Wonderful Shopping@Amazon

Saturday 21 December 2019

ஒரு கதை சொல்கிறேன் -1

இல்லை.....  இல்லை......

நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் ....நண்பர் ஒருவர் சொன்ன நிஜக் கதையை அப்படியே என்னுடைய பாணியில்.  

நண்பரின் உறவினர் பலசரக்கு கடை வியாபாரி. சின்ன கடைதான். அவரது கடையில் அநேகம் எல்லா பொருட்களும் கிடைக்கும். அதனால் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம் கூட்டம் அள்ளும். அந்த கடைக்குப் பழைய வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் உண்டு. 

எல்லோரிடமும் இருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இவருக்கும் (வியாபாரி) இருந்தது, வேறு ஒன்றுமில்லை.. சோம்பேறித்தனம், அதனால் விளைந்த "இல்லை" என்ற  வார்த்தை பிரயோகம். வழக்கமான வாடிக்கையாளர் எதாவது பொருள் வேண்டி கடையில் கேட்டால்....இவரிடமிருந்து வரும் வார்த்தை "இல்லை... அடுத்தாப்ல நாலு கட தள்ளி இருக்கிற கடைல கேளுங்க..."  (அல்லது) "டர்னிங்ல ஒரு கட இருக்கு...அங்க கேளுங்க.."

இதில் வேடிக்கை என்னவென்றால், வாடிக்கையாளர் கேட்கும் பொருள்.. கடையில் இருக்கும் அல்லது பாரீஸிலிருந்து அந்த பொருள் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கும். அதை எடுத்த தர/ வாங்கி வரச் சோம்பேறித்தனம். வாடிக்கையாளர் கொடுக்கும் பட்டியலில் அந்த பொருள் இருந்தால் தான் தேடி எடுத்து கொடுப்பாராம். தனியாகக் கேட்டால் மேலே சொன்ன பதில் தான் வரும்.  

என்னுடைய நண்பர் விடுமுறை நாட்களில் அவருக்கு ஒத்தாசையாக இருக்கக் கடையில் வேலை செய்வதுண்டு. அவரை மீறி அந்த பொருளை எடுத்த தரப் பயம், சமயங்களில் கோபப்படுவார். நமக்கெதற்கு வம்பென்று சும்மா இருந்து விடுவார். அப்படியே, நண்பர், கடைக்குப் போவதைக் குறைத்துக் கொண்டார்.

வருடங்கள் ஓடியது, வேலை நிமித்தமாக நமது நண்பர், உறவினர் கடை வழியே செல்லுகையில், அந்த இடமே முற்றிலும் மாறியிருந்தது. அவரது உறவினர் கடை அந்த இடத்தில் இல்லை. சரி கடையை விரிவுபடுத்தியிருப்பார் போல என்று நினைத்தார்.

சில மாதங்கள் கழித்து, குடும்ப சுப நிகழ்வில் அந்த வியாபார உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவரைச் சந்தித்துக் கேட்டறிந்தார். அதாவது விஷயம் இதுதான்: முன்பு கடை இருந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடமாகும்.  புதிதாகப்  பதவியேற்ற அதிகாரியின் உத்தரவின் பேரில் சாலை விரிவுபடுத்தவேண்டும் என்ற காரணத்துக்காகக் கடைகள் இடிக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் பொருட்கள் வீணானது, கொஞ்ச நாள் தள்ளுவண்டியில் கடை நடத்தவேண்டிய சூழல் வந்தது. வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. இதற்கிடையே, கவலையால் உடல் நலம் குன்றியது.  பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதே பகுதியில் ஒரு சிறிய கடையை  வாடகை எடுத்து இப்போது வியாபாரம் செய்கிறார்.

கடையில் பொருட்கள் இருந்தும் "இல்லை" என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தியதால் ஒரு நாள் கடையே இல்லாமல் போனது.

"இல்லை", "இல்லை", "இல்லை" என்று சொன்னால் ஒரு நாள் இல்லாமலே போய்விடும்/போய்விடுவோம். "முடியாது", "முடியாது" "முடியாது" என்று சொன்னால் ஒரு நாள் முடியாமலே போய்விடுவோம்.

எதிர்மறை சொற்களையே பயன்படுத்தக்கூடாதா என்றால்...எதிர்மறைச் சொற்களை எங்கு, எதற்கு சொல்லவேண்டுமோ அங்குச் சொல்லவேண்டும், "இல்லை", "முடியாது" என்ற வார்த்தைகளை எங்குப் பயன்படுத்தவேண்டுமோ அங்குப் பயன்படுத்தவேண்டும். அதைவிடுத்து நாளுக்கு 108 முறை அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதனுடைய வேலையைக் காட்டத் தான் செய்யும். அதைத் தான் நமது பெரியவர்கள் வார்த்தை "அளந்து" பேசவேண்டும் என்று சொன்னார்கள்.

எதிர்மறைச் சொற்கள் நமது வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த கதை ஒரு சிறிய உதாரணம்.


பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 

சிறந்த யுடியூப் சேனல் 2019

இந்த வருடத்தில் என்னை கவர்ந்த சில சேனல்களை பற்றி இப்போது  பேசுவோம்.

ஃபில்மி கிராஃப்ட்

சினிமாவை உள்ளேயிருந்து நேசிப்பவர்களை விட, வெளியே இருந்து நேசிப்பவர்கள் அதிகம். மேலே படியுங்கள்....

யுடியூப்-இல் எத்தனையோ சினிமா விமர்சன சேனல்கள் இருந்தாலும், திரு அருண் அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. அருண் ஒரு சிறந்த கதைசொல்லி. Filmi Craft-சினிமா ரசிகர்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும் அவருடைய presentation. உங்களுக்கு எந்த ஜானரில், எந்த மொழி படம் வேண்டும்? கொரியா, ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குறும்படம், புதிய படம், இதுவரை கேட்டிராத உலகப் புகழ்பெற்ற பழைய படங்கள் - இவை அத்தனையும் Filmi Craft-இல் காணலாம்.

சும்மா அடித்துவிட்டுப் போகிற ஆசாமி இல்லை இவர், கேமரா கோணங்கள், பின்னணி இசைத் துணுக்குகள் பற்றி, ஷாட் பை ஷாட், ஏன் அந்த ஷாட் அந்தக்காட்சியில் வைத்தார்கள், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், இயக்குநர் / நடிகரின் / நடிகையரின் முந்தைய சிறந்த படங்களின் சுவையான தகவல்கள், கதாபாத்திரங்கள் பேசும் ஆங்கில வசன வரிகள், அந்தக் கதாபாத்திரங்கள் தன்மை என்ன, என்பன போன்ற பல விசயங்களை ரசிகனுக்குப் புரியவைப்பார். எப்படித் தான் இவரால் இவ்வளவு விஷயங்களைத் திரட்ட முடிகிறதோ தெரியவில்லை. ஒவ்வொரு காணொளியிலும் அவருடைய Home Work & Hard Work தெரிகிறது. அதே சமயத்தில், படம் குடும்பத்துடன் காணக்கூடியதா, யாருக்கெல்லாம் இந்தப் படம் பிடிக்கும், அந்தப் படம் எந்தத் தளத்தில் உள்ளது என்ற விஷயங்களையும் சொல்லிவிடுவார்.

இவர் பரிந்துரை செய்யும் பெரும்பாலான சிறந்த உலகத் திரைப்படங்கள் யுடியூப் தளத்தில் காணக்கிடைக்கவில்லை. அனைத்தும் Amazon Prime, Netflix, Hotstar மற்றும் பல OTT கட்டண தளங்களுக்கு மாறிவிட்டது.

சரி உங்களுக்கு இந்தச் சினிமா பிடிக்கவில்லையா, பரவாயில்லை போகட்டும், ஒரு கதையை / சம்பவங்களை மற்றும் கதாபாத்திரத்தை / சூழலைப் பற்றி எப்படிச் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்பதை இந்த Filmi Craft யுடியூப் சேனலை பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

பிசினஸ் தமிழா:
இளைய தலைமுறையினர் அனைவரும் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் விக்னேஷ் அவர்கள், தமிழகத்தில் உள்ள விவசாயம், நெசவு, புதிய தொழில்(நுட்ப) வாய்ப்புகள், சந்தை வியாபார வாய்ப்புகள், ஜவுளி கண்காட்சி என இப்படி எல்லாவற்றிலும் புகுந்து, சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்தித்து, பேட்டி கண்டு தனது பயனர்களுக்குத் தெரிவிக்கிறார். சமீபத்திய சாதனை, குஜராத் மாநிலம் சூரத் சென்று அங்குள்ள ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் பேட்டி, சூரத் எப்படிச் செல்வது, நம்பகமான ஜவுளி நிறுவனத்தை எப்படி அணுகுவது எனப் பல விஷயங்கள் உள்ள காணொளி கண்டு வியந்தேன்.

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிப்பதும், அதைத் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குறையாமல், திறம்பட நடத்துவதும் சாதாரண விஷயம் இல்லை. நல்ல கருத்துகளையும், நாராசமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் வேண்டும்.

இன்னும் வரும்...........

பட உதவி, நன்றி:Google


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி 


Friday 20 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-41

குங்குமச்சிமிஷ் (1985)

மோகன்-ராஜா சார் இணை "சங்கீத மேகம்", "பருவமே", "கடலோரம் வீசும் காற்று", "இளையநிலா" போன்ற எத்தனையோ அருமையான பாடல்கள் தந்திருக்கின்றனர். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி, மோகன், இளவரசி, மற்றும் ரேவதி நடித்த "குங்குமச்சிமிஷ்" படத்தில் இடம்பெற்ற "நிலவு தூங்கும்.." என்ற மனதை வருடும் பாடலும் அதுபோல ஒன்று தான். படம் வந்த புதிதில் இந்தப் பாடல் சென்னை தூர்தர்ஷன், இலங்கை வானொலி, சென்னை வானொலி, விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு நிகழ்ச்சி, கல்யாண, காதுகுத்து, திருவிழா கச்சேரி என எல்லா இடத்திலும் ஒலித்து "கிறுகிறுக்க" வைத்தது. எளிய இசைக்கோர்வை, பாடல் ஆரம்பத்தில் வரும் மவுத்தார்கன் இசைத் துணுக்குக் கொஞ்சம் கவனிக்க வைக்கும். தூக்கம் வரவில்லையா..? இந்தப் பாடலை கேளுங்கள் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பீர்கள்.

இதே படத்தில் மலேசிய வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மா பாடிய "கூட்ஸு வண்டியிலே.." என்ற இன்னொரு பாடலும் உண்டு. அப்போதிருந்த Special Effects வசதியை வைத்து இப்பாடலைச் சிறப்பாகப் படமாகியிருப்பார் இயக்குநர்.



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          
 

Monday 16 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-40

செண்பகமே செண்பகமே (1988)

ராமராஜன் - தமிழ் சினிமாவில் ஆறு படங்களை இயக்கி, கதாநாயகனாக நடித்துக் குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர். இவருடைய படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் முதலுக்கு மோசமில்லாமல் லாபம் தரக்கூடியவை. ராமராஜன், இயக்குநர் கங்கை அமரன் மற்றும் ராஜா சார் இணை "எங்க ஒரு பாட்டுக்காரன், "கரகாட்டக்காரன்", "வில்லுப்பாட்டுக்காரன்" ,"செண்பகமே செண்பகமே", "தெம்மாங்கு பாட்டுக்காரன்" எனப் பல வெற்றிப்படங்கள் தந்த மாயாஜால கூட்டணி.

குடும்ப செண்டிமெண்ட் கதை, செந்தில்-கவுண்டமணி-எஸ்எஸ் சந்திரன் நகைச்சுவை, இனிய பாடல்கள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இவருடைய படத்துக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தார்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கு அது ஒரு பொற்காலம். என்னுடைய உறவினர் நடத்தும் திரையரங்கில் "ரயிலுக்கு நேரமாச்சு" மற்றும் "கரகாட்டக்காரன்" ஆகிய படங்கள் நீண்ட நாட்கள் ஓடி பெரிய லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

அப்போதெல்லாம் ஒரு படத்தின் பாடல்கள் தொகுப்பில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும். இப்போது போல் ஒரே பாட்டை வைத்து ஒப்பேற்றுவதெல்லாம் இல்லை. அதுபோல ராமராஜன் படப் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக அமைந்து மக்களிடம் பிரபலம் அடைந்தது.

எனக்குத் தெரிந்த திருவாரூரைச் சேர்ந்த டெம்போ வேன் ஓட்டுநர் ஒருவர் ராமராஜன் பாடல்கள் அடங்கிய முழு இசைத்தட்டுத் தொகுப்பைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். நீண்ட தூரப் பயணத்தின் போது ராமராஜன் பாடல்கள் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டுவது அவருக்குப் பிடிக்குமாம்.

திரையுலக நெளிவு சுளிவுகளுக்கேற்றாற்போல் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தால். ராமராஜன் இன்னும் முன்னணி நடிகராக மின்னியிருப்பார். ரசிகர்களுக்கும் நிறைய கிராமத்துக் குடும்ப செண்டிமெண்ட் படங்கள் கொடுத்திருக்கலாம்.

"செண்பகமே செண்பகமே" எனக்குப் பிடித்த ராமராஜன் படங்களில் ஒன்று. அதில் வரும் "வாசலிலே பூசணி பூ" என்ற பாட்டு எனக்குப் பிடிக்கும்.  நீங்களும் அந்த பாடலை முழுமையாகக் கேளுங்களேன்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Wednesday 11 December 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-39


சிந்து பைரவி(1985)

க்ஷன் பிளாக், வில்லன், வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை பகுதி போன்ற விஷயங்கள் இல்லாமல் படமெடுக்க முடியுமா? முடியும் எனப் பல படங்களில் நிரூபித்தவர் தான் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். 1985-ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, தீபாவளி திருநாள் அன்று வெளியான "சிந்து பைரவி" படத்தில் மேற்சொன்ன எந்த விஷயமும் இல்லை.
இசைக்கலைஞனின் வாழ்வு தாழ்வு. ஜேகேபி என்ற இசைக்கலைஞனாக சிவகுமார் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.
 
ஜேகேபி (சிவகுமார்), சிந்து (சுஹாசினி), பைரவி (சுலக்ஷனா) என மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை. கேபி சார் படத்தில் துணை கதாபாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்வார்கள், இதிலும் டில்லிகணேஷ், ஜனகராஜ் மற்றும் பலர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருப்பார்கள். காட்சிக்குக் காட்சி சுவாரசியம் கலந்த Emotional Musical Drama. படமும், பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இசைஞானி இசை காவியமே படைத்திருப்பார். இசை படங்கள் இப்போது அரிதாகிவிட்டது. தூர்தர்ஷனில் கே எஸ் சித்ரா பாடிய "பாடறியேன்" பாடலை வெள்ளிக்கிழமை "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். ராஜாவுக்கு இப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. படத்தின் இடம்பெற்ற ராகங்கள் அடிப்படையிலான பாடல்கள், கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு அவர்களால் பாராட்டப்பட்டது

"பூமாலை வாங்கி வந்தான்..." என்ற பாடலை இரவு தலையணியுடன் (Headphone) கேட்டுப்பாருங்கள். வயலின், வீணை, புல்லாங்குழல், என இசைக்கருவிகளின் சங்கமம், தாசேட்டனின் ஆலாபனை, உங்கள் காதுகளில் ரீங்காரமிடும். இப்போது அந்தப் பாடலை கேளுங்கள்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Tuesday 3 December 2019

தண்ணீர் தண்ணீர் - 1

ண்ணீர் என்றதும் நினைவுக்கு வருவது நம் வீட்டுக் கிணறும், கோயில் திருக்குளங்கள் தான். திருக்குளங்கள் பற்றி ஏற்கனவே எழுதியாயிற்று.

ஊரில் உள்ள கிணறுகளெல்லாம் தூர்ந்து கிடக்க, நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பதே தெய்வ அருளால் தான் என்று நினைக்கிறேன். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்குள்ள புஷ்கரணி தீர்த்தத்தைக் கொணர்ந்து கிணற்றில் விடுவது வழக்கம்.

பள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் மைதானமே கதியென்றிருப்போம், காயும் வெய்யில் எல்லாம் எங்கள் மீது தான். விளையாட்டு இடைவேளையில் அல்லது தண்ணீர் தாகம் எடுக்கும் போதெல்லாம் தெரு ஓரத்தில் இருக்கும் இந்திய மார்க் கை பம்புத் தண்ணீர் தான் தாகம் தீர்க்கும். தண்ணீர் சில்லென்று இருக்கும். அடிக்க அடிக்கத் தண்ணீர் கொட்டி தீர்க்கும். அந்தத் தண்ணீர் உடம்புக்கு எந்தக் கெடுதியையும் ஏற்படுத்தவில்லை.

India Mark Hand Pump
இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு இணைந்து 1970களில் கிராமப்புறங்களில் நிறுவிய இந்திய மார்க் கை பம்பு பல கிராமங்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வந்த வரப்பிரசாதி. எந்த ஊர் போனாலும் சரி அங்கே உள்ள இந்தியா மார்க் கை பம்ப் நம் தாகம் தீர்க்கும்.

நாங்கள் வசித்த தெருவில் இந்தியா மார்க் கை பம்ப் இருந்தது. எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். நாளெல்லாம் "டம்","டம்" என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்றும் முற்றிலும் மறைந்துவிடவில்லை, சில இடங்களில் காணலாம்.

நாங்கள் ஒட்டு வீட்டில் குடியிருந்த போது மழை நீரை அண்டா குண்டா, பக்கெட், அன்னக்கூடை என எல்லாப் பாத்திரங்களையும் வைத்துவிடுவோம்.

இரவெல்லாம் இடி, மின்னல், மழை பெய்யும் சத்தம் கச்சேரி போல இருக்கும். பொழுது விடிந்ததும் பாத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். குளியல், பாத்திரங்கள் விளக்க,.....தண்ணீரைச் சேமித்துப் பல நாட்கள் உபயோகப்படுத்துவோம்.

வருடம் ஞாபகம் இல்லை ஒரு முறை பெரியபாளைய ஆற்றில் தண்ணீர் தரைப்பாலம் மேல் வழிந்தோடிப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று வரை அப்படி ஒரு காட்சியை நான் பார்க்கவில்லை.

அவ்வளவு ஏன் மார்க்கெட்டிலிருந்து பார்த்தால் கடல் போலக் காட்சியளித்த ஆவடி ஏரி. இப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக மாறி இருக்கிறது. ஏரியின் பரப்பளவு சுருங்கி கழிவுநீர் குட்டையாகிவிட்டது.

நண்பரிடம் பேசும் போது சொன்னார் :

"தக்கோலம் - காஞ்சிபுரம் போகும் வழியில் கல்லாறு என்ற ஆறு குறுக்கிடும். எப்போதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். எங்கள் பகுதி மக்களுக்குப் பல வருடங்கள் தாகம் தீர்த்தது கல்லாறு தண்ணீர். பள்ளி விடுமுறை நாட்களில் குளித்ததுண்டு. இப்போது அறிவிப்புப் பலகை மட்டுமே உள்ளது, வறண்டு போய்க் காட்சியளிக்கிறது கல்லாறு நதி."

சென்னையிலிருந்து இரயிலில் திருச்சி அல்லது திருப்பதி போகும் வழியில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும் போது தண்ணீர் இல்லாமல் பிரமாண்டமாக, தூர் வாரப்படாமல் காட்சியளிக்கும் ஆறுகளின் தடம் மட்டுமே (மிஞ்சியிருக்கிறது) பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

"காவேரி நதி கரை புரண்டோடுவதைப் பார்த்து நீண்ட வருடங்கள் ஆகிறது" - என்று திருச்சியைச் சேர்ந்த நண்பர் சொன்னது. இன்றைக்கு எல்லா ஆறுகளின் நிலையும் இது தான். சமீபத்தில் பெய்த மழையில் ஆற்றில் தண்ணீர் நிரம்ப ஓடுவதைப் பார்க்கும்போது சற்றே நம்பிக்கையளிக்கிறது.

RO மற்றும் ரசாயன குடிநீர் குடிநீரின் (பித்தப்பையில் கல் போன்ற) பாதிப்புகளைச் சமீபகாலமாய்ச் சந்தித்து வருகிறோம்.

எங்கள் தெருவுக்கு நாங்கள் தனிக்குடித்தனம் வந்தது முதல் டிராக்டர் வண்டி தண்ணீர் சமையலுக்கு, குடிக்கக் காய்ச்சி உபயோகப்படுத்தி வருகிறோம். தொடக்கத்தில் ஒரு குடம் மூன்று ரூபாய், இப்போது ரூபாய் ஒன்பது.

கடந்த ஜனவரி மாதம் திருவையாறு சென்றிருந்த போது காவேரியில் குளித்தது மறக்க முடியாத அனுபவம்.

கூவம் கிராமத்தில் தோன்றிய கூவ ஆற்றில் குளித்தவர்கள் உண்டு. இன்றைய கூவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

நதிக்கரையோரம் தோன்றிய நாகரிகம் என்று பீற்றிக் கொள்கிறோம். ஆனால் நதிகளை நாம் பாதுகாத்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். அதன் கரைகளைக் கூட நம்மால் வலுப்படுத்த முடியவில்லை. நம்முடைய தாதாக்கள் குளித்த நதியில், இப்போது நாம் குளிக்க முடியாது. ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும், வற்றிப் போயிருக்கும் அல்லது அசுத்தமாயிருக்கும்.

கல்லணை

தண்ணீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் வகுத்த திட்டங்களால் தான் தமிழ்நாட்டில் கொஞ்சமேனும் ஆற்றில் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. நீங்கள் கரிகாலன் சோழனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கல்லணைக்கு விஜயம் செய்ததுண்டா, வாய்ப்பு கிடைத்தால் போய்ப் பாருங்கள். அது போல ஒரு அணையை இனி யாராலும் கட்ட முடியாது. கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நாளா பக்கமும் பாய்ந்து தஞ்சை டெல்டா விவசாய நிலங்களை நனைத்து, பின் பல மாவட்ட மக்கள் தாகம் தீர்த்துக் கடலில் கலக்கிறது.

நதி நீர் இணைப்பு, நதி நீர் இணைப்பு என்று சில ஆண்டுகளாகவே பேசி வருகிறோம். அறிவியல் அறிஞர்கள் கூற்றுப் படி நதியை அதன் போக்கில் விட்டு விடுவது தான் நலம் பயக்கும். அதிலிருந்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் தடுப்பணை கட்டி தேக்கி வைத்து எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அதன் திசையை மாற்றுவதால், ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் அபாயங்களை மனிதன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.



இன்னும் நிறைய பேசுவோம் அடுத்த பகுதியில்.....!




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி     

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-38

பெரிய இடத்து பெண்(1963)

யக்குனர் ராமண்ணா இயக்கத்தில், தமிழின் சிறந்த திரைக்கதை வித்தகர் திரு சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் கைவண்ணத்தில் உருவான படம் "பெரிய இடத்துப் பெண்". கிராமத்தான் பணக்கார பெண்ணைக் காதலிக்க, அவள் மறுக்க, அவளுக்காக நகரத்தில் வந்து கெட்டப்பையும், அவள் மனதையும் மாற்றி, காதலை மீட்பான். இந்தப் படத்தின் கதை ஒரு Template போல. இன்று வரை இந்தக் கதையில் நடிக்காத கதாநாயகர்களே இல்லை எனலாம். இனி வரும் நடிகர்களும் நடிப்பார்கள். அடுத்த நாற்பது வருடங்களுக்கு இந்தக் கதை செல்லுபடியாகும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்-உம் இந்தக் கதையில் நடித்தார். கிராமத்துக் கதை என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. வெகு சிறப்பாக நடித்திருப்பார். கிராமப்புற ரசிகர்கள் அவருக்கு அதிகம். அதனால் தான் படம் Blockbuster Hit.

எங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இறுதி நாளன்று தெருவை மறித்து மிகப்பெரிய வெள்ளை துணி கட்டி, அதில் படம் காட்டுவார்கள். மூன்று படம் போடுவார்கள். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், பெரிய இடத்துப் பெண். இதுவே வருடா வருடா தொடரும். நாங்களும் சளைக்காமல் பார்ப்போம்.

இந்தப் படத்தில் மனதை வருடும் ஒரு lullaby. பாடல் உள்ளது. இரட்டையர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி மற்றும் டிஎம்எஸ் பாடிய "கட்டோடு குழலாட ஆட... ஆட.."என்ற பாடல். இரவில் தலையணியுடன் (Headphone) பாடல் முழுதும் கேட்டுப் பாருங்கள். கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகளில் இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது தமிழை மிஞ்சிய இனிய மொழி உண்டா என்று தோன்றும் வரிகள். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          





Wednesday 27 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-37

உதிரிப்பூக்கள் (1979)
ராணியன் மற்றும் வேற்றுமொழி திரைப்படங்களைப் பார்த்துவிட்டு நம்மவர்கள் கதைக்கும்போது, செம கடுப்பாகும். காரணம் தமிழிலேயே உலகத் தரம் வாய்ந்த (சிறந்த கதையம்சம், நினைவில் கொள்க) திரைப்படங்கள் நம்மவர்கள் தந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும் வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும். இயக்குநரின் அனுபவங்கள், வாசிப்பதினால் ஏற்பட்ட தாக்கம் தங்கள் படைப்பிலும் பிரதிபலிக்கிறது என்றே சொல்வேன்.

சரி விசயத்துக்கு வருவோம், "முள்ளும் மலரும்" வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. மகேந்திரனின் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.  ரசிகர்களின் காத்திருப்பு வீண் போகவில்லை. இந்த முறை புதுமுகங்களுடன் களம் கண்டார் இயக்குநர் மகேந்திரன். 

"உதிரிப்பூக்கள்" - புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை" என்ற சிறுகதையைத் தழுவி இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படம். ராஜா சார், ஒளிப்பதிவாளர் அசோக்குமார், மற்றும் படத்தொகுப்பாளர் பி லெனின் என இதிலும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் இதுவும் உலகத் திரைப்படம் தான். தமிழ் சினிமாவின் முக்கியமான படம் /படைப்பு. சிறந்த நூறு இந்தியத் திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படமும் உண்டு.

தூர்தர்சனில் ஞாயிறு தோறும் மதியம், மாநில மொழி திரைப்பட வரிசையில் "உதிரிப்பூக்கள்" படம் ஒளிபரப்பினார்கள். அஸ்வினி, சாருஹாசன் மற்றும்  விஜயனின் நடிப்பு, பாடல்கள், பின்னணி இசை, கடைசிக் காட்சி இதெல்லாம் மனதை விட்டகலக் கொஞ்ச நாட்கள் பிடித்தது. எதோ ஒரு கிராமத்துக்குப் போய் வந்த உணர்வு.

"ஒரு ஊர்ல ஓரு ராஜா இருந்தாராம்.. இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்..." - ராஜாவின் ரசிகர் சொன்னது. அது போல இயக்குநர் மகேந்திரனின் இயக்கம் ஒருபுறம் மிரட்டலாக இருக்க, பின்னணி இசையை ராஜா சார் காட்சிக்கு, காட்சி உயிரூட்டியிருப்பார். மொத்தத்தில் இவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம், காலத்தை வென்ற படைப்பு.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Thursday 21 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-36

தளபதி (1991)

1991-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியானது. முதல் நாளே தளபதி படம் பார்க்கவேண்டி அம்பத்தூர் முருகன் திரையரங்க வாசலில் நானும் நண்பர்கள் குழாம் கூட்டத்தில் முண்டியடித்தும் பயனில்லை, டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்பினோம். அதுவுமில்லாமல், தளபதி பாடல்கள் படம் வருவதற்கு முன்பே வெளியாகி பல லட்சம் கேசட்டுகள் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. "ராக்கம்மா கையத்தட்டு" பாடல், கல்யாணம், காதுகுத்து, திருவிழாக்கள் எனப் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.  மேலும், தினசரி மற்றும் வார இதழில் படத்தைப் பற்றி வந்த துணுக்குச் செய்திகள், எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. இப்போது புரிந்திருக்கும் நாங்கள் ஏன் முதல் நாள், முதல் காட்சி பார்க்கச் சென்றோமென்று. பிறகு, இருதினங்கள் கழித்து அதே அம்பத்தூர் முருகன் திரையரங்கில் தளபதி படம் பார்த்தோம்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் நம்ம ராஜா சார். வாலி எழுதி, SPB,   ஸ்வர்ணலதா பாடிய "ராக்கம்மா கையத்தட்டு" பாடலில் தொடக்கத்தில் வரும் அந்த ஆர்ப்பரிக்கும் வயலின், பாடலின் டெம்போவை கூட்டும். "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்" என்ற நாவுக்கரசர் வரிகளைப் பாடலில் புகுத்தி புதுமை செய்திருப்பார் வாலி. அதுமட்டுமல்ல படம் முழுதும் பின்னணி இசையில் ராஜாவின் ராஜ தர்பார் தான். ராஜாவின் மேதைமையைச் சொல்லும் இன்னொரு பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி". படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். மணிரத்னம்-இளையராஜா இணைந்து கடைசியாக நிகழ்த்திய மாயாஜாலம்.

பிபிசியின், உலகின் தலைசிறந்த பத்துப் பாடல்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது "ராக்கம்மா கையத்தட்டு" பாடல்.  பாடலின் காணொளி இதோ, பாடலை முழுதும் கேளுங்கள்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Monday 18 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-35

கபில்தேவ் 175


ஜூன் 8 1983 சனிக்கிழமை....!

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் "ஹரியானா சூறாவளி" கபில்தேவ் நிகழ்த்திய மாயாஜாலம். கபில்தேவ் விளையாடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம். கிரிக்கெட் விளையாட்டுக்கே தன்னை அர்ப்பணித்தவர், முழுக்க முழுக்க நாட்டுக்காகவே விளையாடியவர். எனக்கு மிகவும் பிடித்த அசல் கிரிக்கெட் வீரர்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை League போட்டி, இந்தியாவும்-கற்றுக்குட்டி ஜிம்பாபேவும், டன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற இடத்தில் விளையாடியது. டாஸ் வென்று, இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது, டன்பிரிட்ஜ் வெல்ஸ் பிட்ச் ஜிம்பாபே வீரர்களுக்குச் சாதகமாக இருந்ததால், பீட்டர் ரவ்சன் மற்றும் கெவின் குரன் பௌலிங்கில், விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தது, பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி. குளியலறையில் கபில்தேவ், செய்தி தெரிவிக்கப்படுகிறது, குறிப்பாக நட்சத்திர வீரர்களான சுனில் கவாஸ்கர், கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், ரவி சாஸ்திரி,ரோஜர் பின்னி, மதன் லால் மற்றும் யஷ்பால் சர்மா அனைவரும் வெளியேறிய நிலை. அப்போது களத்தில் சயீத் கிர்மானி.

அறுபது ஓவர்களையும் முழுமையாக ஆடவேண்டும் என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்குகிறார் கபில்தேவ். கவனமாக ஆடி, 138 பந்துகளில் ஆட்டமிழக்காமல் கபில்தேவ் எடுத்த ஓட்டங்கள் 175 அதில் பதினாறு நான்கு ஓட்டங்கள், ஆறு ஆறு ஓட்டங்கள். மொத்தத்தில் இந்தியா எட்டு விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிறகு ஆடிய ஜிம்பாபே அணியை 235 ஓட்டங்களுக்குச் சுருக்கி, இந்திய அணி வெற்றிப் பெற்றது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தப் போட்டி வழிகோலியது. இந்த ஒரு நாள் League ஆட்டம் இந்திய அணியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றது.

இவ்வளவு நிகழ்வையும் படம் பிடிக்கப்படவில்லை என்பது தான் வரலாற்றுப் பிழை. அன்றைக்கு வெஸ்டிண்டிஸ், ஆஸ்திரேலியா விளையாட்டுப் போட்டியைப் பதிவு செய்ய எல்லா வீடியோ பதிவு சாதனங்களும் எடுத்துச்செல்லப்பட்டது மற்றும் துரதிர்ஷ்டவசமாகப் பிபிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, இந்த விளையாட்டு போட்டியைப் பதிவு செய்யமுடியவில்லை. அன்றைய ரசிகர்களின் கையில் டிஜிட்டல் கேமரா அல்லது வேறு படக் கருவி இல்லாததால் அருமையான நிகழ்வைப் பதிவு செய்யமுடியவில்லை. எண்ணற்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. போட்டியை நேரில் பார்த்தவர்கள் தான் சாட்சி.


நன்றி:Guardian and Sportstar



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-34

பாபி (1973)

நான் முன்பே சொன்னது போல எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும், சில படங்கள் மட்டுமே காலம் கடந்து நிற்கிறது. அதில் "பாபி" படமும் ஒன்று. திரு குவாஜா அஹ்மத் அப்பாஸ் கதையில் ராஜ்கபூர் நடித்து, தயாரித்து, தனது மகன் ரிஷிகபூரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி இயக்கிய படம் "பாபி". 1973-ஆம் ஆண்டு இந்திய மற்றும் சோவியத் ஒன்றியத்தில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்திய படம்.  இந்தப் படத்தின் பாதிப்பு இல்லாத / கதையைத் தழுவி வராத இந்தியக் காதல் திரைப்படங்களே இல்லை எனலாம்.

ரிஷி கபூர் வேடத்தில் முதலில் காதல் இளவரசன் ராஜேஷ் கண்ணா நடிக்கவிருந்தார், கடைசி நேரத்தில் ரிஷி உள்ளே வந்தார் என்று சொல்வதுண்டு.

"பாபி" எங்கள் தாத்தாவுக்குப் பிடித்த படம். 1988-ஆம் ஆண்டு ராஜ்கபூர் மறைந்த போது டெல்லி தூர்தர்ஷனில் ராஜ்கபூர் நடித்த, தயாரித்த சிறந்த படங்களை இரவு 11.௦௦ மணிக்கு ஒளிபரப்பினார்கள். சில படங்களைப் பார்த்ததாக ஞாபகம், ஆனால் "பாபி" படம் என மனத்தில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. நானும், தாத்தாவும் முழுப்படமும் பார்த்து முடித்தோம். பட ஆரம்பத்தில் பாடகர் சைலேந்தர் சிங் பாடிய "மெயின் சாயர் தோ நஹின்" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சைலேந்தர் சிங் மற்றும் லதாஜி பாடிய "ஹம் தும்" என்ற இனிமையான பாடலும் உண்டு.

இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்களுடைய இசை எப்பொழுதுமே Grand Scale-இல் இருக்கும். இந்தப் பாடலையும் ரகளையாக இசையமைத்திருப்பார்கள்.  இதோ அந்த பாடலை முழுதும் கேளுங்கள் :



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Saturday 16 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-33


அவள் ஒரு தொடர்கதை (1974)

"அவள் ஒரு தொடர்கதை" - இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்று. நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் படும் பாட்டைச் சொல்லிய படம். அதிகபட்சம் எல்லா மொழிகளிலும் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. சுஜாதாவின் முதல் படம். முதல் படத்திலேயே வலுவான முக்கியபத்திரமேற்றுப் பிரமாதமாக நடித்திருப்பார் சுஜாதா. "அவள் ஒரு தொடர்கதை" படம் இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சினிமா பயணத்தை வேறு திசையில் பயணிக்க வைத்தது.


இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் தொடாத ஜெனரே இல்லை எனலாம். அவர் இயக்கிய "அக்னி சாக்ஷி (1982)" என்ற சைகலாஜிக்கல் திரில்லர் வகைப் படம் பரவலான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் சரிதா மிரட்டலாக நடித்திருப்பார். அருமையான மேக்கிங். படத்தின் சில காட்சிகளைப் பார்த்து நான் பயந்ததுண்டு. குறிப்பாக "காணக் காணும்" பாடல் வரும் போது எழுந்து ஓடிவிடுவேன். நேரம் கிடைத்தால் அந்தப் படத்தை Youtube Channel-இல் பாருங்கள் புரியும்.

கே பியின் திரைப்பயணம் "தெய்வத்தாய்" படத்தில் வசனகர்த்தாவாகத் தொடங்கி இயக்குநராகப் பயணித்து "உத்தம வில்லன்" படத்தில் நடிகராக நிறைவுற்றது. ஐந்து மொழியில் கோலோச்சியவர். மூன்று தலைமுறை நடிகர்களை வைத்துப் படம் இயக்கிய ஒரே இயக்குநர். சின்னதிரையில் கால்பதித்து அதிலும் சாதித்தார்

சரி விசயத்துக்கு வருகிறேன், அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" Fast Beat பாடலை பிடிக்காதவர்கள் உண்டா? விச்சு டார்லிங் பலவித சிறப்புச் சப்தங்கள் சேர்த்த இசையில் SPB பாடிய பாடலுக்குக் கமல் நடித்து மேலும் மெருகேற்றியிருப்பார். நான்கு பேர் நிகழ்த்திய மாயாஜாலம், நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்தப் பாடலை நீங்களும்
கேளுங்களேன்:

                                 




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



Friday 15 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-32

பொம்மலாட்டம் (1968)

புரியாத வார்த்தைகளைப் போட்டு ஒரு பாடலை உருவாக்கினால், அது தான் இன்றைய தமிழ் சினிமாவின் Trend (கானா) பாடல்கள்,

அடுத்த பாடல் வரும் வரை கொஞ்ச நாள் அதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு, ரசிக்கிறார்கள். அந்த நேரத்துக்கு அது ஒரு சென்சேஷன் அவ்வளவு தான்.

ஆனால் தமிழ் சினிமாவில், முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை வார்த்தை எல்லாம் போட்டு ஒரு பாட்டு வந்து, அது சூப்பர் ஹிட்டும் ஆகி, இன்று வரை ரசிக்கப்படுகிறது. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கி, வி குமார் இசையமைப்பில் "பொம்மலாட்டம்" திரைப்படத்தில், மேற்சொன்ன "வா வாத்யாரே" பாடல் வரும். கவிஞர் வாலி இப்பாடலை எழுதச் சிரமப்பட, மெட்ராஸ் பாஷை தெரிந்தவரிடம் கேட்டு எழுதினார்.

ஆச்சி மனோரமா தமிழ் திரைத்துறையின் மிகசிறந்த ஆளுமை, சிறந்த பாடகியும் கூட, இன்றைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை. எத்தனையோ அருமையான பாடல்களை (High Pitch Voice) பாடியிருக்கிறார். இந்தப் பாடலையும் அசால்டாகப் பாடி, சோ ராமசாமியுடன் ஆடி,  ஈடுகொடுத்து நடித்திருப்பார். சென்னை தூர்தர்ஷனில் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில் அடிக்கடி இந்தப் பாடலை போடுவார்கள், மறுநாள் இந்தப் பாடலை முணுமுணுப்போம்.

                                        

 



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-31

சாந்தி நிலையம் (1969)

சாந்தி நிலையம் படம் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இயக்குநர் திரு ஜி எஸ் மணி இயக்கி, ஜெமினி எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரிப்பில்,  ஜெமினி கணேசன்-காஞ்சனா நடித்த சாந்தி நிலையம் - அப்போது 2-3 முறை தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. பேமிலி திரில்லர் வகை படம். பேமிலி சப்ஜெக்ட்டில் எப்படி திரில்லர் விஷயங்களைச் சேர்க்கமுடியும். படம் பாருங்கள் புரியும். ஜெமினி கணேசன் மென்சோகமுடைய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  விச்சு டார்லிங் இசையமைத்த "இயற்கை என்னும் " (SBP. பாடிய பாடல்), "கடவுள் ஒருநாள்", "பூமியில் இருப்பதும் வானத்தில்", "இறைவன்  வருவான்" போன்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.  இப்போது கேட்டாலும் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன், டிஎம்எஸ் அவர்கள் ஒவ்வொரு திரை ஆளுமைக்கும் (எம் ஜி ஆர், சிவாஜி, etc.) ஏற்றாற்போல் பாடுவதில் வல்லவர். இந்த படத்திலும் நாகேஷ் அவர்களுக்குக் குரல் கொடுத்திருப்பார். கிட்டதட்ட
நாகேஷ் பாடுவது போலவே இருக்கும்.  அந்தளவுக்குக் குரலை Synch செய்து பாடியிருப்பார்.  இன்னொன்று, ஸ்டூடியோவில் சில ஷாட்கள், சில வெளிப்புற ஷாட்கள், இரண்டையும் இணைத்து ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பாடுவது போலப் பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.  நீங்கள் பார்த்தீர்களானால், அப்பவே இது போன்ற முயற்சி வெகுவாக ரசிக்கப்பட்டது.

குறிப்பு : மிகப்பெரிய வெற்றிபெற்ற, ஆஸ்கார் மற்றும் பல விருதுகளைக் குவித்த, இன்றளவும் உலகின் சிறந்த பட வரிசையில் இடம்பெற்ற Sound Of Music என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும் சொல்வதுண்டு.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Thursday 14 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-30

சின்னதாயி (1992)

விக்னேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் எஸ்.கணேசராஜ் இயக்கிய படம். கிராமத்துக் கதை என்றால் சொல்லவா வேண்டும், ராஜாவுக்கு Cake Walk போல, பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். அப்போது வானொலியில் இரவு ஒளிபரப்பான  விவித-பாரதியின் வர்த்தக ஒளிபரப்பில் திரும்பத் திரும்ப இப்படத்தின் பாடல்கள் போடுவார்கள். இப்படத்தின் பாடல்களை இப்போதும் கேட்கலாம்.

வினுசக்கரவர்த்தி-தமிழ் திரையுலகின் கம்பீரமான ஆகச்சிறந்த ஆளுமை. வில்லனாக, அரசியல்வாதியாக, அப்பாவாக எனப் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரின் குரல் ஏற்று கொண்ட கதாபாத்திரத்துக்கு மேலும் வலுசேர்க்கும். இந்தப் படத்தில் சாமியாடியாக நடித்திருப்பார். படம் ஆரம்பமாகும் முதல் காட்சி சாமியாடி வினுசக்கரவர்த்தி வேட்டைக்குப் போகும் அந்தக் காட்சியில் அசலாக, மிரட்டலாக நடித்திருப்பார். அந்த இடத்தில் தொடங்கும் ராஜாவின் ராஜாங்கம் இறுதி காட்சி வரை தொடரும்.




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


கைதி (2019)


ஆக்ஷன் படமென்றால் எனக்குப் பிடிக்கும். தெலுங்கு ஆக்ஷன் படங்கள் விரும்பி பார்ப்பேன். (பாலகிருஷ்ணா படங்கள் தவிர்த்து). கைதி - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள ஆக்ஷன் மற்றும் துரத்தல் பாடம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது பட வாய்ப்பை திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

படம் வருவதற்கு முன்பே கணித்திருந்தேன், பட முன்னோட்ட காட்சி எதிர்பார்ப்பை அதிகரித்தது. இயக்குநர் லோகேஷ் இதிலும் ஏதாவது மாஜிக் செய்வார் என்று. காரணம் மாநகரம் படம் நன்றாக இருந்தது.

கதாநாயகி இல்லாத, பாட்டு இல்லாத படம் என்ற புதுமை எதுவும் இல்லை. ஏற்கனவே முன்னோடிகள் முயற்சி செய்தது தான். ஒரே இரவில் நடக்கும் கதை. இரண்டு மணி முப்பது நிமிடங்கள் உட்காரவைத்ததுதான் இயக்குநரின் மெனக்கெடல் மற்றும் சவால். கதாநாயகனுக்குப் பிளாஷ்பேக், அழகாக ஒரு குத்து பாடலை இடைச்செருகலாக வைத்திருக்கலாம், ஆனால் இயக்குநர் அதைச் செய்யவில்லை. ஆக்ஷன் படங்களில் வில்லன் கதாபாத்திரம் வலிமையாக இருக்கவேண்டும், இதிலும் கொடூரமான வில்லன்கள், அதற்கு ஈடுகொடுப்பது போலக் கதாநாயகன் கார்த்தி.

காவல்துறையால் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கைப்பற்ற ஒரு கும்பல் முயல்கிறது. போலீசாரை போட்டுத்தள்ள இன்னொரு கும்பல் துரத்துகிறது, சிறையிலிருந்து விடுதலையாகி மகளைக் காணப் புறப்பட்டுப் போகும் கதாநாயகன் இந்தக் கும்பலிடம் சிக்கி என்னாகிறான், அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன என்பது மீதி கதை. கார்த்திப் பிரியாணி சாப்பிடும் காட்சியிலிருந்து அவருடைய ஆட்டம் தொடங்குகிறது. கார்த்தியுடன் படம் முழுதும் பயணிக்கும் நரேன் கதாபாத்திரம் அருமை. கார்த்திக் கதாபாத்திரம் நன்றாக வடிவைக்கப்பட்டிருக்கிறது. குறைவான வசனம். நிறைவான நடிப்பு.

படத்தில் வரும் அந்த முதல் ஆக்ஷன் பிளாக் "இடி" ரகம். அன்பரிவ் குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஆக்ஷன் ப்ளாகிலும் தெரிகிறது.

லாரியும் ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுதும் வருகிறது. சின்னச் சின்னத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். காவல்துறை அலுவலகத்தில் நடக்கும் அந்தக் களேபரத்தில் சிக்கும் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரம் மற்றும் ஜார்ஜ் மரியான் வரும் காட்சிகள் செம.

சாம் சி எஸ் - பின்னணி இசை இன்னும் கூடக் கொஞ்சம் டெம்போ ஏற்றியிருக்கலாம். ராஜாவின் இசையைத் தொடாமல் யாரும் படமெடுக்கமுடியாது போல.

இறுதிகட்ட காட்சியில் அவ்வளவு பெரிய துப்பாக்கியை எடுத்துச் சுடுவதெல்லாம் சற்று too much ரகம் தான்.

மொத்தத்தில் ஆக்ஷன் பிரியர்களுக்கான விருந்து - "கைதி".


 நன்றி: Google Image



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Monday 11 November 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-29

மாயாபஜார் (1957)

இந்திய சினிமா எளிதில் கடந்துவந்துவிட முடியாத படம். சினிமாவை நேசிப்பவர்களால் தான் காலம் கடந்த ஒரு சிறந்த படைப்பைத் தர முடியும். அப்படி ஒரு படம் தான் "மாயாபஜார்". அவ்வப்போது முரசு தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பாகும் போது நானும் பார்ப்பேன். "பழைய படத்தை யாரு உட்கார்ந்து பார்ப்பது?" என்று சொல்லவே முடியாத படம். காட்சிக்குக் காட்சி சுவாரசியம். அன்றைய காலகட்டத்தில் மிகுந்த பொருட்ச்செலவில் தயாரான படம். இன்றைய "பாகுபலி" படங்களுக்கெல்லாம் முன்னோடி "மாயாபஜார்".

எங்கள் தாத்தா இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் "மாயாபஜார்" படம் பார்க்க ஆசைப்பட்டார். மாமா அதன் வீடியோ கேசட்டை தேடி, அலைந்து கண்டுபிடித்து, வாங்கிக் கொண்டுவந்து விசிஆர் -இல் போட்டு விட்டார். தாத்தா அதைப் பார்த்துவிட்டுத் தான் கிளம்பினார்!

சரி, இந்தப் படத்தில் நடித்தவர்கள் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லமுடியுமா? கடோத்கஜனாக ரங்காராவ் ? கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ் ?, நடிகையர் திலகம் சாவித்திரி ? அல்லது ஜெமினி கணேசன்? எம் என் நம்பியார் ? நிச்சயமாக உங்களால் சொல்ல முடியாது. அவரவர் கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருப்பார்கள். சின்னச் சின்னத் துணைக் கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருப்பார்கள். அதிலும் ரங்காராவ், சாவித்திரி உடலில் புக, அப்போது சாவித்திரி ஆண் போல ஆடி, பாடி மிரட்டலாக நடித்திருப்பார். (நடிகர் பெண் வேடத்தில் நடிக்கலாம், நடிகை ஆண் வேடத்தில் நடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலை).

சென்னை தூர்தர்சனில் இந்தப் படத்தைப் பார்த்ததாக ஞாபகம். மந்திர-தந்திர மாயாஜால படம். சொல்லவா வேண்டும், மிகுந்த உற்சாகத்தோடு கண்டுகளித்தோம். திரு கண்டசாலா இசையில், திருச்சி லோகநாதன் பாடிய "கல்யாண சமையல் சாதம்...." பாடல் வரும் போது. வாய் பிளந்து பார்ப்போம். VFX, Graphics போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இந்தப் பாடலை எடுத்தார்களோ தெரியவில்லை.

"மாயாபஜார்" நிகழ்த்திய மாயாஜாலம் என்றென்றும் நிலைத்திருக்கும்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          



ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-28

தனியிசை பக்தி பாடல்கள்
திரைப்படப் பாடல்களின் வீச்சைத் தாண்டி சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன் ஐயா, பெங்களூர் ரமணியம்மாள் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அம்மா போன்றவர்கள், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் மீது பாடிய பக்தி தனியிசை பக்தி பாடல்கள் 1980 களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பாடல்களைக் கேட்கும் போது, ஏதோ பக்தி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் போலும் என்று நினைப்பதுண்டு. பிறகு தான் தெரிந்தது அது தனியிசை பாடல்கள் என்று. எங்கள் பாட்டி வீட்டில், மாமா அடிக்கடி இவர்கள் பாடல்களைக் காலை வேளையில் ஒலிக்கவிடுவார். கேட்க, கேட்க, அப்படியே பாடல்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும். அதிலும் பெங்களூர் ரமணியம்மாள் அவர்களின் குரல் அபூர்வமானது. அவர் பாடிய "பொம்ம...பொம்ம..தா", "வெற்றிவேல் முருகனையும் அரோகரா" "குன்றத்திலே முருகனுக்கு" போன்ற Fast Beat பாடல்களைக் கேட்கும்போது உற்சாகமாக இருக்கும்.

எங்கள் வீட்டு அருகில் உள்ள கோயிலில் தினமும் காலையில் மேற்சொன்ன பாடல்களைப் போடுவார்கள். அப்பா புதிதாக டேப் ரெக்கார்டர் வாங்கியபோது, டிஎம்எஸ் பாடிய முருகன் பக்தி பாடல்கள் கேசட்டை வாங்கி, தினமும் கேட்பார். அதற்குப் பிறகு இப்போது வரை எத்தனையோ பேர் பக்தி பாடல்களைப் பாடியிருந்தாலும். இவர்கள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்களின் பாடல்கள் தமிழகக் கோவில்கள், கடைவீதி எனத் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் கணீரென்று ஒலித்துக்கொண்டே இருக்கும்.

பெங்களூர் ரமணியம்மாள் முருகன் மீது பாடிய பக்தி பாடல் இதோ உங்களுக்காக:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          




ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-27

ராஜபார்ட் ரங்கதுரை (1973)
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்றோ, இரு தினங்கள் முன்னே பின்னே இருக்கையில், சென்னை தூர்தர்ஷனில் வெள்ளியன்று ஒளிபரப்பான "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியில், நடிகர் திலகம் நடித்த படத்திலிருந்து இந்தப் பாட்டை முதலில் போடுவார்கள். கடைசியாக "பாரத விலாஸ்" படத்தில் வரும் "இந்திய நாடு என் வீடு... " என்ற இந்தப் பாட்டை போட்டு முடிப்பார்கள். எங்கள் பள்ளி நாட்களில் குடியரசு தினம் அல்லது மற்றும் சுதந்திர தின விழாவில் "இந்திய நாடு என் வீடு... " பாட்டுக்கு எங்கள் வகுப்பு நண்பர்கள் நடனம் ஆடியிருக்கிறார்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன்...

இயக்குநர் பி மாதவன் இயக்கி, நடிகர் திலகம் நடித்த "ராஜபார்ட் ரங்கதுரை" படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே, சூப்பர் ஹிட். "அம்மம்மா தம்பி", "மதன மாளிகையில்" பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதிலும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற எழுச்சிமிக்கப் பாடல் என் விருப்ப பாடல். விச்சு டார்லிங் இசை Vibrant-ஆக இருக்கும். பாடல் கேட்கும்போதே சிலிர்க்கும். இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரன் பகத் சிங் வாழ்க்கையின் கடைசி நொடிகளைக் சொல்லும் சின்ன Episode இந்தப் பாடல். இதோ நீங்களும் அந்த பாடலை கேட்டுப்பாருங்கள்:



நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Thursday 31 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-26

இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

ப்போதெல்லாம் திருமணம் வீடுகளில் நடக்கும். நான்கு நாளைக்கு முன்பே, ஒலிபெருக்கி சகிதாம் வந்து இறங்குவார்கள் மைக்-செட்-சவுண்ட் சர்விஸ் ஆட்கள். அப்போது பிரபலமாக உள்ள அனைத்து திரைப்பட இசைத் தட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு அலறவிடுவார்கள். இத்தனைக்கும் அப்போது மோனோ ஒளி அமைப்பு தான், அதுவே கேட்கப் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படிக் கேட்டது தான் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி, கமல்-ரஜினி நடித்து, ராஜா சார் இசையமைத்த வெற்றிப்படமான "இளமை ஊஞ்சலாடுகிறது" படப் பாடல்கள். மலேசிய வாசுதேவன் ரகளையாகப் பாடிய "தண்ணி கருதிருச்சி" பாடல் தொடங்கி "என்னடி மீனாட்சி " வரை திரும்பத் திரும்ப ஒலிக்க விட்டார்கள்.

சாதாரணமாக மென்மையான பாடல்களைப் பாடும் பாடகி திருமதி வாணி ஜெயராம் இதில் Fast Beat பாடலை பாடியிருப்பார்.  "நீ கேட்டால் நான்..." என்ற பாடல் தான் அது. இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு அந்தக் கல்யாண வீடு தான் ஞாபகம் வருகிறது.



 நன்றி: Youtube




குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-25

தெய்வமகன் (1969)

டிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ ஜானரில் (பேய் படத்தில் நடித்திருக்கிறாரா ?), வேடங்களில் நடித்திருந்தாலும் தொழிலதிபர் வேடத்தில் நடித்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அந்த வேடத்தில் அவருடைய மிடுக்கு, கம்பீரம், உடல்மொழி. வசன உச்சரிப்பு, முகபாவங்கள் என அனாயாசமாக வெளிப்படுத்துவார். (உதாரணம்: உயர்ந்த மனிதன், பார் மகளே பார், மற்றும் பல படங்கள்)

சரி விஷயத்துக்கு வருகிறேன், நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த "தெய்வமகன் " எனக்குப் பிடித்த படம்.  படத்தில் மூன்று பேர் சந்திக்கும் காட்சி. அன்பால் குழையும் சிவாஜி, அன்புக்கு ஏங்கும் சிவாஜி, குற்ற உணர்வால் தவிக்கும் சிவாஜி என மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறு குரல் பண்பேற்றம், வெவ்வேறு உடல்மொழி எனப் பின்னியிருப்பார்.

"தேவையில்லன்னு நினைச்ச தந்தையும், அவனைத் தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் அற்புதமான காட்சி" என்ற வசனத்துடன் அந்தக் காட்சியைச் சிவாஜி ஆரம்பித்துவைப்பார். நம்ம விச்சு டார்லிங் (MSV) இந்தக் காட்சிக்கு அருமையாகப் பின்னணி இசை போட்டிருப்பார், படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கும் அந்தக் காட்சியின் வீரியத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.

இந்தக் காட்சியை இயக்குநர் எப்படிக் கம்போஸ் செய்தார், அதை எப்படி நடிகர் திலகத்திடம் கொண்டுசென்றார், அதை உள்வாங்கி எப்படி நடிகர் திலகம் நடித்தார், காட்சியைக் கவனமாகக் கையாண்ட படத்தொகுப்பாளர், காட்சிக்குப் பின்னணி இசையால் உயிரூட்டிய MSV என இவர்கள் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம் காலம் கடந்து நிற்கிறது.

இதோ நீங்களும் அந்தக் காட்சியை முழுதாகக் கண்டுகளியுங்கள்:



Note: இப்படத்தில் தாயும்-மகனும் (சிவாஜி-பண்டரிபாய்) கோயிலில் சந்திக்கும் காட்சி, பின்னாட்களில் வந்த "தளபதி" படத்தில் இடம்பெற்ற ரஜினி-ஸ்ரீவித்யா கோயிலில் சந்திக்கும் காட்சியை ஞாபகப்படுத்தியது.


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Monday 28 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-24

கோபுர வாசலிலே (1991)

ந்தப் பாடலை பிடிக்காதவர்கள் உண்டோ? எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் அப்போது பிரபலமான ஃபிளிப் கைப்பேசி வாங்கியிருந்தான். அந்தக் கைப்பேசியின் ரிங்க்டோனாக இந்தப் பாடலை வைத்திருந்தான். அதுவுமில்லாமல் ஒரு நாளைக்குப் பல தடவை இந்தப் பாடலை கேட்பான். "அவனுடைய ஆளுக்கு இந்தப் பாடல் இஷ்டமாம்" காரணம் கேட்டபோது சொன்னான். திடீரென்று ஒரு நாள் போனையும், ரிங்க்டோனாயும் மாற்றிவிட்டுருந்தான். பிறகு தான் தெரிந்தது நண்பனுக்குக் காதல் முறிவு ஏற்பட்டது என்று.

இருந்தாலும் என்ன எனக்கு இந்தப் பாடல் பிடிக்குமே!! அந்தப் பாடல் "காதல் கவிதைகள்" - இடம்பெற்ற படம் "கோபுர வாசலிலே". இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய இரண்டாவது தமிழ் படம். காதல், நகைசுவை எனப் படம் கலகலப்பாக, கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், ராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.  அதில் ஒன்று இந்த பாடல்:

இது போல ஒரு பாடலை மீண்டும் Recreat செய்ய முடியாது. எத்தனையோ வருடங்கள் திரும்பத் திரும்பக் கேட்டாலும்.. இன்று தான் புதிதாகக் கேட்பதுபோல் மாறாத பரவசம்!   நீங்களும் கேளுங்களேன்:






நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-23

ந்திய சினிமாவில் இடம்பெற்ற சிறந்த ஆக்ஷன் பிளாக் எது தெரியுமா?

எத்தனையோ படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ஆரவாரம் செய்து கைதட்டி ரசித்திருப்போம். இன்று வரை இந்திய சினிமாவில் இது போன்றதொரு சண்டைக் காட்சி இடம்பெறவில்லை என்பதே உண்மை. இன்றைய நவீன சினிமாவில் சண்டைக் காட்சிகளில் நிறைய மெனக்கெடல்கள், பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், சட்டென்று மனதில் பதிய மறுக்கிறது. நான் சொல்வது சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான மற்றொரு வெற்றிப்படமான அமிதாப் நடித்த "தீவார்" (1975) என்ற மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்தி படத்தில் இடம்பெற்ற முக்கியச் சண்டைக் காட்சி.

"தீவார்" படத்தின் மறுஆக்கம் தமிழில் ரஜினிகாந்த் நடித்து "தீ" (1981.) என்ற பெயரில் வெளியானது. பள்ளி நாட்களில் விசிஆர் - வீடியோ கேஸட் - இல் பார்த்தப்படம். ரஜினி நடித்த படங்களில் என்னுடைய  All time favorite. இது ரீமேக் படம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இதிலும் அந்தச் சண்டைக் காட்சி அதே லெவலில் இருக்கும். யார் இதில் பெஸ்ட் என்றெல்லாம் கணிக்கமுடியாது. இரண்டுமே கிளாஸ் ரகம் தான். யூடியூப் சேனல் வந்த பிறகு அடிக்கடி பார்ப்பதுண்டு. இதோ அந்தக் காட்சியைக் கண்டு ரசிப்பீர்:






நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Friday 25 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-22

என் ராசாவின் மனசிலே (1991)

கோடை விடுமுறை, புதன்கிழமை, மாமா சினிமா பார்க்க காசு கொடுத்தார்.
நானும் எனது நண்பனும் மிதிவண்டி எடுத்துக்கொண்டு படம் பார்க்க மதிய காட்சிக்குச் சங்கம் திரையரங்கம் சென்றோம். அந்தப் படத்தின் கதாநாயகனுக்குப் பெரிய கட்அவுட் வைத்திருந்தார்கள். பெண்கள் கூட்டம் அலைமோதியது, முட்டி மோதி பார்த்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். அதற்குப்பதில் வேறு எதோ படம் பார்த்ததாக நினைவு. பெயர் ஞாபகம் இல்லை.

சில நாள் கழித்து, மீண்டும் முயற்சித்தோம், மேலே சொன்னதே நடந்தது. சில வாரங்கள் ஆன பிறகு வீடியோ கேசட் வெளியிட்டார்கள், தினத்தந்தியில்
விளம்பரம் வந்தவுடன், வீடியோ கேசட் வாங்கிப் படம் பார்த்தோம்.

இதில் விஷயம் என்னவென்றால், அன்றைய சில கதாநாயகர்களுக்கு (டிஆர் மற்றும் ராஜ்கிரண்) கணிசமான பெண் ரசிகைகள் கூட்டம் இருந்தது. குறிப்பாக நடிகர் ராஜ்கிரண் படம் வந்தால், பெண்கள் திரையரங்குக்குப் படையெடுப்பார்கள். அவருடைய படங்கள் வரிசையாக வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது மற்றும் ராஜாவின் இசை.

மேலே சொன்ன படம் இயக்குனர் கஸ்துரி ராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் நடித்து 91-ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த "என் ராசாவின் மனசிலே". வைகை புயல் வடிவேலு நடித்து வெளிவந்த முதல் படம். கோடை விடுமுறையில் படம் பார்க்க எத்தனித்த போது ஏற்பட்ட அனுபவம்.

"என் ராசாவின் மனசிலே" படத்தில் பாடகி சுவர்ணலதா பாடிய "குயில் பாட்டு"
எனக்குப் பிடிக்கும். நான் முன்பே சொன்னது போலச் சுவர்ணலதாவின் குரல்
தனித்தன்மை வாய்ந்தது. அதனால் தான் இன்றும் இந்தப் பாடலை கேட்கமுடிகிறது.  இதோ அந்தப் பாடல்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

Thursday 24 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-21

யாதோன் கி பாரத் (1973)

இந்தியாவின் தலைசிறந்த கதை-திரைக்கதை ஆசிரியர்களான சலீம்-ஜாவேத் எழுத்தில் உருவான "யாதோன் கி பாரத்" இந்திய சினிமாவின் பல முன்னுதாரணங்களைக் கொண்ட படம். பல நட்சத்திர நடிகர்கள் ஒரே படத்தில், காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், பழிவாங்கல் எனக் கலந்து கட்டி வந்த படம். அதற்குப்பிறகு வந்த படங்கள் அனைத்தும் இதே முறையைப் பின்பற்றி வந்தது.

"யாதோன் கி பாரத்" இந்தி படம் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து "நாளை நமதே" என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது பின்பு தெரிந்துகொண்டேன்.

பள்ளி நாட்களில் தூர்தர்ஷனில் சனிக்கிழமை தோறும் இந்தி படம் மற்றும் ஞாயிறு தோறும் தமிழ்ப் படம் போடுவார்கள். ஒரு மாலை வேளையில் "யாதோன் கி பாரத்" இந்தி படம் போட்டார்கள். மொழி தெரியவில்லையென்றாலும் ஒரு மாதிரி கமர்சியல் அம்சங்கள் நிறைந்திருந்ததால், ஆர்வமுடன் பார்த்தோம். ஆனால் "சுரா லியா ஹை தும்நெ ஜோ தில் கோ " என்ற பாடல் என் நினைவில் பதிந்துவிட்டது. 

ஆர் டி பர்மன் இசையில் ஆஷா போஸ்லே மயக்கும் குரலில் ரகளையாகப் பாடியிருப்பார். இந்தப் பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும். பாடலின் பிற்பகுதியில் பாடகர் முகமது ரபி உள்ளே வருவார். இடையே இடையே வரும் சாக்ஸபோன் interlude அருமையாக இருக்கும்.  இதோ நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          


Tuesday 22 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-20

ஆராதனா (1969)

காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் நடித்து, 1969-ஆம் ஆண்டு வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிபெற்ற காதல் சித்திரம். பல மொழிகளில் இப்படம் மறு ஆக்கம் செய்திருந்தாலும், அசல் வெளியீடான "ஆராதனா" எப்போதுமே பெஸ்ட்.

அப்போது தூர்தர்சனில் புதன் கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் "சித்ராஹார்" நிகழ்ச்சியில் அடிக்கடி கிஷோர் குமார் பாடிய "மேரே சப்னோ கி ராணி...." என்ற பாடலை போடுவார்கள். ராஜேஷ்கண்ணா ஜீப்பில் பாடிய படி வர, ரயிலில் பயணம் செய்யும் சர்மிளா ஓரக்கண்ணால் இடையே, இடையே பார்க்க எனப் பாடல் அழகாக இருக்கும்.

இப்போது விஷயம் அதுவல்ல, ஆராதனா படத்தில் இன்னொரு பாடல் உண்டு "ரூப் தேரா மஸ்தானா பியார்" என்ற பாடல் காலஞ்சென்ற பாடகர் கிஷோர் குமார் கிறங்கடிக்கும் குரலில் அனாயாசமாகப் பாடியிருப்பார். மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை எனக் கலந்துகட்டி விருந்து படைத்திருப்பார் இசையமைப்பாளர் எஸ் டி பர்மன்.

இன்னொன்று காதல் இளவரசன் ராஜேஷ்கண்ணா-சர்மிளா தாகூர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக ஒர்கவுட் ஆகியிருக்கும்.



 

குறிப்பு: ஆராதனா ஹிந்தி படத்தில் மறுஆக்கத்தில் நடிகர் திலகம் நடித்து "சிவகாமியின் செல்வன்" என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது. அதைப் பற்றிய சுவையான தகவல்களை இந்தச் சுட்டியை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
https://www.vikatan.com/anniversaries/kollywood/61774-sivakamiyin-selvan-movie-analytics


நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி          

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-19

உயிரே உனக்காக (1986)

 யக்குநர்க் கே ரங்கராஜ் இயக்கி, வெள்ளிவிழா நாயகன் நடித்த மற்றொரு படம் "உயிரே உனக்காக". ஒரு மாற்றத்துக்கு வேண்டி இந்தப் படத்துக்கு இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையைத் தமிழுக்குக் கொண்டுவந்திருப்பார் தயாரிப்பாளர் திரு. கோவை தம்பி. இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசை எனக்குப் பிடிக்கும். அவர்களுடைய இசை ரகளையாக இருக்கும். "ஆரிராரோ.. ஆரிராரிரோ.....தேனுரும் ராகம் ", "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்", "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க" போன்ற பாடல்களை அனைத்தும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல் ஜானகி அம்மா பாடிய "பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்லச் சிரிக்க". சற்றே பெரிய பாடல். புல்லாங்குழல் ராகம் எடுத்துத் தர, குயில்கள் கிச்சு... கிச்சு..அப்படியே ஜானகி உள்ளே வருவார். பாடல் முழுதும் பல வித கருவிகளை ஒலிக்கவிட்டு ஜுகள் பந்தி போல, அட்டகாசமாக இசையமைத்திருப்பார்கள் இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால்.

"நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும் எளிமையான அந்த இறைவன் ஆலயம்....." வரிகளுக்குப் பிறகு வரும் அந்தக் கோரஸ்.......கொஞ்சம் அமைதி... பின்பு ஜானகி பாடலை முடித்துவைப்பார். நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            


Monday 21 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-18



ஏக் துஜே கே லியே (1980)

ப்போது விவிதபாரதி வானொலி நிகழ்ச்சியில் லதாஜி பாடிய மனதை உருக்கும் இந்தப் பாட்டை அடிக்கடி ஒளிபரப்புவார்கள்.  கேட்கப் பிடிக்கும். ஆனால் மறுபடியும் கேட்க முடியாது, எப்போதாவது ஒளிபரப்பினால் தான் உண்டு. வீட்டில் டேப்ரெக்கார்டர் எல்லாம் இல்லை. வளர்ந்த பிறகு தான் தெரிந்தது அது கமலஹாசன் நடித்து, இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி, கவிஞர் ஆனந்த் பக்ஷி எழுதி, இசை இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த்-பியரிலால் இசையமைத்த ஏக் துஜே கே லியே (1980) என்ற கோடிகளை வசூலித்த இந்தி வெற்றிப்படம் என்று!

மரோசரித்ரா (1978) கமலஹாசன் நடித்து, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கி தெலுங்கில் வெளிவந்து ஐந்நூறு நாட்களுக்கு மேல் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஓடிய படம் தான் மேலே சொன்ன ஏக் துஜே கே லியே (1980.) என்ற இந்தி மறுஆக்கம் படம்.  சரி நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் :



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி            

Thursday 17 October 2019

மிதிவண்டி நாட்கள்

ன்னால் என் பையனை மிதிவண்டி பின்புறம் உட்கார வைத்து மிதிக்க முடியவில்லை.. உடலில் சக்தி இல்லையா, வயதாகிவிட்டதா அல்லது சாலை சரியில்லையா என்று தெரியவில்லை. கை, கால், உடம்பு வலி எடுத்துக்கொண்டது.

அப்பா என்னையும் என் தம்பியையும் மிதிவண்டியில் முன் பின் உட்காரவைத்து 3-4 கிலோமீட்டர் ஓட்டிக்கொண்டு பள்ளியில் விட்டு அலுவலகம் செல்வார். சுகமான பயணம், லாவகமாக ஓட்டுவார். கொஞ்சம் வளர்த்தபிறகு பள்ளிக்கு நடந்தே வந்து, போவேன்.

சைக்கிள் என் கனவு. பள்ளியில் படிக்கும் போது வகுப்பு நண்பர்கள் எல்லோரிடமும் சைக்கிள் இருக்கும்.

என்னுடன் படித்த பவன் குமார் என்ற நண்பன் அவனுடைய புதிய மிதிவண்டியைப் பள்ளிக்குக் கொண்டுவந்தான். அவ்வப்போது எனக்கு ஓட்ட தருவான். ஒரு நாள் அவனுடைய மிதிவண்டி திருடு போய் விட்டது. கடைசி வரை அதை யார் எடுத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

எப்போதாவது அப்பா அலுவலகம் விடுப்பு எடுத்தால் அப்போது பள்ளிக்குச் மிதிவண்டி கொண்டு வருவேன். எப்போது பள்ளி விடுவார்கள் என்று ஆவலாய் இருப்பேன். பள்ளி விட்டதும் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வேகமாய் ஓட்டிச்செல்வது பிடிக்கும்.

ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அம்பத்தூர் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்த எனது மாமா புதுச் சைக்கிள் வாங்கிக்கொடுத்தார் (காசுக்குத்தான்...) ஆரம்பம் முதலே செலவு வைக்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நடராஜா சர்வீஸ்.

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டருகே ஒரு தாத்தா மிதிவண்டி வாடகை கடை இருக்கும், ஒரு மணிநேரத்துக்கு ரூ.1/-. பாட்டி அரைமணி நேரத்துக்குத் தான் காசு கொடுக்கும். என்னைப் போலப் பையன்கள் நேரம் முடிந்து மிதிவண்டி கொண்டுவரும் வரை காத்திருக்க வேண்டும். வந்ததும் எனக்கு வண்டி கிடைக்கும். வண்டி எடுத்துக்கொண்டு பூங்கா, அந்த நான்கு தெருவைச் சுற்றி வருவதற்குள் அரைமணி நேரம் முடிந்துவிடும். அப்போது தெருவில் வாகன புழக்கம் குறைவு. தைரியமாக வண்டி ஓட்டலாம்.

வாடகை மிதிவண்டி கடையைச் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். திராவிட இயக்க வரலாற்றைப் பார்த்தோமானால் முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடை தோழர்கள் தான் இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். முடிதிருத்தகக் கடை மற்றும் மிதிவண்டி கடைகளில் கிடைக்கும் திராவிட இயக்க பத்திரிக்கைகளைப் படித்து ஏனையோர் சாரை சாரையாக அவ்வியக்கத்தில் சேர்ந்தார்கள். இப்படி வந்தவர்கள் தான் பிற்பாடு தமிழக அரசியலில் கோலோச்சினார்கள் - நன்றி : "அறிஞர் அண்ணா - மாபெரும் தமிழ் கனவு" - தி ஹிந்து பதிப்பகம்.

என் பையனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மிதிவண்டி வாங்கிக் கொடுத்துவிட்டேன். ஆரம்பத்தில் மிதிவண்டி ஓட்டும்போது அவன் பின் பள்ளிவரை செல்வேன்.

இப்போது மிதிவண்டி அடிக்கடி பழுதேற்படுகிறது. மிதிவண்டி பழுதானால் அதைச் சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிறது காரணம் முன்பெல்லாம் தெருவுக்கு நான்கு மிதிவண்டி பழுது பார்க்கும் கடை இருக்கும், இப்போது ஊரின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ச பழுது நீக்குக் கட்டணம் ரூ.100/-. விடுமுறையில் அரை நாள் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் மிதிவண்டியை யாரும் சாலையில் ஓட்டுவதில்லை. மிதிவண்டி உடற்பயிற்சி சாதனமாகி நீண்ட நாட்களாகிவிட்டது . வீட்டிலே மிதிவண்டி போல உள்ள சாதனம் வாங்கி உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்கிறார்கள். ஊர் ஊருக்குப் பயிற்சிக்கூடங்களும் பெருகிவிட்டது.

ட்ரயத்லான் என்ற விளையாட்டு, மூன்று செயல்களான நீச்சல் (1500 மீட்டர் ) மிதிவண்டி ஓட்டுதல் (40 கிலோமீட்டர்) மற்றும் ஓட்டப்பந்தயம் (10 கிலோமீட்டர்) அடுத்தடுத்துச் செய்யவேண்டும். இப்போதைய நடப்பு ட்ரயத்லான் உலகச் சாம்பியன் (ஆண்கள்) பிரான்ஸைச் சேர்ந்த திரு வின்சென்ட் லூயிஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி கேட்டி சபிரேஸ் (பெண்கள்). ட்ரயத்லான் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டியின் விலை ரூபாய் 1.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

சாலையில் மிதிவண்டி ஓட்டுவதே பெரும்பாடாய் இருக்கிறது, இதில் மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல், ஓட்டப்பந்தயம் ஒரே நேரத்தில் எப்படிச் செய்யமுடிகிறதென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் மிதிவண்டி பல வித வசதிகளோடு கிடைக்கிறது. பல வெளிநாட்டு மிதிவண்டி ரகங்களும் சென்னையில் கிடைக்கிறது. கியர் வண்டியின் ஆரம்பி விலை ரூபாய் 4000/-. சில நகரங்களில் மிதிவண்டி பாதை என்று தனியாக அமைத்திருக்கிறார்கள்.  சென்னையிலும் சில இடங்களில் இருக்கிறது.

"பைசிக்கிள் தீஃவ்ஸ்" (1948.) என்ற இத்தாலியப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? காணாமல் போன மிதிவண்டியைச் சுற்றி நிகழும் கதைக்களம். அதை நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன இயக்குநர் விட்டோரியோ டி சிகா மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய நடிகர்கள், அதனால் தான் என்னவோ உலகின் இரண்டாவது சிறந்த படமாக இருக்கிறது இப்படம்.  வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் இப்படத்தைப் பாருங்கள்.

சரி, நீங்கள் எப்போது கடைசியாக மிதிவண்டி ஓட்டினீர்கள். உங்கள் பழைய மிதிவண்டி இன்னும் உங்களிடம் இருக்கிறதா?


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி

Tuesday 15 October 2019

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-17

செம்பருத்தி (1992)

ம்பத்தூர் ராக்கி திரையரங்கில் நானும் எனது நண்பனும் பார்த்த படம்.  வழக்கமான காதல் கதை தான். புதிதாக ஒன்றும் இல்லை  ஆனால் ராஜாவின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் ஊரெங்கும் ஒலித்தது. இப்போது கூட கேட்கலாம்.

காலஞ்சென்ற அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய திமுக கட்சி பாடல்களை கேட்டிருக்கிறேன். அவரின் இஸ்லாமியப் பாடல்கள் மனதை வசீகரிக்கும். அவரை போலவே பாடுபவர்கள் இருந்தாலும்,  இனி அது போன்றொரு குரலைக் கேட்கமுடியாது. "பாவமன்னிப்பு" படத்தில் இடம்பெற்ற "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலில் தொடங்கியது அவர் குரலின் வீச்சு. அவர் குரல் ஒலிக்காத தமிழக ஊர்களே இல்லை எனலாம். 

அடுத்து, ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த  "செம்பருத்தி" படத்தில் அமரர் திரு நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய  அருமையான பாடல் "காதலே தனிமையிலே". தரமான தலையணியுடன் கேட்டுப்பாருங்கள். விஸ்தீரணமான குரல், பாடலை கேட்டு முடித்தவுடன் உங்களைக் கொஞ்ச நேரம் ஆக்கிரமிக்கும். இதோ அந்த பாடல்.



நன்றி: Youtube



குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி


மூளையை கசக்கு

ன்னுடன் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து, சொந்த தொழில் செய்யும் நண்பரின் தாரக மந்திரம் "மூளையைக் கசக்கு". எப்போதும் தான் தொடங்கப்போகும் தொழிலைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருக்கும். என்னென்ன தோன்றுகிறதோ அத்தனையும் ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்துகொள்வார். தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதற்கான திட்டச் செலவினங்கள், திடீர் செலவுகளைச் சமாளிக்க வேண்டி கையிருப்பை எவ்வளவு வைத்திருப்பது, கட்டிடப் பொறியாளர் தயாரித்துக் கொடுத்த கட்டிட வரைபட அறிக்கை, அரசு அனுமதி வாங்கத் தேவையான துணை காகிதங்கள், வங்கிக் கடன் வாங்கத் தேவையான காகிதங்கள் என எல்லாம் தயாராக வைத்திருப்பார்.

தினமும் நாளிதழில் வரும் அனைத்து விளம்பரங்களையும் விடாமல் பார்ப்பதும், இணையத்தில் அந்தக் குறிப்பிட்ட நிறுவன இணையத்தளத்தில் பார்ப்பதும் அவர் வழக்கம். சொந்த தொழில் என்பது விபத்து அல்ல, அது தானாக ஏற்றுக்கொண்ட ஒரு தவ வாழ்க்கை என்பது அவருடைய குறிக்கோள். மேலே சொன்னதெல்லாம் அவர்
ஒவ்வொருவரிடமும் கேட்டு/ புத்தகங்கள் படித்துத் தெரிந்துகொண்டு உருவாக்கிக் கொண்ட வழிமுறை.

அந்த நாளும் வந்தது நாளிதழில் விளம்பரம் வந்தது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கென்றே பிரத்தியேகமான ஆட்கள் உண்டு.
தில் bidding தொகையைக் குறிப்பிடுவது முக்கியம். இதில் அனுபவம் உள்ள நபரைத் தேர்ந்தெடுத்து, அவரை வைத்து விண்ணப்பித்தார். பிறகு எப்போதும் போலத் தான் பணிபுரியும் அலுவலக வேலையைப் பார்த்தார். சில மாதங்கள் கழித்து விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து வந்த அதிகாரிகள் தன்னுடைய நிலத்தை பார்த்துப் போனார்கள். முக்கியச் சாலையில் நிலம் மற்றும் bidding தொகை காரணமாக இவருடைய விண்ணப்பம் தேர்வானது. மேலும் நிறுவனம் அந்த இடத்தில் அமையவிருக்கும் தனது கிளைக்கு அதிகத் தொகை ஒதுக்கியது.

அதன் பிறகு பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி, அதற்கென்று உள்ள நபரைப் பிடித்து அவரிடம் பணியை ஒப்படைத்தார். அவருடைய கட்டணம் ரூபாய் இரண்டு லட்சம். இதற்கிடையில் தனது மகனை ஒரு நிறுவனத்தில் இரண்டு மாதம் பயிற்சிக்கு அனுப்பினார்.

நிறுவன ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அரசுத் துறைகளிடமிருந்து அனுமதி பெற்ற காகிதங்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. வைப்புத்தொகையைக் காட்டினார். பிறகென்ன நிறுவனம் தனது வேலை ஆரம்பித்தது. இனி பிரச்சனை இல்லை, களத்தில்/தளத்தில் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும், வேலைக்கு வந்துகொண்டு
ம், போய்க்கொண்டும் இருந்தால் வேலைக்காகாது எனக் கருதி தனது வேலையை ராஜினாமா செய்தார். தான் பணிபுரிந்த நிறுவனம் வியப்பாகப் பார்த்தது. லட்சியம் உறுதியாக இருக்கும்போது யார் என்ன செய்யமுடியும்.

பிறகு இரண்டு மாதம் கழித்துத் தனது நிறுவனத்தை எளியமுறையில் தொடங்கி விட்டதாக எனக்கு மட்டும் தகவல் சொன்னார். பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து யாரையும் அழைக்கவில்லை, காரணம் பல சொன்னார். அதில் முதல் காரணம் பொறாமை.

சரி அவரைப் பற்றிய சிறுகுறிப்பு:


தந்தையின் அகல மரணத்தால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனது, தனது தந்தை பணிபுரிந்த நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. திறம்பட வேலை செய்து நல்ல பெயர் வாங்கினார். தனது அம்மாவின் நகைகளை வைத்து, வீட்டு காலி நிலத்தில்

ஒரு கடை, இரண்டு வீடுகளைக் கட்டி வாடகை விட்டார். வாடகை பணம், சம்பளப் பணம் எனச் சேர்த்த பணத்தில் அந்தக் காலகட்டத்தில் சென்னை புறநகர்ப் பகுதியில் சொற்ப தொகையில் நிலங்களை வாங்கிப் போட்டார், அடுத்த இருபது வருடங்களில் அது ராக்கெட் வேகத்தில் விலையேற்றம் காணப் போகிறது என்று தெரியாமல். அதில் ஒன்றில் சில கடைகளைக் கட்டி வாடகை விட்டார். இதற்கிடையில் திருமணம், குழந்தைகள் எனக் குடும்பம் பெரிதானது. அம்மாவும் மனைவியும் தான் அவரது பலம். அப்படி வாங்கிப் போட்ட நிலத்தில் தான் முருகன் பெயரில் இன்று தனது வாகன எரிபொருள் நிலையம் அமைத்துள்ளார் அந்த நண்பர்.  வாழ்நாள் இலட்சியம், பத்து வருட காத்திருப்பு மற்றும் முயற்சி நன்றாகவே பலன் கொடுத்தது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் தூரதேசத்தில், வேறு மாநிலத்தில் அல்லது வெளிநாட்டினரை மேற்கோள் கட்ட வேண்டாம் நம்மைச் சுற்றியும் வெற்றி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பொறாமையுடன் பார்ப்பதை விட்டு அதற்குப் பின் உள்ள உழைப்பைப் பார்த்தால் போதும் நமக்குத் தேவையான பாடம் ஏதாவது ஒன்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். நான் கற்றுக்கொண்ட பாடம் "மூளையைக் கசக்கு".


Image: Thanks,Google 

குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.



- காளிகபாலி