இந்தப் பாடலை அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இளையராஜா பாடல்களைக் கேட்கத் தமிழகம் முழுதும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யவேண்டும் வேண்டுமாம் - இது நண்பனின் ஆசை. நீங்கள் தொலைக்காட்சியில் கேளுங்கள், அலைபேசியில் கேளுங்கள், சிறந்த தலையணியுடன் கேளுங்கள், வானொலியில் கேளுங்கள், காரில் கேளுங்கள் ஆனால் எல்லாவற்றையும் விடப் பேருந்தில் பயணம் செய்யும்போது ஜன்னலைப் பார்த்துக்கொண்டே இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது (அதே பாடல்கள் தான்) ரம்மியமாக ({வேறு மாதிரி) இருக்கும்.

ஒரு முறை தனியார் மொபஸல் பேருந்தில் பயணம் செய்யும்போது, இனிமையான ராஜா பாடல்கள் பயணத்தைச் சுகமாக்கியது. 'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற "நிலா காயுது ..." பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. பேருந்திலிருந்த பயணிகள் கொஞ்சம் நெளிய ஆரம்பித்தார்கள். இடையில் வரும் முத்த சத்தம் ..பயணிகள் முகத்தில் நமட்டுச் சிரிப்பு ..ஓட்டுநருக்கு என்ன தோன்றியதோ சடாரெனப் பாய்ந்து பாடலை மாற்றி விட்டார் .. என்ன செய்யச் சிலருக்கு இப்படியும் சங்கடம்.

நம்மிடம் இருப்பதை விட நம்மூர் ஓட்டுநர்களிடம் தான் இளையராஜாவின் அத்தனை பாடல்கள் அடங்கிய ஒலிநாடகள்/சிடிக்கள் இருக்கிறது. நீங்கள் பிரதி எடுக்கக் கேட்டுப் பாருங்களேன், அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்கமாட்டார்கள். எனக்குத் தெரிந்த கால் சென்டர் கார் ஓட்டுநர் வருத்தத்துடன் கூறியது : " ராஜா சார் பாட்டு கேசட்ட எவனோ ஆட்டயபோட்டான், கஷ்டப்பட்டுச் சேர்த்துவச்சது.." பின்னே உட்கார்ந்து வண்டி ஓட்டற்றவனுக்குத் தான் கஷ்டம் தெரியும், ராஜாவின் பாடல்கள் தான் அவர்களுக்குத் துணை. அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

இசைஞானியின் அதிகாரப்பூர்வ தலத்தில் "டவுன் பஸ் பாடல்கள் தொகுப்பை" கேட்டு மகிழுங்கள்.



நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-103

'டிக் டிக் டிக்' (1981)

வார இறுதி நாள் கமல்-மாதவி பாடல்களுடன் கழிந்தது. இதுவும் ஒரு துள்ளலான பாடல் தான். கமல்-மாதவி கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் அபாரமாக இருக்கும். மாணவர் பருவத்தில் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். 'மோனோ' இசை தான் அதிலேயே வயலின், கிட்டார் போன்ற இசை கருவிகளின் துல்லியமான இசை தடையின்றி காதில் பாய்ந்து, மனதில் பதிந்தது. இந்த பாடலை எப்போது கேட்டாலும் பழைய நினைவுகள் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி, கமல்-மாதவி நடித்து 1981-ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதி, ராஜா சார் இசையில் இடம்பெற்று, தாசேட்டன்-ஜென்ஸி பாடிய "பூ மலர்ந்திட .." என்ற இனிமையான Semi-classic பாடல்.  நடனத்தின்போது மாதவியின் கண்கள் அப்பப்பா Scorching Beauty.. என்ன ஓர் பாவம். பாடல் இடையில் தாசேட்டன் "ஐலவ்யூ, ஐலவ்யூ..ஐ லவ் யூ"....... என ஹம் செய்யும் அழகே அழகு.

"படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம்
நான் இருந்திட ஸநிதப மபதநி.."
 
சரி, நீங்களும் இந்த பாடலை கேட்டு ரசியுங்கள்:


 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

 
 

Monday 7 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-102

'ராஜபார்வை'(1981) -'61 Years of Kamalism' 

நூறாவது படம் நடிகர்களுக்குப் வெற்றிப் படங்களாக அமைந்தது இல்லை. வெகுஜன படங்களிலிருந்து விலகி கமல் புதிய விஷயங்களை பரிசார்த்த முறையில் செய்ய ஆரம்பித்த முதல் படம் 'ராஜபார்வை'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம். படம்  சுமாராக இருந்தாலும், ' அபூர்வ சகோதரர்கள்', 'குணா','குருதிப்புனல்', 'ஹே ராம்' போன்ற சிறந்த படங்கள் வர ஆரம்பப் புள்ளியாக இருந்தது 'ராஜபார்வை'. கமலின் சினிமா மொழியில் சொல்வதென்றால் ''எனக்கான உணவை நான் சமைத்துக்கொள்கிறேன் ..".

ஸ்ரீதேவிக்கு பிறகு கமல் - மாதவி ஜோடி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. எண்பதுகளின் கவர்ச்சி கன்னி மாதவி. மாதவி படம் அச்சிட்டு வந்த விமல் கம்பெனி காலண்டர் இன்னும் நினைவிருக்கிறது. மாதவியின்  கண்கள் அப்பப்பா...என்ன ஓர் பாவகங்கள். மாதவி என்று பெயருடையவர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பார்களோ ?

'ராஜபார்வை' என்றாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது 'பாடும் நிலா' மற்றும் ஜானகி அம்மாள் பாடிய, கவிஞர் வைரமுத்து எழுதிய  "அந்திமழை பொழிகிறது ..."  பாடல்.  

ராஜா சாரின் இசையை என்னவென்று சொல்வது ! எப்படி இந்த பாடலை உருவாக்கினார் ? வியப்பு மேலிடுகிறது. பருவ காலங்களுக்கேற்ப மாறி மாறி ஒலிக்கும் இசை, பாடல் இடை இடையே வரும் ராஜா சாரின் குரு திரு டி வி கோபாலகிருஷணன் அவர்களின் ஹம்மிங், வயலின், கோரஸ், முக்கியமாக  அந்த மிருதங்க ஆலாபனை எனக் கிட்டத்தட்ட ஒரு பியுசன் ஜுகள்பந்தி இசை இந்த பாடல். நிமிடத்தில் இசை மகாத்மியம்  நடத்தியிருப்பார் ராஜா.

எனக்குச் சங்கீதம் ஞானம் இல்லை. இரண்டு ராகங்களை இணைத்து உருவாக்கிய பாடல் என நண்பர் சொன்னார்.  நிச்சயம் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இந்த இசை பல நாள் உங்கள் இதயத்தை ஆக்கிரமிக்கும் 

"நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்"

மேற்சொன்ன பாடல் வரிகளில் வரும் ஜானகி அம்மாவின் குரலில் வரும் குழைவு, பின் வரும் ஆலாபனை 'வாவ்' ராகம்.

எது எப்படி இருந்தாலும் ஒளிப்பதிவாளர் முகர்ஜியின் கேமரா ஜாலங்கள் மற்றும் கமல் மாதவி காதல்ரச காட்சிகள், 'ராஜபார்வை' படத்தை இன்றும் புதுத்தன்மை மாறாமல் காத்து வருகிறது.




நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



காளிகபாலி 
 

 

Friday 4 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம் தொடர்.....100

'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' - ஒரு இனிய காலைப் பொழுதில் தோன்றியது இந்த தலைப்பு. அப்போது கூட இந்த தொடர் நூறு பகுதிகளைத் தொடும் என்று நினைக்கவில்லை.  நண்பர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்தைச் சொன்னார்கள். சிலர் சிறியதாக இருக்கிறதே என்றும், சிலர் சினிமா தவிர மற்ற விஷயங்களையும் எழுதலாமே என்று சொன்னார்கள்.  சினிமா,  திரை / இசை ஆளுமைகள், விளையாட்டு ஜாம்பவான்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி எழுதினேன்.  நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் செய்த சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இது முழுதும் இரண்டு நிமிடத்தில் படித்து முடிக்கவேண்டி எழுதியது. 'ஒரு முறை நிகழும் மாயாஜாலம்' பகுதியில் என்னுடைய அனுபவங்களும்  / ஆதங்கங்களும் ஆங்காங்கே விரவியிருக்கும்.


எனக்கே சில பகுதிகள் பிடிக்கும் அவ்வப்போது நானும் படித்து மகிழ்வதுண்டு, ஒரு வாசகனாய்.

அவை:

நடிகர் திலகம் நடித்த 'தெய்வமகன்' பற்றியது......
https://kalikabali.blogspot.com/2019/10/25.html

கிரிக்கெட் ஜாம்பவான் திரு கபில்தேவ் செய்த ஆவணம் இல்லா சாதனை பற்றியது ....
 
'மாயாபஜார்' திரைப்படம், காலஞ்சென்ற குணச்சித்திர நடிகர் எஸ் வி ரங்காராவ் பற்றியது..
https://kalikabali.blogspot.com/2019/11/29.html

'சாந்தி நிலையம்' படத்தில் டிஎம்எஸ் அவர்கள் பாடிய பாடல் பற்றியது....
https://kalikabali.blogspot.com/2019/11/31.html

'சத்ரியன்' படத்தில் காலஞ்சென்ற பாடகி செல்வி.சுவர்ணலதா அவர்கள் பாடிய பாடலை பற்றியது...
https://kalikabali.blogspot.com/2019/09/15.html
 
கவிஞர் நா முத்துக்குமார் அவர்களின் வைர வரிகள் பற்றியது ............

நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்களைப் பற்றியது.....
 
"பயணங்கள் முடிவதில்லை" படத்தில் இடம்பெற்ற பாடலை பற்றியது......

பக்தியிசை பாடகி திருமதி பெங்களூர் ரமணி அம்மாள் பற்றியது.............
 
எண்பதுகளின் டிஸ்கோ இசை மற்றும் அதன் எழுச்சி பற்றியது .......

இது போல இன்னும் சில பகுதிகள் எனக்கு பிடிக்கும்.

மேலும், என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் கோடி............


நன்றி: Canva

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


காளிகபாலி 

Wednesday 2 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-101

ராமு (1966)

தாலாட்டு பாடல்கள் பல இருந்தாலும், பி சுசீலா அம்மா பாடிய இந்த பாடலை கேளுங்கள் பாடல் வரிகளை பின்தொடரும் இசை. இப்போது இது போன்ற பாடலை கேப்பது அரிதிலும் அரிது.

கூட்டு குடும்பமாக வாழ்ந்த எங்கள் பாட்டி வீட்டில் பழைய படங்கள் பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கும், எந்நேரம் விசிஆர் -இல் எதாவது ஒரு பழைய படம் ஓடிக்கொண்டே இருக்கும். தாத்தா எப்போதும் முன்வரிசையில் உட்கார்ந்திருப்பார். சில நாட்கள் கழித்து தாத்தா அதே படத்தை போட மாமாவை வற்புறுத்துவார். மாமாவும் பேசாமல் படம் போட்டுவிட்டு போவார். அப்படி சிறுவர்களான நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதிகபட்சம் பார்த்த படம் 'ராமு', போலவே "
பச்சை மரம் ஒன்று .." மற்றும் "கண்ணன் வந்தான் ..." பாடல்களும் கேட்டு கேட்டு மனதில் பதிந்த ஒன்று. இது போதாதென்று மாநில மொழி திரைப்பட வரிசையில் இந்த படத்தை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். அதையும் ஒரு முறை பார்ப்பார்கள்.

ஹிந்தி படத்தின் கதையை தழுவி திரு ஜாவர் சீதாராமன் திரைக்கதையில், இயக்குனர் ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் 'ராமு'. 'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன் கேட்டு வாங்கி நடித்ததாக ஒரு செய்தி உண்டு. விச்சு டார்லிங் இசையமைத்த
ஐந்து பாடல்களும் முத்தனாவை. இப்போதும் கேட்க கூடியவை. இந்த படத்தில் ஒரு நாயை  நன்றாக பழக்கி 'மணி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார்கள்.  சரி வாங்க அந்த பாடலை கேட்போம்:
 
 
 
 
 
நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 




Tuesday 1 September 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-100

ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் 

பாராலிம்பிக்ஸ் அல்லது ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் திரு முர்லிகாந்த் பெட்கரைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? இல்லை என நான் நினைக்கிறேன்.

1972-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹைடெல்பெர்க்கில் நடந்த கோடைக்கால பாராலிம்பிக்கில் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் பெட்கர் வெற்றி பெற்றார், 37.33 வினாடிகளில் உலக சாதனை படைத்தார். அவர் ஈட்டி போன்ற பிற நிகழ்வுகளிலும் பங்கேற்று இறுதிச் சுற்றை எட்டினார்.

இந்திய இராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பணிபுரிந்த திரு பெட்கர் 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கடுமையான புல்லட் காயங்களைத் தாங்கி நிரந்தர குறைபாடுகள் ஏற்படுவதற்கு முன்பு குத்துச்சண்டை வீரராக இருந்தார். கடந்த ஆண்டு, அவரது சாதனைகளுக்காக அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    


Monday 31 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-99

இந்தியாவின் முதல் நீச்சல் வீராங்கனை

செப்டம்பர் 24, 1940-இல், கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) ஒரு நடுத்தர வர்க்க பெங்காலி குடும்பத்தில் பிறந்த ஆரத்தி சஹா, சிறு வயதிலிருந்தே நீச்சலுக்கான இயல்பான திறமையைக் காட்டினார்.

100 மீட்டர் Breaststroke ஓட்டத்தில் அகில இந்தியச் சாதனையைப் படைத்த அவர், ஹெல்சின்கி ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.

1959-ஆம் ஆண்டில், தனது 19 வது பிறந்தநாளைக் கடந்த ஐந்து நாட்களில், ஆரத்தி சஹா 16 மணி 20 நிமிடங்களில் ஆங்கில சேனலில் வெற்றிகரமாக நீந்திய முதல் மற்றும் வேகமான ஆசியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

அடுத்த ஆண்டு, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார், அவரது இடைவிடாத உறுதியையும், ஜெபிக்கவேண்டும் என்ற மனவுறுதியும், சிறந்த தைரியத்தையும் அரசு அங்கீகரித்தது. நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்; ஆரத்தி சஹா விஷயத்தில் நீச்சல் போட்டியின் பங்கேற்கும் பெண்களுக்கு அவர்களின் ஆர்வத்தைத் தொடர சுதந்திரம் கிடைக்காத காலம் இது.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-98

இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டன்

Talimeren Ao - Wikipedia

நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த, டே ஓ என்று அன்பாக அழைக்கப்படும் டாக்டர் தாலிமரன் ஓவோ இந்தியக் கால்பந்து அணியின் முதல் கேப்டனாக இருந்தார்.  இந்தியாவின் கால்பந்து வரலாற்றில் டாக்டர் டே ஓ அவர்களுக்கு ஓர் சிறப்பிடம் உண்டு.

1918-ஆம் ஆண்டில் அஸ்ஸாமின் நாகா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள  கிராமமான சாங்கியில் பிறந்தார். டாக்டர் ஓவின் தந்தை திரு சுபோங்வதி நிங்டாங்ரி நாகா மலைகளில் முதல் பழங்குடி இன தலைவர் ஆவார். 

தந்தை இறந்த பின், 1933-ஆம் ஆண்டில், டே ஓ, ஜோர்ஹாட் மிஷன் பள்ளிக்கு அனுப்பப்பட்டார், அங்கு தான் அவருக்கு கால்பந்து விளையாட்டின் மீது நாட்டம் ஏற்பட்டது.  அவரது திறமைகள் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் கவனிக்கப்பட்டன.

ஜோர்ஹாட்டிலிருந்து, டே ஓ 1937-இல் காட்டன் கல்லூரியில் சேர குவஹாத்திக்குச் சென்றார். இங்கு அவரது விளையாட்டு மேம்பட்டது. இந்த நேரத்தில், அசாமின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பான மஹாராணா கிளப்பைச் சேர்ந்த வீரர்கள், காட்டன் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு மைதானத்தில் பயிற்சி பெற்றபோது அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்புறமென்ன தலைவருக்கு ஏறுமுகம் தான்.

மஹாராணாவில் இருந்த காலத்தில், டே ஓ அற்புதமான கால்பந்து திறன்களையும் பாராட்டத்தக்க விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினார். அவர் தனது விளையாட்டை மேம்படுத்திக் கொண்டே இருந்தார், ஆனால் அவரது தந்தையின் கடைசி விருப்பம் (மருத்துவம் படிக்கவேண்டும்) அவரது மனதில் உறுதியாக இருந்தன. அவர் 1942-ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்ட படிப்பில் சேர்ந்தார்.

கொல்கத்தாவில், மஹாரானா கிளப்பைச் சேர்ந்த டே ஓவின் பழைய நண்பர், அப்போது மோகன் பகானுக்காக விளையாடிக் கொண்டிருந்த சரத் தாஸ், அவரை கிளப்பின் அணிக்கு அழைத்து வந்து தடுப்பாளராக சேர்க்கப்பட்டார்.  1943 முதல் 1952 வரை மோகன் பகானில் ஒன்பது சீசன்களில் மிட்பீல்டர் மற்றும் தடுப்பாளராக ஆதிக்கம் செலுத்தியபடி இருந்தார். 

அவருடைய அற்புதமான விளையாட்டு திறன் மற்றும் அணியை வழிநடத்திச் செல்லலும் பாங்கு மோகன் பகான் அணியின் கேப்டன் பதவிக்கு அழைத்துச் சென்றது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தேசிய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில், அவர் 1948 லண்டன் ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியை வழிநடத்தினார், இது இரண்டாம் உலகப் போர் காரணமாக 14 வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்றது.

1948 லண்டன் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஒலிம்பிக் அணியின் கொடியை ஏந்தியவர்.  

லண்டன் ஒலிம்பிக்கில் டே ஓ தலைமையிலான அணி  பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேறியது. அவருடன் சைலன் மன்னா மற்றும் தாஜ் முகமது போன்ற போன்றோர்களும் விளையாடினர்.

ஒலிம்பிக்கைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கால்பந்து கிளப் 'அர்செனல்' அவரை ஒப்பந்தம் செய்ய முன்வந்தது, ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்தார்.

அவர் பட்டம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விளையாட்டை விட்டு வெளியேறி, அசாமின் திப்ருகார் மருத்துவக் கல்லூரியில் ENT துறையில் சேர்ந்தார். அவர் 1953-இல் நாகாலாந்துக்குத் திரும்பினார், பின்பு படிப்படியாக உயர்ந்து 1978-இல் நாகாலாந்தில் சுகாதார சேவைகள் இயக்குநராக ஓய்வு பெற்றார்.


நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி    


Sunday 30 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-97

'சத்யா'(1988) -'61 Years of Kamalism' 

இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் அவர்களின் சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய முதல் படம். எனக்கென்னவோ 'Angry Young Man' வேடம் ரஜினியைவிடக் கமலுக்கு சாலப்பொருந்துகிறது என்று நினைக்கிறேன் .'வறுமையின் நிறம் சிகப்பு' படத்திலிருந்து கமலுக்குள் 'Angry Young Man' இருந்த அவ்வப்போது எட்டிப் பார்ப்பான். 'சத்யா' படத்திலும் அப்படிப்பட்ட வேடம் தான். 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் அதுவே வேறுவிதமாகச் செய்திருப்பார். 'ஹே ராம்' படத்தில் உச்சம் தொட்டிருப்பார்.

சென்னை அபிராமி திரையரங்கில் நானும், நண்பனும் சேர்ந்து பார்த்த படம். அவனுக்குப் படம் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது சிலாகிக்கிறான்.

இப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் கொஞ்சம் Realistic-ஆக இருக்கும். அதன் பின் வந்த எல்லா படைகளிலும்  இதுபோன்ற சண்டைக் காட்சிகள் இடம்பெற்றது.

இந்தியாவின் இசைக்குயில் லதாஜி தமிழில் பாடிய தமிழ்ப் பாடல்களைத் தேடியபோது 'வானரதம்' என்ற ஹிந்தியிலிருந்து தமிழ் டப்பிங் (1956-லேயே ஹிந்தி படம் தமிழில் டப் செய்யப்பட்டது ஆச்சரியம் தான்) படத்தில் லதாஜி பாடிய தமிழ்ப் பாடலை கேட்க முடிந்தது. 

அதன் பிறகு முப்பது வருடங்களுக்குப் பிறகு அவர் தமிழில் பாடிய தமிழ்ப் பாடல்களில்  'ஆனந்த' (1987) படத்தில் 'ஆராரோ ஆராரோ " பாடல், 'என் ஜீவன் பாடுது'(1988) படத்தில்"எங்கிருந்தோ அழைக்கும்" பாடல், மற்றும் 'சத்யா'(1988) படத்தில் 'வலையோசை .." பாடல். "இங்கேயும் .." என்ற இனிமையான பாடல் 'சத்யா' படத்தில் இடம்பெறவில்லை.

மேலே சொன்ன மூன்று பாடல்களில் உங்களுக்கு எது பிடிக்கும்? என்பதைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

கவிஞர் வாலி எழுதி, சிந்துபைரவி ராகத்தில் அமைந்த "வலையோசை .." பாடல் புல்லாங்குழலில் தொடங்கிப் பாடல் முழுதும் சிறு சிறு இசைத் துணுக்குகளை இறைத்து அருமையான இசைக்கோர்வை போல உருவாக்கியிருப்பார் ராஜா சார். இப்பாடலில் கமல்-அமலாவின் கெமிஸ்ட்ரி அபாரமாக இருக்கும். 




நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



காளிகபாலி 
 


ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-96

உதயகீதம் (1985)

வெள்ளி விழா நாயகன் மோகன் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன ? என்ற விவாதம் சமீபத்தில் இணையதளத்தில் நடந்தது. ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஒரே மாதிரியான வேடத்தைத் தொடர்ந்து செய்ததால் ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது என்னவோ என்று நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் ஏராளமான வெற்றிப் படங்கள் தந்த மோகன் அவர்களுக்குத் தமிழ் திரைத்துறை வரலாற்றில் எப்போதும் ஒரு இடம் உண்டு.

என்னுடைய உறவினரின் மகள் திருமணம் வந்தவாசியில் நடந்தது. அப்போது குடும்பத்தோடு சென்றிருந்தோம். அப்போது இரவுக் காட்சிக்குத் திருமண மண்டபம் அருகில் உள்ள திரையரங்கில் இந்த படத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. படத்தில் தொடக்கப் பாடலாக வரும் "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்.." என்னுடைய விருப்ப பாடல்.

கதாசிரியர் ஆர் செல்வராஜின் கதைக்கு, இயக்குநர் கே ரங்கராஜ் திரைக்கதை அமைத்து, இயக்கி 1985-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டிற்கு முந்தைய தினம் வெளியான 'உதயகீதம்' படத்திற்கு வயது 35 ஆண்டுகள்.

இளையராஜா சார் இசையமைத்த, படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் மிகப் பிரபலமானது. ''பாடும் நிலா பாலு'' எஸ்பிபியின் குரல் பாடலுக்குப் பொருந்தியதும், திரு எஸ் என் சுரேந்தர் அவர்களின் குரல் பின்னணிக்குப் பொருந்தியதும் மோகனின் திரை வெற்றிக்கு மகுடம் சேர்த்தது.

செந்தில்-கவுண்டமணிஇணை நகைச்சுவை படத்திற்குப் பெரும்பலம். நகைச்சுவை பகுதியை எழுதியவர் திரு ஏ வீரப்பன். 

இயக்குநர் கே ரங்கராஜ்-'வெள்ளிவிழா நாயகன்' மோகன் - இளையராஜா மூன்று பேர் நிகழ்த்திய மாயாஜாலம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.





நன்றி:Youtube 

 குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 
 




Saturday 29 August 2020

லாக்கடவுன் சித்திரங்கள் -2

'செயல்வீரர்' சோனு சூட்

டிகர் சோனு சூட் 'அத்தடு' படத்தில் தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் மகேஷுபாபுவுக்கு இணையான வில்லன் வேடம், அருமையாகச் செய்திருப்பார். தமிழ், ஹிந்தி என ஏகப்பட்ட படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பர்.

இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியா அதிகம் உச்சரித்த பெயர் 'சோனு சூட்'. அவருடைய டிவிட்டர் பக்கம் கோரிக்கைகள், வாழ்த்துக்கள், நன்றிகள் மற்றும் நல்ல உள்ளங்கள் கைகோர்த்து உதவ முன்வருவோர் என நிரம்பி வழிகிறது.

நடித்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல் நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது புதிதல்ல. அவருடைய அம்மா ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியை, மாலை வேளையில் ஏழை பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம் பயிற்றுவிப்பார் மற்றும் துணி வியாபாரியான தந்தை 'லங்கர்' எனப்படும் இலவச உணவு சேவையைச் செய்வார். அதனால் இயல்பாகவே பிறருக்கு உதவும் எண்ணம் இந்த வில்லன் நடிகருக்கு வந்திருக்கலாம்.

கிர்கிஸ்தானில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களைத் தாயகம் கொண்டு வந்தது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலம் செல்ல உதவியது, ஏழை விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கிக் கொடுத்தது என அவரது உதவிக் கரங்கள் நீளுகிறது, அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான நடிகர் சோனு சூட், உதவுவதற்குப் பதவியும், படோடாபமும் தேவையில்லை, நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் போதும் என நிரூபித்திருக்கிறார்.

மேலே சொன்னவற்றைவிடச் சிறப்பான விஷயம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த மாநிலத்திலேயே வேலை தேட 'பிரவாசி ரோஜ்கரை' என்ற இலவச செயலி / இணையதளத்தை அவருடைய நண்பர்கள் குழு உருவாகியுள்ளது. இதனால் பலர் பயன்பெற ஆரம்பித்துள்ளனர்.

நம்மூரிலும் பலர் விளம்பரமின்றி, சத்தமில்லாமல் பல உதவிகளை இந்தக் கொரோனா காலத்தில் உதவுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் நீங்கள் செய்த உதவிகளைப் பற்றிப் பின்னூட்டத்தில் பதிவிடவும்.

 
 
நன்றி:Google

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி    




ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-95

இந்தியா கால்பந்து அணி பங்கேற்ற பிஃபா உலகக்கோப்பை  

பிஃபா உலகக் கோப்பையில் தங்களுக்குப் பிடித்த அணியை ஆதரிப்பதற்காக பெர்லின் முதல் சென்னை வரை உள்ள கால்பந்து ரசிகர்கள், அணி வண்ணங்களின் ஜெர்சிகளை அணிந்துகொள்வது கொள்வது வழக்கம். இந்தியாவிலும் கணிசமான கால்பந்து ரசிகர்கள் உள்ளனர்.

சிலர் பிரேசிலை ஆதரிக்கிறார்கள், சிலரோ ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ, லியோ மெஸ்ஸி அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை ஆராதிக்கிறார்கள், மற்றவர்கள் இந்த அழகான விளையாட்டை ரசிக்கிறார்கள்.

இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் கனவு - இந்தியா ஃபிஃபா உலகக் கோப்பையில்
பங்கு பெறவேண்டுமென்பதே.

உங்களுக்குத் தெரியுமா ?

1950-ல் அந்தக் கனவு கிட்டத்தட்ட நிறைவேறியது. அந்த ஆண்டில், பிரேசிலில் நடக்கவிருந்த நான்காவது ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்றது. 

பிறகு, என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்....

இந்தியக் கால்பந்து அணி தரவரிசை 1957-இல் ஃபிஃபா உலகத் தரவரிசையில் 9வது இடத்திலிருந்தது.

ஆனால் இந்திய அணி தரையில் கால் வைக்கவில்லை, ஏன் என்பதற்குப் பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகிறது . அதில் ஒன்று, அணி வெறுங்காலுடன் விளையாட அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவது, உண்மையல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டி.
பல நாடுகள் உலகப் போரால் பாதிக்கப்பட்டிருந்தது மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய அணிகள் விலகின. இதன் மூலம் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கையை வெறும் 13 ஆகக் குறைத்தது.

இந்தப் போட்டியில் ஆசியாவிலிருந்து எந்த அணியும் பங்கேற்கவில்லை. ஆதலால் பிரேசிலின் கால்பந்து கூட்டமைப்பு, அகில இந்தியக் கால்பந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க தங்கள் அணியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. உலகக் கோப்பையின் போது இந்தியாவின் செலவுகளை கவனித்துக்கொள்ளப் பிரேசில் அதிகாரிகள் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா உறுதிப்படுத்தவுமில்லை அல்லது பின்வாங்கவுமில்லை, ஆனால், நிகழ்வு தொடங்கியபோது, இந்தியாவின் அணி அங்கு இல்லை.

என்ன நடந்தது? அவர்கள் ஏன் பங்கேற்கவில்லை ?

இந்தியா அணியின் சிறந்த தடுப்பாளர் என்று கருதப்பட்ட சைலன் மன்னாவின் கூற்றுப்படி, உண்மையான காரணம் என்னவென்றால், பயணச் செலவுகள், போதிய பயிற்சி நேரம் இல்லாதது, அந்நிய செலாவணி இருப்புப் பிரச்சினை மற்றும் பிரேசிலுக்கு நீண்டதூர அச்சுறுத்தும் கப்பல் பயணம் போன்றவை, பிரேசிலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று முடிவை மறைக்க, வெறுங்காலுடன் விளையாட அனுமதி இல்லை என்று சாக்குப்போக்கு AIFF-ஆல் பயன்படுத்தப்படுதப்பட்டது என்று கூறினார். மேலும், ஃபிஃபா உலகக் கோப்பையை ஒலிம்பிக்கைப் போல இந்தியக் கால்பந்து சம்மேளனம் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

காரணம் என்னவாக இருந்தாலும், அது 70 ஆண்டுகள் ஆகிவிட்டன, மற்றொரு உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறும் நாள் வெகு தொலைவிலில்லை. சமீப காலங்களில், இந்தியாவில் கால்பந்து மோகம் அதிகரித்து வருகிறது. ஐஎஸ்எல் லீக் போட்டிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

நிச்சயமாக ரசிகர்களின் ஆதரவு, உள்கட்டமைப்பு வசதி, மற்றும் அரசின் ஆசியுடன், இந்தியா ஒரு நாள், உலகக் கோப்பையில் பங்கேற்கும். அதுவரை இந்தியர்கள் தங்கள் கால்பந்து தாகத்தைத் தணிக்க, ஜெர்மன், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஜெர்சிகளை அணிவதில் திருப்தியடைய வேண்டும்.

கொசுறு :

1948-இல் நடந்த ஒலிம்பிக்கில், இந்தியா அணியின் தொடக்கம் ரசிகர்களைக் கவர்ந்தது.  இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், பெரும்பாலான வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடியது தான், சிலர் சாக்ஸ் அணிந்தனர். வளர்ந்து வரும் நாடான நம்மை பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த இந்த முதல் சர்வதேச போட்டி ஒரு பெரிய விஷயமாகும்!

நன்றி:Google & 'Thebetterindia.com'

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


தமிழில் : காளிகபாலி   


Wednesday 26 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-94

நினைத்தாலே இனிக்கும்(1979)

சென்னை கச்சேரி மேடைகளில் மூன்றாவது அல்லது நான்காவது பாடலாக வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலை பற்றிப் பேசுவோம். கீழே உள்ள காணொளியில் ஜெயப்பிரதா பாடலை ரசிப்பாரே, அது போல ரசிகர்கள் ரசிப்பார்கள். பாடகரும் தன்னுடைய திறமையை முழுதும் காண்பித்து அப்பாடலை ரசித்துப் பாடிமுடிப்பார். (அப்போது காரோக்கி இசை வசதி இல்லை) இருக்கின்ற இசைக்கருவியை வைத்து அழகாக வாசிப்பார்கள்.

மியூசிக்கல் ஹிட், மியூசிக்கல் ஹிட் என்ற சொற்றொடர் வழக்கொழிந்து வெகு நாட்களாகிறது. இப்போதெல்லாம் ஒரு பாடலை பிரபலப்படுத்த உன்னைப் பிடி, என்னைப் பிடி என்றாகிறது. மக்களின் ரசனை மாறிவிட்டது என்று சொல்வதை விட மக்களின் ரசனைக்கேற்ப பாடலை உருவாக்குபவர்கள் இல்லையோ என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் இயக்கிய, கமல், ரஜினி நடித்த, 1979-ஆம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டன்று வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற சுமாரான படம், பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டன. கவிஞர் கண்ணதாசன் எழுதி, விச்சு டார்லிங் இசையமைத்த பதினான்கு பாடல்களும் பிரபலமடைந்தது. அதில் ஒரு பாடல் பல்லவி மட்டுமே இடம்பெற்றது.

இப்போது பதினான்கு பாடல்கள் ஒரு படத்தில் இடம்பெற்றால் என்னாகும் ? ரசிகர்கள் புகைபிடிக்க வெளியே சென்றுவிடுவார்கள். அதனால் தான் என்னவோ படத்தினூடே வரும் மான்டேஜ் பாடல்கள் தற்போதைய படங்களில் அதிகம் வருகிறது.

சரி போகட்டும், 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும், எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய "இனிமை நிறைந்த உலகம்", மற்றும் விச்சு டார்லிங் பாடிய "சம்போ சிவ சம்போ...". இதோ காணொளியில் அந்தப் பாடலை கண்டு ரசியுங்கள்.




நன்றி:Youtube 

 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 
 


Sunday 23 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-93

'அன்னமய்யா'(1997)

வ்வொரு நடிகருக்கும் ஒரு வாழ்நாள் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவுக்குத் தெலுங்கு கவிஞர் தாளப்பாக்க அன்னமாச்சார்யா கதாபாத்திரம் ஏற்று நடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. விஷ்ணுவின் வாள் (நந்தகம்) தான் அன்னமாச்சார்யா அவதாரம்.

தெலுங்கும் சினிமாவின் முன்னோடி இயக்குநர் *கே ராகவேந்திரா ராவ் இயக்கிய "அன்னமய்யா", 1997-ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. மக்கள் குடும்பத்தோடு திரையரங்கை நோக்கிப் படையெடுத்தார்கள். அன்னமாச்சார்யாவின் வாழ்க்கை சரிதத்தை மிக எளிதில் தனிக்கே உரித்தான திரைக்கதையில் உருவாக்கி மக்களிடம் சேர்த்தார் இயக்குநர். ஒவ்வொரு துணை பாத்திரங்களும் தங்கள் பங்கினை சிறப்பாக வழங்கினார்கள். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டி-தொட்டியெங்கும் ஒலித்தது.

இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அல்லது மரகதமணி பெரும்பாலும் அன்னமாச்சார்யா கீர்தனைகளையே பாடல்களாக உருவாக்கினார். இருபது பாடல்கள் அடங்கிய ஆடியோ காஸ்ட் அதிகளவில் விற்றுத்தீர்ந்து முதல் இடத்தைப் பிடித்தது. இப்படத்தில் பாடல்கள் இன்று வரை தெலுங்கு மக்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆறுமாத பணி பயிற்சிக்கு வேறு மாநிலத்திலிருந்தபோது, என்னுடன் அறையில் தங்கியிருந்த தெலுங்கு நண்பர் 'அன்னமய்யா' படத்தில் பாடல்களை எனக்கு அறிமுகப்படுத்தி, மேற்சொன்ன விஷயங்களையும் சொன்னார்.

ஒருமுறை குடும்பத்துடன் திருப்பதி திருமலை சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கும்போது 'அன்னமய்யா' படத்தின் பாடல்கள் அடங்கிய காஸ்ட் வாங்கத் தோன்றவே ,வாங்கினோம். அதன்பிறகு, தினமும் காலையில் 'அன்னமய்யா' கேட்டோம்.

பாடும் நிலா பாலு என்றழைக்கப்படும் எஸ்பிபி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பல பக்தி பாடல்களும் அதில் சேரும். 'அன்னமய்யா' படத்தில் அவர் பாடிய பாடல்கள் ஆகச்சிறந்த 'பெஸ்ட்' என்பேன்.  இதோ கீழே உள்ள காணொளியில்  'அன்னமய்யா' படத்தில் இடம்பெற்ற பாடலை கேட்டு மகிழுங்கள் :




நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 
 

*('பாகுபலி' படங்கள் தந்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் குரு)

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-92

'சிகப்பு மலர்கள்' (1986)

யக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய அரசியல் படங்கள் எண்பதுகளில் பிரபலம். விஜயகாந்த்தை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர். எனக்கு இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படம் பிடிக்கும்.

1983-ஆம் ஆண்டுச் சுரேஷ், காயத்ரி, சந்திரசேகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்து இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'சிகப்பு மலர்கள்' என்ற சுமாரான படத்தில் விச்சு டார்லிங் இசையில் தாசேட்டன் பாடிய ''ஒரு பொம்மலாட்டம் நடக்குது ,," என்ற இனிமையான பாடல் உள்ளது.

வகுப்பு தோழன் முத்து வகுப்பில் பாடச் சொன்னால் இந்தப் பாட்டை வரி பிறழாமல் பாடுவான். அப்போது சென்னை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் இந்தப் பாடலை அடிக்கடி ஒளிபரப்புவார்கள். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்கள்:
 
 
 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

 
 

Saturday 22 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-91

'கரும்பு வில்'

'கரும்பு வில்' - இணையத்தில் தேடியபோது இந்தப் படத்தைப் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பெரியவர்களிடம் கேட்டபோது பாடல் மட்டும் ஞாபகம் இருக்கிறது, படத்தின் கதை மறந்துவிட்டதென்றார்கள். அப்போது சுதாகர் நடித்த ஏகப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருந்ததால், மறந்திருக்கலாம். பிறகு ஏன் தெலுங்கு பட உலகுக்குச் சென்றார் என்று தெரியவில்லை.

எங்கள் மாமா ஆசையாக டேப்பை ரெகார்டரில் 'பொண்ணு ஊருக்கு புதுசு' படத்தில் வரும் "ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது" பாடலை திரும்பக் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்.

'கிழக்கே போகும் ரயில்' படம் முதல்முதலாகச் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஊரே தொலைக்காட்சி பெட்டி முன் உட்கார்ந்து படம் பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

"மீன்கொடி தேரில் மன்மதராஜன்...." - இரவு சென்னை வானொலியில் விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் பாடகி திருமதி ஜெனிசி அல்லது தாசேட்டன் பாடிய இந்தப் பாடல் சன்னமான ஒளியில் காதில் பாய, அம்மா உணவு பரிமாறுவாள். இது போல எத்தனையோ பாடல்கள், மறக்கமுடியாத நாட்கள் அவை. இந்தப் பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருவதைத் தவிர்க்கமுடிவதில்லை.

என்ன ஒரு Grand Orchestra, கோரஸ்  பாருங்கள், கோரஸ். என்ன ஒரு தரம், பாடல் வரிகள் தனியாக, இசை தனியாகப் பயணிக்கிறது. உங்களுக்குத் தாசேட்டன் பாடிய பாடல் பிடிக்குமா, ஜெனஸி பாடிய என்று கேட்டல் உங்களால் பதில் சொல்ல முடியாது, காரணம் இரண்டுமே இப்போதும் புத்தம் புதிய பாடல் போல
ஜொலிக்கிறது.

நண்பர் சொன்னது: "இரவு கண்ணை மூடி இந்தப் பாடலை கேட்டு ரசி. குதிரைகள் பூட்டிய தேரில் உன்னை ராஜா அழைத்துச் செல்வதை உணர்வாய். அது மட்டுமா, ராஜாவைத்தான் குதிரைகள் பூட்டிய தேரில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் இங்கே ராஜாவே உன்னை அழைத்துச் செல்கிறார். Enjoy.

நீங்களும் பயணத்துக்குத் தயாரா ?

 

 
 
நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-90

வட்டத்துக்குள் சதுரம்(1978)

பாட்டைக் கேட்டுக் கலங்குபவர்கள் உண்டா ?

எங்கள் வீட்டில் அப்படி ஒரு நபர் உண்டு. அவள் என் அக்கா.

என்னுடைய மூத்த சகோதரி ரொம்ப எமோஷனல் சுபாவம். அவருக்கு ஒரு நெருங்கிய தோழி இருந்தார். எங்கள் பெரியப்பா வீட்டுக் காம்பௌண்டில், பக்கத்து வீட்டுக்குக் கோடை விடுமுறையில் அவர் வருவார். அவள் வரவு அக்காவுக்கு மிகுந்த உற்சாகம் தரும். சாப்பிடுவது, தூங்குவது தவிர, அக்காவும் அவரும் ஒன்றாக விளையாடுவது, குளத்தங்கரைக்குத் துணி துவைக்கப் போவது, கோவிலுக்குப் போவது என ஒரு மாதம் ஒன்றாக இருப்பார்கள். எப்போதும் தொண, தொணவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்றே தெரியாது. அடிக்கடி சிரித்துக்கொள்வார்கள். அவள் விடுமுறை முடிந்து ஊருக்குச் சென்ற அடுத்த மூன்று நாளுக்கு அக்கா 'உம்மென்று' இருப்பாள். சகஜ நிலைக்குத் திரும்பச் சில நாட்கள் ஆகும்.

பிறகு ஒரு நாள், பக்கத்துக்கு வீட்டுக் குடும்பமும் காலி செய்துகொண்டு போய்விட, பிறகு தொடர்பு விட்டுப் போனது. எப்போதாவது அவளுடைய தோழியைப் பற்றிக் கேட்டால், சோகமாகிவிடுவார்.

நான் இரண்டு பாடலுக்கு எமோஷனல்-ஆவதுண்டு 

ஒன்று :

"அங்கஜூனி கண்ண ம  யன்ன  யது  ரா ரா 
பங்காரு  கிண்னெலோ  பாலு போசேரா  |

எம்எஸ் அம்மா பாடிய 'அன்னமாச்சார்யா' கீர்த்தனையான "ஜோ அச்சுயுதாந்தா..." பாடலில் வரும் மேற்சொன்ன வரிகள் கேட்கும்போது காரணம் தெரியாமல் நானும் கலங்குவதுண்டு. 

இரண்டு :

எல் ஆர் ஈஸ்வரி அம்மா பாடிய  "கருணை உன்னால் கொண்டவளே கருமாரியம்மா .." என்ற பாடலை கேட்கும்போதும் அப்படி தான்.

தெய்வீக குரல் என்று சொல்வார்களே அது தானோ என்னவோ......

சரி விசயத்துக்கு வருவோம்.... சமீபத்தில் அக்காவிடமிருந்து எனக்குத் தொலைப்பேசி அழைப்பு, அக்காவின் அந்தத் தோழி தொலைப்பேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசியதாக உற்சாகமாகச் சொன்னாள். இந்தத் தொழினுட்ப யுகத்தில் யாரையும், உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கண்டுபிடிக்கலாம் என்பது அக்காவுக்குத் தெரியாது போல..

நீண்ட கால நட்பைப் பெண்கள் தொடருவது அரிதான ஒன்று. என்னுடன் ஒரே பள்ளியில் பத்து வருடம் எல் கே ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த என்னுடைய வகுப்பு நண்பர்-நண்பிகளையும் பல சிரமங்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து வாட்ஸாப்ப் குழுவில் இணைத்துள்ளேன். தோழிகள் ஒருவரை ஒருவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் எனக்கு நன்றி சொல்லும்போதே தெரிகிறது. வகுப்பில் ஒன்றாக இருப்பது போல ஒரு பீல் கிடைக்கிறது. சென்ற வருடம் செப்டம்பரில் சந்திப்பு விழா நடைபெற்றது மறக்கமுடியாத அனுபவமாயிற்று. கொரோனா காலத்தில் இந்த வருடம் சந்திப்பு விழா நடத்தமுடியும் என்று தெரியவில்லை. இன்னும் கூடப் பல நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அக்காவைக்  கலங்கவைத்த  அந்தப் பாடல், இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவர்கள் இயக்கிய 'வட்டத்துக்குள் சதுரம்' படத்தில் திரு பஞ்சு அருணாச்சலம் எழுதி, ராஜா சார் இசையமைத்த ஜானகி, சசிரேகா மற்றும் உமாதேவி ஆகியோர் பாடிய பாடலான "இதோ இதோ என் நெஞ்சிலே ".
 


நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி 

Wednesday 19 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-89

'சட்டம்' (1983)

தாசிரியர் / இயக்குநர் / பாடலாசிரியர் / இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட திருக் கங்கை அமரன் அவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களை இசையமைத்திருக்கிறார். 'மௌன கீதங்கள்', 'வாழ்வே மாயம்', 'சுவரில்லாத சித்திரங்கள்' போன்ற படங்களின் இடம்பெற்ற படப்பாடல்கள் இன்றும் கேட்கலாம்.

கமல் போலீஸ் வேடம் ஏற்று நடித்த முதல் படம் 'சட்டம்' என்று நினைக்கிறேன்?. திருக் கே பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் கே விஜயன் இயக்கி, கமல், மாதவி நடித்து 1983-வெளிவந்த படம். நல்ல கதையம்சமுள்ள படம் எந்த மொழியில் ஓடினாலும், அந்தக் கதையை வாங்கி, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றி, படத்தை எடுத்து வெளியிடுவது கே பாலாஜியின் வழக்கம். இதுவும் ஹிந்தியில் வெற்றி பெற்ற 'தோஸ்தானா' படத்தின் ரீமேக் தான். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை. கங்கை அமரன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிரபலம் அடைந்தது. சென்னை தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலியில் திருமதி வாணி ஜெயராம் மற்றும் திரு எஸ்பிபி பாடிய இனிய பாடலான 'வா வா என்ன வீணையே என்ற பாடலை அடிக்கடி கேட்பதுண்டு. வாருங்கள் அந்தப் பாடலை கேட்போம் :



நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி  


 

Tuesday 18 August 2020

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-88

புது நெல்லு புது நாத்து(1991)

கேள்வி-பதில் பாடல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இருவர் பாடுவது. ஒருவர் கேள்வியைத் தொடுப்பது மற்றொருவர் பதிலளிப்பது எனப் பேச்சு வழக்கிலோ அல்லது கவிதை நடையிலோ இருக்கும். எனக்குத் தெரிந்த கேள்வி-பதில் பட்டியல் கீழே, வேறு எதாவது பாடல் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் :

"சீர்மேவும் குருபதம்.." (சக்ரவர்த்தி திருமகள்)
"என் கேள்விக்கென்ன பதில்.." (உயர்ந்த மனிதன்)
கேள்வியையே பாடலாக "கொடியசைந்ததும் காற்று வந்ததா?" 
                                                            (பார்த்தால் பசி தீரும்)
"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் .."  (இரு கோடுகள்)
"இதோ இதோ என் நெஞ்சினிலே.. " (வட்டத்துக்குள் சதுரம்)
"என்னம்மா கண்ணு" (மிஸ்டர் பரத்)
"எடுத்து நான் விடவா" (புது புது அர்த்தங்கள்)

சரி விசயத்துக்குப் வருவோம், 'புது நெல்லு புது நாத்து' - என்ன ஒரு அழகான தலைப்பு, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய இப்படத்தில் ராஜாவின் இசையில் வந்த எல்லாப் பாடல்களும் பிரபலமானவை தான். ஆனால் இரண்டு பெண்கள் தங்கள் ரகசியங்களை / ஏக்கங்களைக் கேள்வி-பதில் மூலம் பகிர்ந்துகொள்ளும், கவிஞர் முத்துலிங்கம் இயற்றிய இப்பாடலை, எம் எஸ் சித்ரா மற்றும் உமா ரமணன் அவர்கள் பாடிய "ஏ மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி .." என்ற பாடல் எனக்குப் பிடிக்கும். காரணம் எதுவும் இல்லை அல்லது சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளலாம். சென்னை மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

"புது நெல்லு புது நாத்து பொங்கலுக்கு காத்திருக்கு .. 
புது பொண்ணு இது ரெண்டும் மாமன் சொல்லுக்கு காத்திருக்கு"..

- என்ற மனதை வருடும் வரிகள் மற்றும் இனிய இசை உயிரையே உருக்குகிறது. நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :




நன்றி:Youtube
 
 
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி